Saturday 27 June 2009

பறை மேளக்கலைஞன்

மேளம் உண்மையில் எனக்கு மிகவும் விருப்பமான இசைக்கருவி. இப்பொழுதெல்லாம் எமது கிராமத்தில் பறை மேளக்கலைஞர்கள் தங்கள் கலையை விட்டு விட்டு வேறு உத்தியோகத்துக்கு சென்று விட்டனர். காரணம் தமிழ் சமூகத்தில் அந்த கலைஞர்களை மதிக்காததும் உதா சீனப்படுத்தியதுமாகும். வெளிநாடுகளில் அவர்கள் தங்களது சாதியை சொல்லாமல் வாழக்கூடிய நல்ல தருணம் இருப்பதனால்அவர்கள் வெளிநாடுகளில் மதிப்போடு வாழ்கிறார்கள். இருந்தும் சாதிபார்க்கிற முட்டாள்கள் சாதியை தேடி அலைகிறார்கள். எனக்கு பல அனுபவங்கள் உண்டு எனது பெயரை அனஸ் என்று பலர் விளங்குவதில்லை அனக்ஸ் என்றுதான் நினைக்கிறார்கள். அதனால் கொக்கி போடுவார்கள் நீங்கள் எந்தப்பக்கம் அதற்கு அர்த்தம் ''நீ என்ன சாதி'' என்பதுதான். ''முட்டாள்களே முஸ்லிமில் சாதி இல்லையடா'' என்று மனதுக்குள் திட்டுவேன்.பரம்பரை தொழில் என்பது இப்பொழுது இல்லாமலாகி வருகிறது. வோஸிங் மெசின் வந்து விட்ட பிறகு கட்டாடி தொழில் குறைந்து விட்டது கொழும்பு போன்ற இடங்களில்.

இந்த பறையை இங்கே லண்டன் ஹவுன்ஸ்லோவில் கண்ட நான் உடனே எனது போனில் றைக்கோட் செய்தேன்.

14 வயதிருக்கும் கருவேலன்கண்டல் சிவாவின் அப்பா தம்பர் நாய் கடித்து செத்துப்போனார். அந்தக்காலத்தில் சிவாவின் அண்ணன்தான் வெளிநாட்டில் இருந்தவர். அதனால் தம்பர் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பபியவர் என்ற புகழோடு கருவேலன்கண்டலில் இருந்தவர். அவருக்கு நாய் கடித்து விட்டது. அவரின் பிரேதம் வலு சங்கையாக வீட்டின் முன் விறாந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சிவாவின் நண்பர்கள் என்ற படியால் செத்த வீட்டுக்கு போனோம். அப்போ அப்பா செத்த கவலையில் சிவா அழுது கொண்டிருந்தான்.

வீட்டுக்கு போனபோது முற்றத்தில் இருந்த பறை மேளக்கலைஞர்கள் மேளம் அடித்து நாங்கள் வந்த சேதியை ஊருக்கு அறிவித்துவிட்டார்கள். வீட்டு கேற்றடிக்கு யார் போனாலும் மேளமடித்து ஊருக்கு சொல்லிவிடுவார்கள். அதில் இருந்த மூத்த பறை மேளகக்கலைஞனுக்கு வயது 40 இற்கும் மேல் நன்றாக கள்ளுக்குடித்திருந்தார். இல்லாவிட்டால் அடிப்பதற்கு சுருதி சேராதல்லவா.

அவர் வெறும் மேலோடு இருந்தார் அவரின் முலை பெரிதாக இருந்தது. எங்களோடு வந்த ஒருவன் சொல்லிவிட்டான் ''அவற்றை பாச்சியை பாரடா'' எண்டு சத்தமாக. அவர் மேளம் அடிக்கும் ஒவ்வொருமுறையும் பாச்சி குலுங்கி குலுங்கி கெம்பி கெம்பி எழும்பியது.

அழுது கொண்டிருந்த சிவாவையும் கூப்பிட்டு காட்டியாச்சு. அப்பா பிரேதமாக கிட்க்கும் போது கெக்கட்டம் போட்டு சிரிக்கிறான் சிவா. அவனுக்கும் 14 வயதுதான் அப்பொழுது. பெரியவர்கள் எல்லோரும் சிவாவை கோபமாக பார்க்கிறார்கள். தேப்பன் பிரேதமாக கிடக்க மகன் அழாமல் சிரிக்கிறானே என்று. யாரிட்டை போய் சொல்லுறது அவரின் பப்பா ஆடுகிறது என்று அதுதான் அவன் சிரிக்கிறான் என்று.

பிரேதம் சுடுகாட்டுக்கு போகும் வரைக்கும் அவன் சிரித்துக்கொண்டுதான்இருந்தான்.

இங்கு ரவுஸர் உடுத்த பறைக்கலைஞன் மேளமடித்து பிச்சையெடுக்கிறார் மேளமும் நன்றாக அடிக்கிறார் நான் 20 பென்ஸ் போட்டேன்.

Monday 22 June 2009

லண்டன் சிற்றி

லண்டனில் என்ன விசேசம் என்று 1996 ஆம் ஆண்டு அக்குறணையில் இருந்து லண்டனுக்கு வந்து திரும்பி வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ''அங்கு இரட்டை தட்டு பஸ் இருக்கு தம்பி'' என்று. இரட்டைத்தட்டு பஸ் என்ன இங்கு கண்டியிலும் ஒன்று இருக்குதானே அது கடுகண்ணாவை கடுகஸ் தோட்டை போறது. ஆனாலும் கண்டியில் இருக்கும் 4 வருடத்தில் ஒருமுறைதானும் ஏறவில்லை அதில். ஏனெனில் பயம். போய் வந்தவர்கள் சொன்னார்கள். மேல் கூரை ஆடுகிறது என்று கண்டியில் உள்ள சிங்கள றைவர்களை நம்பி நான் அதில் ஒருநாளும் ஏறவில்லை. அது மகியாவ பாலத்துக்கு கீழால் போகும் போது பார்த்திருக்கிறேன் கூரை இடித்து விடும் என்கின்ற பயம் எனக்கு பார்க்கும் போதெல்லாம் வரும். 1958 இல் இரட்டைதட்டு பஸ் இலங்கைக்கு வந்து விட்டது. 122 ஆம் நம்பர் போட்டுக்கொண்டு மகரகம அவிசாவளைதான் முதல் பயணம்.

ஆனால் கண்டியில் அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கும் ஒரே ஒரு இரட்டைத்தட்டு பஸ் அது.

பிறகு லண்டன் வந்தாப்பிறகு இரட்டைத்தட்டு பஸ்தான் எல்லாத்துக்கும் என்றாகி விட்டது. எல்லாம் புத்தம் புதிய பஸ்கள். கூரை விழும் என்ற பயம் கிஞ்சித்தும் இல்லை. அதில் ஏறி மேல் தட்டில் முன் சீற்றில் இருந்து போவது எனக்கு அலாதி விருப்பம். ஏதோ நான்தான் அதனை ஓட்டுவது போல இருக்கும்.(ஒரு முறை ஒரு மேம்பாலத்தால் திருப்பும் பொழுது கிங்ஸ்டனில் வைத்து பாலத்தில் இடித்துவிட கூரை தனியாக வந்து விட்டது)

குட்டி பிள்ளைகள் முன் சீற்றில் மேல்தட்டில் இருந்து டுர் டுர்...... என்று ஓட்டுங்கள். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

இரண்டு வருடத்துக்கு முந்தி லண்டனில் இருந்த டீசலில் ஓடும் இரட்டைதட்டு பழைய பஸ்களை முழுமையாக நிற்பாட்டி விட்டார்கள் சேவையில் இருந்து. அது பாதுகாப்பில்லையாம். கதவால் ஓடி ஏற முடியும். டீசல் புகை விடுகிறது. என்று சொல்லி நிற்பாட்டி போட்டார்கள்.இப்பொழுது எல்லாம் புதிய பஸ்கள் தான் வலு கலாதி. (இந்த வீடியோவையும் எனது மொபைல் போனில் இரட்டைத்தட்டு பஸ்ஸின் மேல் தட்டில் முன் சீட்டில் இருந்துதான் எடுத்தேன்)

லண்டன் சிற்றிக்குள்ளால் இரட்டைத்தட்டு பஸ்ஸில் பயணம் செய்வதே அழகான அனுபவம்தான்.

இப்பொழுதும் யாரும் என்னை கேட்டால் லண்டனில் என்ன இருக்கிறது என்று.

எனது பதில் இரட்டைத்தட்டு பஸ் தான்.

Thursday 11 June 2009

முரண் கவிதை


அவளுக்கு ஒரு போர்வை கொடுத்தேன்.

எனது தெருவால் சில நேரம் நிர்வாணமாய்ப்போவாள்
குத்திட்ட நேர் நோக்கில்
அவளைப்பற்றிய எல்லாவற்றையும்என்னுள் இறக்கியபடிக்கு
கூந்தல் குண்டிவரை நீண்டிருக்கும்
தூசியும் மண்ணும்தான் அவை வாரி முடித்தவை.

கறுத்த உடல்
இன்னும் சரியாத முலைகள்
வெறும் மேலோடு திரிவாள்.

அவள் ஒரு சீமாட்டி என்றும்
திருமணம் முடித்தவளென்றும்
அம்மம்மா சொல்வா
அவளிடம் கேட்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை

ஆனால் ஏன் நிர்வாணமாய்த்திரிகிறாய்

ஆண்கள் அவளைக்கடந்து செல்கிறார்கள்
உணர்வற்றுயோனியின் ஊத்தையும் மணமும் வெறுத்து
அவள் நடக்கிறாள்

அம்மம்மா சொன்னா
அவள் கணவன் அவளுக்கு சூனியம் செய்தவன்

ஆண்குறி பலவீனப்பட்டவன்கள்சூனியம் செய்பவர்கள்.
அவள் அழகானவளாம்அவனும் அழகானவனாம்
அவனுக்கு செய்ய இயலாதாம்
அவள் இன்னொருவனுடன் செய்தாளாம்
அவன் சூனியம் செய்தானாம்….

எனது போர்வையை அவள் தூர எறிந்து விட்டாள்.

Wednesday 10 June 2009

'கெபாப்' எனும் எனக்கு எட்டிய கனி

எனக்கு இன்னும் மனதில் அச்சொட்டாய் இந்த விடயம் பதிந்து போய்க்கிடக்கிறது. 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் டெல்லிக்கு போயிருந்த பொழுது கெபாப் கடைகள் எங்கள் ஊரில் இருக்கும் தேத்தண்ணி கடைகள் மாதிரி றோட்டு றோட்டாய் இருந்தன. ஆனால் இலங்கையில் இருந்து போன எனக்கு அது ஒரு புதினமான சாப்பாடு ஆனால் அதனை வாங்கி சாப்பிட என்னிடம் ஒரு 10 ரூபா பணம் இருக்கவில்லை. என்னை கூட்டிக்கொண்டு போனவர்களிடமும் கேட்க எனக்கு மனமில்லை. இருந்த ஒரு மாதமும் அந்த கடைக்கு கிட்டபோய் நின்று கொண்டு அதன் வாசத்தை ஏக்கத்தோடு நுகர்ந்து விட்டு திரும்பியிருந்தேன்.

ஆனால் நான் லண்டன் வந்த பிறகு பார்த்தால் றோட்டு முழுக்க கெபாப் கடைகள்தானே. எனக்கு வலு சந்தோசம் இங்கு நாவூற மனதார சாப்பிட்டேன்.

இப்பொழுது குறைத்து விட்டேன். ஜி.பி சொல்லியிருக்கிறார் கொழுப்புணவை குறைக்க சொல்லி அதுதான்.

Tuesday 9 June 2009

ஒரு கள்வரின் நிலை

ஹவுன்ஸ்லோ அஸ்டா சுப்பர் மார்க்கட்டில் 40 பவுண் பெறுமதியான சாப்பாட்டு சாமான்களை களவெடுத்த ஒரு ஆபிரிக்க காரருக்கு செக்கியூரிட்டிகள் அமுக்கி பிடித்து அடிக்கிறார்கள்.

Sunday 7 June 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே அவதானிக்கபடுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். எந்த கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.


எனது வாள்

கூர்வாளொன்றுஎப்போதும் என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்துகம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்பிரியம் காட்டுவதாய்
நினைத்து குரல்வளையை கீறிவிடும்
ரோஸாக்களைக் கொய்துகைப்பிடியில்
சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்கூர்வாளொன்று…

இது அவருடைய கவிதை இது போதும் அவரை அறிவதற்கு

Thursday 4 June 2009

ஆவி பிடித்தல் என்பது

அஞ்சலா ஜெகநாதனின் மூலிகை கூடம்

free counters

நண்பர்கள் கூட்டம்