Friday 13 August 2010

கைத்தொலைபேசி - அந்தரங்கத்தை அபகரிக்கும் கருவி



கைத்தொலைபேசி எப்பொழுதும் எனது சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது. என்னை நான் தீர்மானித்துக் கொள்ள முடியாதபடிக்கு கைத்தொலைபேசியின் தாக்கம் என்னைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை நான் வெறுக்கிறேன்.

அவசரமாக காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது கைத்தொலைபேசியில் கூப்பிட்டு ‘வேலைக்கு வா’ என்கிறார்கள்.

உண்மையில் கைத்தொலைபேசிகள்தான் ஒரு மனிதனை, அவனது வாழ்வைத் தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக ஆகிவிட்டது பெரும் துன்பமான விடயம்தான்.

தொண்ணூறுகளில் இலங்கையில் கைத்தொலைபேசி பாவனை பரவ ஆரம்பித்த காலத்தில் நான் அக்குறணையில் இருந்தேன். கண்டியில் ஒரு கைத்தொலைபேசிக் கடை திறந்தார்கள். ஒரு பெரிய செங்கல் நீள அகலத்தில் கைத்தொலைபேசிகளை அலங்கரித்து வைத்திருந்தார்கள் கடையில். நானும் போய் ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது அதனை வாங்க வேண்டிய தேவையோ அதற்கான பணமோ அல்லது மாதாமாதம் கட்டும் பணமோ என்னிடம் இருக்கவில்லை.

விதவிதமான கைத்தொலைபேசிகளைக் கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.

அக்குறணையில் இருக்கும் பொழுது ஹமீத் ஹாஜியார்தான் கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிவதைக் கண்டிருக்கிறேன். அவர் அங்கு பணக்காரராக இருந்தார். கைத்தொலைபேசி கையில் வைத்திருப்பது பெருமைக்குரிய விசயமாக இருந்த காலம் 1990கள்.

ஆனால் ஹமீத் ஹாஜியார் பணக்காரராக இருந்தாலும் பெருமை விரும்பாதவர். நல்ல மனிதர். தனது வியாபாரத் தேவைக்காக கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிந்தவர்.

அதனை லேஞ்சியால் சுற்றி மறைத்துத்தான் அந்தப் பெரிய கைத்தொலைபேசியைக் கொண்டு திரிந்தார்.

பிறகு அக்குறணையில் நான் பார்த்த இரண்டாவது கைத்தொலைபேசி ஒரு நகைக் கடைக்காரரின் மகன் சின்னப் பெடியன், அவரும் பணக்காரன் என்பதனால் தகப்பனிடம் கேட்டு வாங்கிக் கையில் கொண்டு திரிவார். அவருக்கு அப்போது அது தேவையில்லாத ஒன்று. ஆனால் அதனைக் கையில் வைத்திருந்தால் பெருமை தானே, அதற்குத்தான்.

பொலிஸ்காரர் கையில் வைத்திருக்கும் ‘வோக்கி டோக்கி’ போலத்தான் அந்தக்காலத்து கைத்தொலைபேசி இருந்தது.

அக்குறணையில் நான் பார்த்த மூன்றாவது கைத்தொலைபேசி ஒரு மௌலவி வைத்திருந்தார்.

அதற்கு பிறகு கைத்தொலைபேசிகள் வந்து குவிய ஆரம்பித்தன.

ஆனால் அக்குறணையில் இருந்து ஹொலன்ட் வந்து லண்டன் வரும்வரை கைத்தொலைபேசியை நான் பாவிக்கவே இல்லை. அதற்கான தேவையும் எனக்கு ஏற்படவில்லை.

இந்தப் பதினைந்து வருடத்தில் கைத்தொலைபேசி உருமாறி உருமாறி இன்று ‘டச் ஸ்கிறீன்’வரைக்கும் போய் ‘ஐ போன்’ என்கின்ற உயர் தொழில்நுட்பங்களைச் சுமந்து நிற்கின்ற ஒரு விசயமாக மாறி விட்டது.

இப்பொழுது என்னிடம் இருக்கும் கைத்தொலைபேசியில் ஸ்கைப் வசதி இருக்கிறது. உலகத்தில் எங்குள்ளவரோடும் இலவசமாக வீடியோ உரையாடல் நடத்தலாம்.

இதுதான் தொல்லை என்கிறேன். அண்மையில் எழுத்தாளர் கருணாகரமூர்த்தி ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்திருந்தார். அவர் தனது வாழ்நாளில் கைத்தொலைபேசி வைத்திருக்காத மனிதர். கைத்தொலைபேசியை ஒரு வேண்டாத பொருளாகவே சொல்கிறார்.

தன்னை அது கட்டுப்படுத்துவது விருப்பமில்லை என்கிறார். அவர் 20 வருடமாக வாடகைக்கார் ஓட்டுனராக ஜெர்மனியில் இருக்கிறார். கைத்தொலைபேசி தனது சிந்தனையில் குறுக்கிட அவர் விரும்புவதே இல்லை என்கிறார்.

இங்கு லண்டனில் எனக்குத் தெரிந்த இரண்டு சட்டத்தரணிகள் இருக்கின்றனர். அவர்கள் கைத்தொலைபேசி வைத்திருப்பதே இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், அது நேரத்தைக் கொன்றுவிடும் என்பதுதான். அலுவலகத்தில் தொலைபேசி இருக்கிறது. வீட்டில் தொலைபேசி இருக்கிறது. பிறகு என்னத்துக்கு கைத்தொலைபேசி என்பது அவர்கள் இருவரினதும் கொள்கை.

இங்கே லண்டனில் கைத்தொலைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மூன்று பொயின்ஸ் றைவிங் லைசன்ஸில் இருந்து பறித்து விடுவார்கள். அதோடு 60 பவுண்ட் அபராதமும் விதிப்பார்கள். ஆபத்தான முறையில் வாகனத்தை கைத்தொலைபேசி பேசிக்கொண்டு ஓட்டினால் சிறையில் கூட போடும் அதிகாரம் பொலிஸுக்கு உண்டு.

கைத்தொலைபேசி எப்பொழுதும் பிரச்சினைகளை அள்ளிக் கொண்டு வரும் ஒரு சாதனமாகவே இருக்கிறது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று இத்தாலியில் இருக்கிறது. புதிதாகத் திருமணம் முடித்தவர்கள்.

ஆனால் பெடியனுக்கு சிலோன் முழுக்கப் பெண்கள் தொடர்பு இருக்கிறது. பெண்களை கவருவதில் அவன் விண்ணன். ‘எல்லாம் விட்டாச்சு’ என்று சொல்லித்தான் ஒரு பெண்ணைக் காதலித்து கலியாணம் முடித்தவர். ஆனால் கைத்தொலைபேசி கையில் இருக்கும் வரை பெண்கள் தொடர்பு எப்படி இல்லாமல் போகும். அவருக்கு சிலோனில் இருந்து ஒரே எஸ்.எம்.எஸ். வந்து கொண்டிருக்கும். எல்லாம் காதலிக்கிறேன் வகை எஸ்.எம்.எஸ்.கள்தான். புதிதாகக் கலியாணம் முடித்த பெண்மணி அழுது குளறி டிவோஸ் வரைக்கும் போய் இப்பொழுது ஒருவாறாகச் சேர்ந்து வாழுகிறார்கள். குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சாதனமாகவே கைத்தொலைபேசி இருக்கிறது பார்த்தீர்களா?

அதுமட்டுமல்ல, உலகில் அதிகமான விபத்துகளும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் கைத்தொலைபேசியினால் ஏற்படுகின்றன.

குடும்பங்கள் குலைந்து போவதற்கும் கைத்தொலைபேசிகளே பல இடங்களில் காரணமாக அமைகின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் எங்கு போனாலும் வீடியோ ஃபோனில் தான் பேச வேண்டும் என்று மனைவி கட்டளை போட்டிருக்கிறார். அப்பொழுதுதான் கணவன் எங்கு இருக்கிறார் என்று இடத்தைப் பார்க்க முடியுமாம். மனிதர்கள் மத்தியில் நம்பிக்கையீனம், அக்கறையின்மை இவற்றைச் சுமந்து கொண்டு கைத்தொலைபேசிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.

இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் விமானங்களில் வைத்து கைத்தொலைபேசிகள் பேசலாம்.

கைத்தொலைபேசிகள் எமது அந்தரங்கத்தை தோலுரித்துக் கொண்டு போகும் ஒன்றாகவே இருக்கின்றன.

இன்ரநெட்டில் கொட்டிக்கிடக்கின்ற செக்ஸ் வீடியோக்கள் அனேகமாக கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் அதிகம்.

நண்பர்கள் நண்பிகள் என்று மது பார்ட்டில்களில் கலந்துகொண்டு விட்டு இளம் பெண்கள் ஆண்களின் அந்தரங்கக் காட்சிகளைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து விட்டு யு டியூப், பேஸ்புக் என்று எந்த அனுமதியுமில்லாமல் உலகத்துக்கு காண்பித்து விடும் பெரும் அபாயம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கள்ள உறவுகளைக் கைத்தொலைபேசியில் படம்பிடித்து விட்டுப் பணம் கேட்டு மிரட்டும் பெரும் கொள்ளையும் செல்போன் மூலம்தான் நடக்கிறது.

எங்கு நின்றாலும் யாராவது ஒருவரின் அல்லது பலரின் தொலைபேசி உரையாடல்கள் எமது காதுக்குள் விழுந்தவண்ணம்தான் இருக்கும்.

கைத்தொலைபேசி இல்லாவிட்டால் மற்றவர்களின் அந்தரங்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும்.

கடந்த வியாழக்கிழமை மதியப்பொழுது ஒன்றில் நான் விரும்பாவிட்டாலும் என்னைச் சுற்றி நடந்த கைத்தொலைபேசி உரையாடல்களைப் பாருங்கள்.

1. அவரின் மனைவி கொழும்புக்கு போய் விட்டார். மகளோடு அங்கு போனவருக்கு டெங்கு காய்ச்சல் பிடித்துவிட்டது. அது மகளுக்குத் தொற்றுமா என்று மனைவி கேட்கிறார்.

மகள் எதற்கெடுத்தாலும் முகத்தில் அடிக்கிறா. ஒருவயது பேர்த்டேயைக் கொழும்பில் கொண்டாடுவோமா என்று மனைவி கேட்கிறார். அந்தப் புதிய மனைவிக்கு இவர் கைத்தொலைபேசியில் கொஞ்சுகிறார். முத்தம் கொடுக்கிறார்.

2. அந்தப் பெண்மணியின் காணி நல்லூரில் இருக்கிறது. அதை விற்கிறதா அல்லது வீடுகட்டி வாடகைக்குக் கொடுக்கிறதா என்று தனது கணவனோடு மிகவும் சீரியஸாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.

3. இங்கு லண்டனில் அகதி அந்தஸ்து கிடைத்து மூன்று வருடமாகிவிட்டது அவருக்கு. அவர் சிலோனில் இருக்கும் மனைவியை இங்கு கூப்பிடுவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார் அது றிஜக்ட் ஆகி விட்டது. பிறகு அப்பீல் பண்ணி முடிவுக்குக் காத்திருக்கிறார். மனைவி சிலோனில் இருந்து அழுது வடிகிறது.

இவர் இமிக்கிறேஸன் விவகாரங்களைச் சொல்லி அந்தப் பெண்ணின் கண்ணீரைக் கைத் தொலைபேசியினூடே துடைக்கிறார். அப்பீல் பண்ணியும் விசா கிடைக்காமல் விட்டால் லண்டனில் இருக்கக் கூடாது. என்னிடம் வந்து விட வேண்டும் என்று மனைவி சொல்வதைக் கேட்டு அப்செட் ஆகி தொலைபேசியில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்.

4. தமிழ்நாட்டில் உள்ள காதலன் ‘உப்பிடியே லண்டனில் இருந்தால் நீ அங்கேயே கிட’ என்று திட்டியிருப்பான் போல. பொலுபொலென்று கண்ணீர் கொட்டுகிறது அந்தப் பெண்ணுக்கு. நான் கண்டும் காணாதது மாதிரி போக நிர்ப்பந்திக்கப்படுகிறேன். காதலனுக்கு மெதுவாகப் பெண் ஏதோ தேற்றுகிற மாதிரி சொல்கிறாள்.

5. கணவன் செத்துப் போனதுக்கு அந்தப் பெண்ணுக்கு கைத்தொலைபேசியில் ஆறுதல் சொல்கிறார்கள். அவள் அழுது வடிகிறாள்.

6. 2011இல் விசா கிடைத்து விடுமா என்று லோயரிடம் ஒரு அகதிப் பெண்மணி கேட்டு மனம் சலித்துக் கொள்கிறாள்.

7. இளம்பெண் ஒருத்தி தனது காதலனுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

இது என்னைச் சுற்றி நடந்த ஒரு மணிநேர கைத்தொலைபேசி உரையாடல்கள். எனக்குத் தேவையில்லாத இவ்வளவையும் நான் என்னை மீறி ஏன் கிரகிக்க வேண்டும். என்னை இவை கிரகிக்க நிர்பந்தப்படுத்துகின்றன.

எனக்குச் சம்பந்தமில்லாதவர்கள் என்னை நெருக்குகிறார்கள். உண்மையில் தங்களது அந்தரங்கங்களை யாருக்கும் சொல்ல யாரும் விரும்புவதில்லை. ஆனால் கைத் தொலைபேசி வாயிலாக எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து கொள்கிறோம்.

என்னைச் சுற்றி எனது அலுவலகத்தில் நடந்த இந்த ஏழு உரையாடல்கள் மூலமாக அந்த ஏழு பேரின் அந்தரங்கமான விடயங்களை நான் எந்தத் தேவையுமில்லாமல் அறிந்து கொள்கிறேன்.

மனைவியின் டெங்கு காய்ச்சல், நல்லூர்காணி, மனைவியின் விசா, காதலியின் கண்ணீர், செத்துப்போன கணவன், அகதிப் பெண், கொஞ்சும் காதலி. இவை என்னோடு சம்பந்தப்படாத அவர்களின் அந்தரங்கங்கள் எனக்குள் வந்து விழுந்திருக்கின்றன. கைத்தொலைபேசி இல்லாமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது. கைத்தொலைபேசி உணர்வுகளை மறைத்து சுற்றம் சூழ உள்ள நிலைமைகளைக் குருடாக்கி விடுகிறது. கைத்தொலைபேசியில் பேசும்பொழுது சுற்றி என்ன நடக்கிறது என்பதனை நாம் மறந்து விடுகிறோம்.

செல்போனில் காதலிக்காகப் பாட்டுப் பாடுகிறோம், முத்தம் கொடுக்கிறோம், மனைவியை ஏசுகிறோம், கணவனைக் கண்காணிக்கிறோம், காதலனை கண்டு பிடிக்கிறோம்.

எல்லாம் கைத்தொலைபேசி காட்டிய விந்தைதான்.

அந்தரங்கம் இப்படிக் காற்றில் போவதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. கைத் தொலைபேசியில் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் முகம் தெரியவேண்டியது என்ற அசௌகரியம் இல்லாமலே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு இனிமையான குரல் போதும் உணர்வுகளை எல்லாம் பகிர்வதற்கு என்னும் நிலைமை வந்து விட்டது.

இங்கு லண்டனில் கைத்தொலைபேசியில் செக்ஸ் உரையாடல்களைத் தமிழில் செய்வதற்குக் கூட தொலைபேசிகள் வந்திருக்கின்றன என்றால் பாருங்களேன்.

சுற்றியுள்ளவர்களைக் கவனிக்காமல் எதையும் பேசுவதற்கு ஒரு அசட்டுத் துணிச்சலைக் கைத் தொலைபேசி கொடுத்திருக்கிறது.

பக்கத்தில் உள்ளவர்கள் பேசிப் பேசியே என்னைத் துன்புறுத்துகின்றனர். நான் படுக்கும்போது எப்பொழுதும் கைத்தொலைபேசியை அமைதியாக்கி விட்டுத்தான் தூங்குவேன். எனது நித்திரையைக் குலைப்பதற்கென்றே பலர் திரிகிறார்கள். அவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. என்னைக் கஸ்டப்படுத்தவென்றே கைத்தொலைபேசியைக் கொண்டு சிலர் அலைகிறார்கள். நான் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படுபவன். பேசுவது குறைந்தால் பிரச்சினைகளும் குறையும்.

உண்மையில் கைத்தொலைபேசியை வைத்திருக்கும்படி எனது வேலையிடம் வற்புறுத்துவதனால் மட்டுமே அதனை வைத்திருக்கிறேன்.

ஆனால் எப்பொழுதும் எனது கைத்தொலைபேசியைத் தூர எறிந்து விட்டு ஒரு சுதந்திரமானவனாக, என்னை நான் மற்றவரின் தொந்தரவு இல்லாமல் வாழும் நாளை மட்டுமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கிறேன். எனக்கு மொபைல் போன் வேண்டாம்.

Tuesday 10 August 2010

கவிதை



நிதர்சனம்

************

பூட்டோடு வரும்
எவரையும் நிராகரிக்கிறேன்
ஒரு நெருக்குதலையும் சேர்த்து
ஒரு கொலை அல்லது மிரட்டல் அல்லது துப்பாக்கி
எல்லாவற்றையும் மூடி விடும்
என்பது பற்றிய கனவுக்குள் இன்னும்
நான் புதைந்து விடுவதாக இல்லை
ஒரு கண்ணிமைப்புக்குள்
எல்லாம் முடிந்தது என்றுவிட்டு
புறம் தள்ள மனம் ஒப்புதில்லை
ஒரு சக்கரத்தின் இறுக்கத்தில்
மன இழையோடு ஓடும்
வரிகளை அதட்ட மொட்டையாய் சொல்ல
மனம் ஒப்புதில்லை
அந்த திணிப்பு ஒரு கொலை

அது உயிரின் வரிகள் இதயத்தின் ஒழுக்கு
எனக்கான உரிமை என் உணர்வு
எனது எல்லாமே எனக்கானவை

ஒரு கொலைகாட்டி ஒரு பயம் காட்டி
என்னை அச்சுறுத்த உனக்கு யார் உரிமை தந்தது ?
நான் எப்பொழுதும் நானேதான்
அது உன் கண்ணாடியிலும்
முகத்திலும்

Wednesday 4 August 2010

அம்மம்மா


அம்மம்மா எனது அன்புக்குரியவர். அவவின் அன்பு அளவுகடந்தது. அம்மம்மாவின் பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மாவின் முதுகின் இடது பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு அளவில் இருக்கும்.
அம்மம்மா பாவாடைகட்டி குளிக்கும் போதும் குறுக்கை கட்டிக் கொண்டிருக்கும் போதும் அது வெளியில் தெரிந்து வேடிக்கை காட்டும் “விடு.... சும்மா அங்காலை போ... விடு” என்று கலைத்தாலும் கைகளால் மெதுவாக அந்தப் பாலுண்ணியை விரல்களால் நசிப்பதிலும் அதனை
மெதுவாக உறுட்டுவதிலும் நான் அடையும் மகிழ்ச்சியே தனி. சில நேரம் பாலுண்ணியை வாயில் வைத்து “பப்பா” குடிப்பேன் அம்மம்மா ஏசுவா திட்டுவா ஆனால் எனக்கு பாலுண்ணி என்றால் தனி ஆகர்ஷிப்பு. அம்மம்மாவில் இருப்பதனால் அதிலும் எனக்கு தனிப்பிரியம்.
தங்கச்சியிலும் பார்க்க அம்மம்மா என்னோடு தான் சரியான விருப்பம். புளியமரத்தடிக் கடைக்கு போனாலும் ஒட்டுசுட்டான் பக்கம் போனாலும் கள்ளத் தீனி வாங்கி வருவா. அம்மம்மா எப்பொழுதும் சேலைகட்டி இருப்பா. சேலை முந்தானையை முன்பக்கமாக மடியாக்கி அந்த மடியுக்குள்ளை பிஸ்கட், ரொபி, றோஸ்பாண், பணிஸ், சிறிய சொக்லட் என்று கட்டிக்கொண்டு வந்து தருவா. அம்மம்மா எங்காவது பயணம் போய்விட்டு வந்தாவென்றால் வீட்டு ஜிம்மிக்கு நாக்கால் தண்ணிவடிகிறமாதிரி எனக்கும் வாயில் தண்ணி ஊறும். அம்மம்மாவின் மடிக்குள்ளை ஏதாவது கிடக்கும். அம்மம்மாவின் சேலை நூல் சேலையாக இருக்கும். அந்தச் சேலையின் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத ஒரு விசயம் அம்மம்மா காலை அகட்டி நின்று கொண்டு மூத்திரம் பெய்வது.
“மனிதி” என்று தான் அம்மய்யா அம்மம்மாவை கூப்பிடுவார். செருமல் சத்தம் தான் அவர்கள் இருவருக்கும் அழைப்பு மொழியாக இருக்கும். அம்மம்மாவை ஏதாவது தேவைக்கு ஒரு செருமல். அம்மம்மாவுக்கு விளங்கும் அம்மய்யா என்ன சைக்கினை செய்கிறார் என்று.
விறகெடுக்க ஒவ்வொரு நாளும் பின்னேரம் அம்மம்மாவோடு போவேன். அலகரை க பக்கம் நல்ல
வீர விறகு இருக்கு. பல கதைகளை அம்மம்மா எனக்குச் சொல்லுவா. சின்ன வண்டில் எனக்கு விருப்பம். சைக்கிள் “றிம்” ஐ தடிக்குள் செலுத்தி வண்டில் ஓடுவோம் டயர் வண்டில், நொங்கு, கோம்பை வண்டில், குரும்பட்டிதேர் ஈக்கிள் குத்தி அழகாய் இருக்கும்.
எங்கள் இருவரின் கதைகள், சில நேரம் பழைய கதைகளாக இருக்கும். அம்மாவின் காதல் விவகாரம். ஐயா முரண்டு பிடித்து அம்மாவை கலியாணம் செய்து கொண்டது என்று எங்களது கதை காடு வரை நீளும்.
மாமா எப்பொழுதும் பொல்லாதவர் போலவே எங்களுக்கு காண்பிக்கப்பட்டார். குடிப்பவர் மாமியோடு உறவு மேம்பாடு இல்லாதவர். ஓட்டுத் தொழிற்சாலையில் வேலை செய்பவர் என்று மட்டுமே எங்களுக்குத் தெரியும். அம்மாவையும் ஐயாவையும் பிரிப்பதற்கு செய்வினை செய்தவர் முகமாத்து செய்வினை அது. அம்மம்மாவை எப்பொழுதும் ஒரு எதிரியைப் போலவே அம்மா பார்ப்பா. இருவருக்கும் திரிவெடி மாதிரி ஏதாவது ஒரு உரசலில் பத்திவிடும். அந்த சண்டையில் அர்த்தம் இருக்காது பழைய கோபம் ஒன்றின் தொடர்ச்சியாய் இருக்கும் பழைய கோபம் என்றால் சில நேரம் இருபது வருடப் பழையதாக இருக்கும்.
அம்மம்மா சுருட்டுப்பத்துவா. என்ன சுருட்டு என்று “பிரான்ட்” இல்லை. கிடைக்கிறதை பத்துவா. அம்மய்யா மண்டான் சுருட்டுத்தான் பத்துவார். கோடாப்போட்ட சுருட்டு நல்லாய் இருக்கும் என்று அம்மய்யாவும் முன் வீட்டு செல்லையாஅண்ணரும் கதைப்பார்கள். ஒரேயடியாக அம்மம்மா சுருட்டைப் பத்தி முடிக்கமாட்டா. அம்மய்யாவும் அப்படித்தான். குறையன் சுருட்டை வீட்டு வளையில் செருகி வைத்திருப்பா. கால் வாசி சுருட்டை வைத்து விட்டு அம்மம்மா தேடுவா. சுருட்டு காணாமல் போயிருக்கும்.
குறையன் சுருட்டுகளை சேர்த்து எடுத்து வயல் கொட்டிலுக்கு கொண்டுபோய் நூல் கழட்டி மறைத்து பத்துவதே தனி சுகம். சுருட்டின் காரம் சுகமாக இருக்கும். சிகரட் குடிப்பதில் கொள்ளை ஆசை. அதன் மணம் மிகவும் பிடிக்கும். அந்தக்காலத்தில் பீக்கொக் சிகரட் வாங்கி களவாகப் குடித்தோம். கண்டால் அம்மா தோலை உரிப்பா. காவிளாய் வேரினால் அடித்தால் அடையாளம் அடுத்த நாளுக்கும் இருக்கும்.
நெடுங்கேணிப் பக்கம் இருந்துவரும் பஸ் ஒன்று எங்களது வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. வேலங்குளம் போன அம்மம்மா ஒரு பெரிய சாக்கு கட்டோடு வந்தா. பஸ்ஸில் இருந்து இறக்கும் போது கடகட என்று சத்தம் என்னவாக இருக்கும். சாறக்கட்டோடு ஓடிவந்து சாக்கை தூக்கிக் கொண்டு வந்து அவிழ்த்துப் பார்த்தால் அதுக்குள் ஒரு குட்டி வண்டிலின் பாகங்கள். உடனடியாக எடுத்து பொருத்தினால் வண்டில் தயார். உச்சபட்ச மகிழ்ச்சி எனக்கு. ஆசை ஆசையாய் ஒரு வண்டில் கிடைத்துவிட்டது.
வருத்தம் வந்தால் அம்மம்மா. காச்சல் வந்தால் அம்மம்மா அம்மம்மாவைக் கட்டிப்பிடித்தபடி படுத்தால் தான் உடம்பு உழைவு எடுபடும். எனக்காக அம்மம்மா வாழ்ந்திருக்கிறா என் சுக துக்கங்களில் எல்லாம் அவ பங்கெடுத்திருக்கிறா.
அம்மாவுக்கும் அம்மம்மாவுக்குமான உறவு திடீர் திடீரென்று அறுபடும் பின்னர் கொஞ்ச நாட்களில் ஒட்டுப்படும்.
ஒரு சண்டையில் அம்மா அழுதா. கேவிக்கேவி அழுதா. சண்டை பெரிதாகி விட்டிருந்தது. பொறுமை, விட்டுக்கொடுப்பு, உதவியாய் இருத்தல் என்ற ஒன்றுக்குமே இருவருக்கும் அர்த்தம் தெரியாது. அம்மாவும் சாறிதான் கட்டுவா. அன்று சாறி முந்தானையை முகத்தில் மூடி கேவிக் கேவி அழுதா.
ஒட்டுசுட்டானுக்கு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி சொன்னா அம்மா. பக்கத்து வீட்டு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போனேன். மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்கு போய் கனநேரம் அம்மா அழுதா. ஆனால் மாணிக்கப்பிள்ளையார் அவர்களுடைய சண்டையை நிறுத்தி விடவில்லை. சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.
புளியங்குளத்தில் கொலனி காணிகளை அரசாங்கம் கொடுக்கும் போது ஐந்து ஏக்கர் குளத்துத் தரையை தெரிவு செய்தவர் அம்மய்யா. அது ஒரு ஊர் ஆவதற்கு அந்தக்கிராம மக்களின் அர்ப்பணிப்பு பெரியது. காணிகளை காடு வெட்டி களனியாக்கினார்கள். அந்தக்காணிக்கு அம்மய்யாவின் பங்களிப்புக்கு சமமாக அம்மம்மாவின் பங்கும் இருந்திருக்கிறது. “நீ வேர்ப்பகுதியை தூக்கினால் மரத்தின்ரை நுனியை நான் தூக்கி பாடுபட்டிருக்கிறன்” அம்மம்மா ஒரு முறை சண்டையில் அம்மய்யாவுக்குச் சொன்னா.
புளியங்குளத்தில அம்மம்மாவும் நானும் குளிக்கப்போவோம். குளிக்கப்போனால் என் கவனம் முழுக்க பாலுண்ணியில் தான் இருக்கும் “முதலை வந்திடும் ஆழத்துக்குப்போகாதை, சேறு, வழுக்கும்” என்று அம்மம்மா எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பா.
அம்மம்மாவை யாரோ கிண்டி விட்டிருக்கினம். காணி அம்மய்யாவுக்கு பின்பு உரிமை அம்மம்மாவுக்கு அதுக்கு பின்னுரிமை அம்மாவுக்கு அதுக்கு பின்னுரிமை தங்கச்சிக்கு அம்மம்மா சொன்னா “வயல்காணியிலை என்ரை பங்கை பிரிக்கப்போறன்”.
அம்மய்யா கண்ணை மூடினாப்பிறகு ஏற்பட்ட குடும்பப் பிளவு இது தான். காணியைத் தானே கேக்கிறா குடுக்கிறது தானே. அம்மம்மா மிக நல்லவா.
அம்மய்யா சாக முதல் ஒரு நாள் அம்மம்மா சொன்னவா “கொம்மாக்கு தெரியாம காணி உறுதியை ஒருக்கா ரங்குப்பெட்டிக்கை இருந்து எடுத்துக் கொண்டு வந்து தா” என்று அம்மா முள்ளியவளைக்குப் போனாப் பிறகு காணி உறுதியைக் கொண்டு வந்து குடுத்தேன். தெரிஞ்சால் தோலுரிபட்டிருக்கும். அம்மம்மா சொன்னா செய்தேன். அடி விழுந்தாலும் பரவாயில்லை.
ரங்குப்பெட்டி தான் வீட்டில் பாதுகாப்பான பொக்கிஷம் மற்றது அம்மய்யாவின் ஒரு மரப்பெட்டி. அதற்குள் மூன்று நாலுமுழம் மூன்று சால்வை. காசுப்பை, ஒரு வேட்டி என்பன இருக்கும். அம்மய்யா எளிமையாளவர். அழகாக ஒரு குடும்பி கட்டியிருப்பார். எனக்கு பள்ளிக்கூடத்தில் பட்டப்பெயர் அம்மய்யா.
ரங்குப்பெட்டிக்குள் கலியாண வீட்டுக்கு உடுக்கும் சேலைகள் எங்களது நல்ல உடுப்புகள் இருக்கும் ரங்குப்பெட்டிக்குள்யாரும் கை வைப்பது கிடையாது. ஆனால் அதனைத் திறக்க எனக்கு ஆசை அம்மா அதற்குள் பூச்சி முட்டைகளைப் போட்டு வைத்திருப்பா. பூச்சி முட்டை வாசம் எனக்கு விருப்பம் ரங்குப் பெட்டிக்குள் இருந்து ஒரு சேலை எழுத்துக் கட்டினால் அம்மாவின் சேலையை அடிக்கடி கொஞ்சியபடி இருப்பேன்.
அம்மம்மாவுக்கு ஒரு அக்கா இருந்தா அவ வலு துப்பரவு. காலையில் எழும்பி குளித்து முழுகி வெள்ளைச் சேலை கட்டி பார்ப்பதற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருந்தா. அவவோடு நான் பெரிதாக ஒட்டவில்லை. முருகன் பக்தை அவ.
அம்மம்மாவின் உறவினர்கள் வேலங்குளத்திலும் முன்ளியவளையிலுமே அதிகமாக இருந்தார்கள். அம்மம்மாவுக்கென்று பொழுதுபோக்கு ஒன்றுமில்லை. காலையில் எழும்புவது முகம் கழுவுவது பின்னர் தேத்தண்ணி, சாப்பாடு , சாப்பாடு செய்வதில் அம்மாவுக்கு உதவி செய்வா மீன் வெட்வது, பயித்தங்காய் உடைப்பது வாழைக்காய் சீவுதல், முருங்கைக்காய் வெட்டுதல். வெங்காயம் உரித்தல், வெள்ளைப்பூடு உரித்தல் இப்படியான உதவிகள் தான் செய்வா.
அம்மாவோடு கோபம் என்றால் அதுவும் இல்லை. முன் வீட்டு வள்ளியக்காவோடு கதை. தங்கராசா வீட்டுக்குப் போவது என்பதோடு பொழுது போய்விடும். அத்தோடு நானும் அம்மம்மாவும் பின்னேரம் விறகு எடுக்கப்போவோம்.
காலையில் அம்மம்மா பழங்கறியோடு பழஞ்சோறு தின்னுவா. தண்ணி ஊத்தி வைச்ச சோறு முத்துப்போல இருக்கும். காலையில் சுட சுட அவிச்ச புட்டோ இடியப்பமோ இருக்கும் தின்னச் சொன்னாலும் தின்னாமல் பழஞ்சோறை தானே போட்டு சாப்பிட்டு விட்டு அன்று முழுக்க புறுபுறுத்தபடி திரிவா. “நான் ஒருத்தி இருக்கிறன் பழஞ்சோறு தின்னுறதுக்கு போட்டு வடிக்கிறது எனக்கு என்னவினை பழசு தின்னுறதுக்கு என்று அன்று முழு நாளும் பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி இருக்கும்.
அம்மம்மாவுக்கு ஆசை கடைசி காலத்தில் தங்களின் உறவுக்கார ஆக்கள் யாருக்காச்சும் என்னை கலியாணம் செய்து குடுக்க வேண்டும் என்று. அதற்காக ஒரு மச்சாள் முறை உள்ள ஒரு பிள்ளையையும் குறிப்பாக காட்டினா.
ஓசைப்படாமல் எத்தனை கனவுகள் அம்மம்மாவின் மனதில் இருந்திருக்கும். எத்தனை விடயங்களை சொல்ல முடியாமல் தத்தளித்திருப்பா. சொன்னால் நிறைவேறுமா என்ன ஏக்கங்கள் இருந்திருக்கும். அம்மய்யா சாகும் போதும் அம்மம்மா உயிருடன் இருந்தவா. ஒரு இரவு படுத்த அம்மம்மா எழுந்திருக்கவேயில்லை என்று தங்கச்சி சொன்னாள்.
free counters

நண்பர்கள் கூட்டம்