Friday 13 August 2010

கைத்தொலைபேசி - அந்தரங்கத்தை அபகரிக்கும் கருவி



கைத்தொலைபேசி எப்பொழுதும் எனது சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது. என்னை நான் தீர்மானித்துக் கொள்ள முடியாதபடிக்கு கைத்தொலைபேசியின் தாக்கம் என்னைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை நான் வெறுக்கிறேன்.

அவசரமாக காரில் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது கைத்தொலைபேசியில் கூப்பிட்டு ‘வேலைக்கு வா’ என்கிறார்கள்.

உண்மையில் கைத்தொலைபேசிகள்தான் ஒரு மனிதனை, அவனது வாழ்வைத் தீர்மானிக்கின்ற ஒரு விடயமாக ஆகிவிட்டது பெரும் துன்பமான விடயம்தான்.

தொண்ணூறுகளில் இலங்கையில் கைத்தொலைபேசி பாவனை பரவ ஆரம்பித்த காலத்தில் நான் அக்குறணையில் இருந்தேன். கண்டியில் ஒரு கைத்தொலைபேசிக் கடை திறந்தார்கள். ஒரு பெரிய செங்கல் நீள அகலத்தில் கைத்தொலைபேசிகளை அலங்கரித்து வைத்திருந்தார்கள் கடையில். நானும் போய் ஆவலுடன் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது அதனை வாங்க வேண்டிய தேவையோ அதற்கான பணமோ அல்லது மாதாமாதம் கட்டும் பணமோ என்னிடம் இருக்கவில்லை.

விதவிதமான கைத்தொலைபேசிகளைக் கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.

அக்குறணையில் இருக்கும் பொழுது ஹமீத் ஹாஜியார்தான் கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிவதைக் கண்டிருக்கிறேன். அவர் அங்கு பணக்காரராக இருந்தார். கைத்தொலைபேசி கையில் வைத்திருப்பது பெருமைக்குரிய விசயமாக இருந்த காலம் 1990கள்.

ஆனால் ஹமீத் ஹாஜியார் பணக்காரராக இருந்தாலும் பெருமை விரும்பாதவர். நல்ல மனிதர். தனது வியாபாரத் தேவைக்காக கைத்தொலைபேசியைக் கையில் கொண்டு திரிந்தவர்.

அதனை லேஞ்சியால் சுற்றி மறைத்துத்தான் அந்தப் பெரிய கைத்தொலைபேசியைக் கொண்டு திரிந்தார்.

பிறகு அக்குறணையில் நான் பார்த்த இரண்டாவது கைத்தொலைபேசி ஒரு நகைக் கடைக்காரரின் மகன் சின்னப் பெடியன், அவரும் பணக்காரன் என்பதனால் தகப்பனிடம் கேட்டு வாங்கிக் கையில் கொண்டு திரிவார். அவருக்கு அப்போது அது தேவையில்லாத ஒன்று. ஆனால் அதனைக் கையில் வைத்திருந்தால் பெருமை தானே, அதற்குத்தான்.

பொலிஸ்காரர் கையில் வைத்திருக்கும் ‘வோக்கி டோக்கி’ போலத்தான் அந்தக்காலத்து கைத்தொலைபேசி இருந்தது.

அக்குறணையில் நான் பார்த்த மூன்றாவது கைத்தொலைபேசி ஒரு மௌலவி வைத்திருந்தார்.

அதற்கு பிறகு கைத்தொலைபேசிகள் வந்து குவிய ஆரம்பித்தன.

ஆனால் அக்குறணையில் இருந்து ஹொலன்ட் வந்து லண்டன் வரும்வரை கைத்தொலைபேசியை நான் பாவிக்கவே இல்லை. அதற்கான தேவையும் எனக்கு ஏற்படவில்லை.

இந்தப் பதினைந்து வருடத்தில் கைத்தொலைபேசி உருமாறி உருமாறி இன்று ‘டச் ஸ்கிறீன்’வரைக்கும் போய் ‘ஐ போன்’ என்கின்ற உயர் தொழில்நுட்பங்களைச் சுமந்து நிற்கின்ற ஒரு விசயமாக மாறி விட்டது.

இப்பொழுது என்னிடம் இருக்கும் கைத்தொலைபேசியில் ஸ்கைப் வசதி இருக்கிறது. உலகத்தில் எங்குள்ளவரோடும் இலவசமாக வீடியோ உரையாடல் நடத்தலாம்.

இதுதான் தொல்லை என்கிறேன். அண்மையில் எழுத்தாளர் கருணாகரமூர்த்தி ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்திருந்தார். அவர் தனது வாழ்நாளில் கைத்தொலைபேசி வைத்திருக்காத மனிதர். கைத்தொலைபேசியை ஒரு வேண்டாத பொருளாகவே சொல்கிறார்.

தன்னை அது கட்டுப்படுத்துவது விருப்பமில்லை என்கிறார். அவர் 20 வருடமாக வாடகைக்கார் ஓட்டுனராக ஜெர்மனியில் இருக்கிறார். கைத்தொலைபேசி தனது சிந்தனையில் குறுக்கிட அவர் விரும்புவதே இல்லை என்கிறார்.

இங்கு லண்டனில் எனக்குத் தெரிந்த இரண்டு சட்டத்தரணிகள் இருக்கின்றனர். அவர்கள் கைத்தொலைபேசி வைத்திருப்பதே இல்லை. அவர்கள் சொல்லும் காரணம், அது நேரத்தைக் கொன்றுவிடும் என்பதுதான். அலுவலகத்தில் தொலைபேசி இருக்கிறது. வீட்டில் தொலைபேசி இருக்கிறது. பிறகு என்னத்துக்கு கைத்தொலைபேசி என்பது அவர்கள் இருவரினதும் கொள்கை.

இங்கே லண்டனில் கைத்தொலைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மூன்று பொயின்ஸ் றைவிங் லைசன்ஸில் இருந்து பறித்து விடுவார்கள். அதோடு 60 பவுண்ட் அபராதமும் விதிப்பார்கள். ஆபத்தான முறையில் வாகனத்தை கைத்தொலைபேசி பேசிக்கொண்டு ஓட்டினால் சிறையில் கூட போடும் அதிகாரம் பொலிஸுக்கு உண்டு.

கைத்தொலைபேசி எப்பொழுதும் பிரச்சினைகளை அள்ளிக் கொண்டு வரும் ஒரு சாதனமாகவே இருக்கிறது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று இத்தாலியில் இருக்கிறது. புதிதாகத் திருமணம் முடித்தவர்கள்.

ஆனால் பெடியனுக்கு சிலோன் முழுக்கப் பெண்கள் தொடர்பு இருக்கிறது. பெண்களை கவருவதில் அவன் விண்ணன். ‘எல்லாம் விட்டாச்சு’ என்று சொல்லித்தான் ஒரு பெண்ணைக் காதலித்து கலியாணம் முடித்தவர். ஆனால் கைத்தொலைபேசி கையில் இருக்கும் வரை பெண்கள் தொடர்பு எப்படி இல்லாமல் போகும். அவருக்கு சிலோனில் இருந்து ஒரே எஸ்.எம்.எஸ். வந்து கொண்டிருக்கும். எல்லாம் காதலிக்கிறேன் வகை எஸ்.எம்.எஸ்.கள்தான். புதிதாகக் கலியாணம் முடித்த பெண்மணி அழுது குளறி டிவோஸ் வரைக்கும் போய் இப்பொழுது ஒருவாறாகச் சேர்ந்து வாழுகிறார்கள். குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சாதனமாகவே கைத்தொலைபேசி இருக்கிறது பார்த்தீர்களா?

அதுமட்டுமல்ல, உலகில் அதிகமான விபத்துகளும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் கைத்தொலைபேசியினால் ஏற்படுகின்றன.

குடும்பங்கள் குலைந்து போவதற்கும் கைத்தொலைபேசிகளே பல இடங்களில் காரணமாக அமைகின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் எங்கு போனாலும் வீடியோ ஃபோனில் தான் பேச வேண்டும் என்று மனைவி கட்டளை போட்டிருக்கிறார். அப்பொழுதுதான் கணவன் எங்கு இருக்கிறார் என்று இடத்தைப் பார்க்க முடியுமாம். மனிதர்கள் மத்தியில் நம்பிக்கையீனம், அக்கறையின்மை இவற்றைச் சுமந்து கொண்டு கைத்தொலைபேசிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.

இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் விமானங்களில் வைத்து கைத்தொலைபேசிகள் பேசலாம்.

கைத்தொலைபேசிகள் எமது அந்தரங்கத்தை தோலுரித்துக் கொண்டு போகும் ஒன்றாகவே இருக்கின்றன.

இன்ரநெட்டில் கொட்டிக்கிடக்கின்ற செக்ஸ் வீடியோக்கள் அனேகமாக கைத் தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள்தான் அதிகம்.

நண்பர்கள் நண்பிகள் என்று மது பார்ட்டில்களில் கலந்துகொண்டு விட்டு இளம் பெண்கள் ஆண்களின் அந்தரங்கக் காட்சிகளைக் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து விட்டு யு டியூப், பேஸ்புக் என்று எந்த அனுமதியுமில்லாமல் உலகத்துக்கு காண்பித்து விடும் பெரும் அபாயம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கள்ள உறவுகளைக் கைத்தொலைபேசியில் படம்பிடித்து விட்டுப் பணம் கேட்டு மிரட்டும் பெரும் கொள்ளையும் செல்போன் மூலம்தான் நடக்கிறது.

எங்கு நின்றாலும் யாராவது ஒருவரின் அல்லது பலரின் தொலைபேசி உரையாடல்கள் எமது காதுக்குள் விழுந்தவண்ணம்தான் இருக்கும்.

கைத்தொலைபேசி இல்லாவிட்டால் மற்றவர்களின் அந்தரங்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும்.

கடந்த வியாழக்கிழமை மதியப்பொழுது ஒன்றில் நான் விரும்பாவிட்டாலும் என்னைச் சுற்றி நடந்த கைத்தொலைபேசி உரையாடல்களைப் பாருங்கள்.

1. அவரின் மனைவி கொழும்புக்கு போய் விட்டார். மகளோடு அங்கு போனவருக்கு டெங்கு காய்ச்சல் பிடித்துவிட்டது. அது மகளுக்குத் தொற்றுமா என்று மனைவி கேட்கிறார்.

மகள் எதற்கெடுத்தாலும் முகத்தில் அடிக்கிறா. ஒருவயது பேர்த்டேயைக் கொழும்பில் கொண்டாடுவோமா என்று மனைவி கேட்கிறார். அந்தப் புதிய மனைவிக்கு இவர் கைத்தொலைபேசியில் கொஞ்சுகிறார். முத்தம் கொடுக்கிறார்.

2. அந்தப் பெண்மணியின் காணி நல்லூரில் இருக்கிறது. அதை விற்கிறதா அல்லது வீடுகட்டி வாடகைக்குக் கொடுக்கிறதா என்று தனது கணவனோடு மிகவும் சீரியஸாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.

3. இங்கு லண்டனில் அகதி அந்தஸ்து கிடைத்து மூன்று வருடமாகிவிட்டது அவருக்கு. அவர் சிலோனில் இருக்கும் மனைவியை இங்கு கூப்பிடுவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார் அது றிஜக்ட் ஆகி விட்டது. பிறகு அப்பீல் பண்ணி முடிவுக்குக் காத்திருக்கிறார். மனைவி சிலோனில் இருந்து அழுது வடிகிறது.

இவர் இமிக்கிறேஸன் விவகாரங்களைச் சொல்லி அந்தப் பெண்ணின் கண்ணீரைக் கைத் தொலைபேசியினூடே துடைக்கிறார். அப்பீல் பண்ணியும் விசா கிடைக்காமல் விட்டால் லண்டனில் இருக்கக் கூடாது. என்னிடம் வந்து விட வேண்டும் என்று மனைவி சொல்வதைக் கேட்டு அப்செட் ஆகி தொலைபேசியில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்.

4. தமிழ்நாட்டில் உள்ள காதலன் ‘உப்பிடியே லண்டனில் இருந்தால் நீ அங்கேயே கிட’ என்று திட்டியிருப்பான் போல. பொலுபொலென்று கண்ணீர் கொட்டுகிறது அந்தப் பெண்ணுக்கு. நான் கண்டும் காணாதது மாதிரி போக நிர்ப்பந்திக்கப்படுகிறேன். காதலனுக்கு மெதுவாகப் பெண் ஏதோ தேற்றுகிற மாதிரி சொல்கிறாள்.

5. கணவன் செத்துப் போனதுக்கு அந்தப் பெண்ணுக்கு கைத்தொலைபேசியில் ஆறுதல் சொல்கிறார்கள். அவள் அழுது வடிகிறாள்.

6. 2011இல் விசா கிடைத்து விடுமா என்று லோயரிடம் ஒரு அகதிப் பெண்மணி கேட்டு மனம் சலித்துக் கொள்கிறாள்.

7. இளம்பெண் ஒருத்தி தனது காதலனுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

இது என்னைச் சுற்றி நடந்த ஒரு மணிநேர கைத்தொலைபேசி உரையாடல்கள். எனக்குத் தேவையில்லாத இவ்வளவையும் நான் என்னை மீறி ஏன் கிரகிக்க வேண்டும். என்னை இவை கிரகிக்க நிர்பந்தப்படுத்துகின்றன.

எனக்குச் சம்பந்தமில்லாதவர்கள் என்னை நெருக்குகிறார்கள். உண்மையில் தங்களது அந்தரங்கங்களை யாருக்கும் சொல்ல யாரும் விரும்புவதில்லை. ஆனால் கைத் தொலைபேசி வாயிலாக எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து கொள்கிறோம்.

என்னைச் சுற்றி எனது அலுவலகத்தில் நடந்த இந்த ஏழு உரையாடல்கள் மூலமாக அந்த ஏழு பேரின் அந்தரங்கமான விடயங்களை நான் எந்தத் தேவையுமில்லாமல் அறிந்து கொள்கிறேன்.

மனைவியின் டெங்கு காய்ச்சல், நல்லூர்காணி, மனைவியின் விசா, காதலியின் கண்ணீர், செத்துப்போன கணவன், அகதிப் பெண், கொஞ்சும் காதலி. இவை என்னோடு சம்பந்தப்படாத அவர்களின் அந்தரங்கங்கள் எனக்குள் வந்து விழுந்திருக்கின்றன. கைத்தொலைபேசி இல்லாமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது. கைத்தொலைபேசி உணர்வுகளை மறைத்து சுற்றம் சூழ உள்ள நிலைமைகளைக் குருடாக்கி விடுகிறது. கைத்தொலைபேசியில் பேசும்பொழுது சுற்றி என்ன நடக்கிறது என்பதனை நாம் மறந்து விடுகிறோம்.

செல்போனில் காதலிக்காகப் பாட்டுப் பாடுகிறோம், முத்தம் கொடுக்கிறோம், மனைவியை ஏசுகிறோம், கணவனைக் கண்காணிக்கிறோம், காதலனை கண்டு பிடிக்கிறோம்.

எல்லாம் கைத்தொலைபேசி காட்டிய விந்தைதான்.

அந்தரங்கம் இப்படிக் காற்றில் போவதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. கைத் தொலைபேசியில் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் முகம் தெரியவேண்டியது என்ற அசௌகரியம் இல்லாமலே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு இனிமையான குரல் போதும் உணர்வுகளை எல்லாம் பகிர்வதற்கு என்னும் நிலைமை வந்து விட்டது.

இங்கு லண்டனில் கைத்தொலைபேசியில் செக்ஸ் உரையாடல்களைத் தமிழில் செய்வதற்குக் கூட தொலைபேசிகள் வந்திருக்கின்றன என்றால் பாருங்களேன்.

சுற்றியுள்ளவர்களைக் கவனிக்காமல் எதையும் பேசுவதற்கு ஒரு அசட்டுத் துணிச்சலைக் கைத் தொலைபேசி கொடுத்திருக்கிறது.

பக்கத்தில் உள்ளவர்கள் பேசிப் பேசியே என்னைத் துன்புறுத்துகின்றனர். நான் படுக்கும்போது எப்பொழுதும் கைத்தொலைபேசியை அமைதியாக்கி விட்டுத்தான் தூங்குவேன். எனது நித்திரையைக் குலைப்பதற்கென்றே பலர் திரிகிறார்கள். அவர்களுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. என்னைக் கஸ்டப்படுத்தவென்றே கைத்தொலைபேசியைக் கொண்டு சிலர் அலைகிறார்கள். நான் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிச் செயல்படுபவன். பேசுவது குறைந்தால் பிரச்சினைகளும் குறையும்.

உண்மையில் கைத்தொலைபேசியை வைத்திருக்கும்படி எனது வேலையிடம் வற்புறுத்துவதனால் மட்டுமே அதனை வைத்திருக்கிறேன்.

ஆனால் எப்பொழுதும் எனது கைத்தொலைபேசியைத் தூர எறிந்து விட்டு ஒரு சுதந்திரமானவனாக, என்னை நான் மற்றவரின் தொந்தரவு இல்லாமல் வாழும் நாளை மட்டுமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து நிற்கிறேன். எனக்கு மொபைல் போன் வேண்டாம்.

8 comments:

Anonymous said...

********
கைத்தொலைபேசி இல்லாவிட்டால் மற்றவர்களின் அந்தரங்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும்.
********
நண்பரே, அந்தரங்கம் விற்பனைக்கு!! அதோடு மட்டுமின்றி தன் அந்தரங்கம் பிறருக்குத் தெரியட்டம் என்கிற சிறுபிள்ளைத்தனமும் தெரிகிறது.

அதை விடுங்க. சென்னை மின்சார ரயிலில் அடிபடுவோரில் கைபேசி பேசியவாரே அடிபடுவோர் இருக்கிறார்கள் என்று ரயில்வேயில் சுவரொட்டி அடித்து ஒட்டுகிறார்கள். என்ன சொல்ல!

Muhammad Ismail .H, PHD., said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பின் இளைய அப்துல்லாஹ்,

கைத்தொலைபேசி என்பதை விட செல்லிடபேசி என்பது தான் அதற்கு பொருத்தமான அர்த்தம் தரும். செல்லும் இடமெல்லாம் பேச உதவும் கருவி 'செல்லிடபேசி'. என்ன சரியா ? தவிர உங்கள் பதிவிலுள்ள இந்த இடுகையில் செல்லிடபேசியை பற்றி எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே முன் வைத்துள்ளீர்கள். மிகச்சரியாக சொல்லப்போனால் அவையனைத்தும் இந்த செல்லிடபேசியால் விளைந்தவை அல்ல. அதை சரிவர கையாளத்
தெரியாமல் கையாண்ட நபர்களால் வந்த வினை தான். மாறாக செல்லிட பேசியால் ஒரு போதும் தனித்தியங்கி நமக்கு எந்த ஒரு கெடுதலையும் தர
இயலாது. காரணம் அது நமது கட்டளைப்படி இயங்கும் கருவி. தன்னிச்சையாக இயங்குவது அல்ல. ஆக அல் குர்-ஆன் வசனப்படி "ஒன்றினால் நமக்கு நன்மையே, தீமையே விளைந்தால் அதற்கு நமது கரங்கள் தான் பொறுப்பு".


எந்த ஒரு பொருளையும் எதற்காக நாம் உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் நம்முடைய வெற்றி இருக்கிறது. உதாரணத்திற்கு கத்தியைக் கொண்டு ஆதமின் மக்களான மனிதர்களாகிய நமக்கு ஆப்பிளை அறுத்துக் கொடுத்து பசியாற்றலாம். மாற்றமாக நம்முடைய ஆதமின் ஆப்பிளை (Adam's Apple = தொண்டை குரல்வளை) அறுத்து கொலையும் செய்யலாம். இதில் கத்தியின் குறைபாடு என எதுவும் இல்லை. அதன் வேலை எதையும் அறுப்பதே! மாறாக அதை கையாண்டவரின் நோக்கமான எதை அறுப்பது என்பதே நிறைவேற்றப்படுகிறது. ஒரு மனிதர் கத்தியால் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டால் எதை குறைசொல்வீர்கள் ? அறுக்க பயன்படுத்திய கத்தியையா ? அல்லது அதை தவறான நோக்கத்துடன் கையாண்ட நபரையா? சற்று யோசியுங்களேன் !!!.


1. முதலாவதாக இதே செல்லிடபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் நாங்கள் இயற்கை பேரழிவான ஆழிப்பேரலை தாக்குதலில் இருந்து
அனைத்து உயிர்/உடமைகளை காக்க இரவு பகலாக போராடிக்கொண்டிருக்கிறோம். அது பற்றி இங்கே கூறினால் நான் ஓர் விளம்பரப் பிரியன், இதை வைத்துதான் பணம் வசூலித்து அதில் உயிர் வாழ்கிறேன் என ஒரு சில அவதூறு ஆறுமுகங்கள் குற்றம் சாட்டுவார்கள். ஆகவே நீங்களே
உங்கள் இலங்கையின் திருகோணமலையை சார்ந்த மருத்துவர். த.ஜீவராஜ் அவர்களின் பதிவில் மீள் இடுகையான "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" ஏன் அந்த தினத்தில் மறு படி இடப்பட்டது என அவரிடமே விசாரித்து அறியவும். ஆகையால் ஒன்றைப்பற்றி மற்றவர்களிடம் கேட்பதை விட அதன் பயனாளியிடம் கேட்டால் அதன் முழு விவரமும் விளங்கும்.

to be cont...

Muhammad Ismail .H, PHD., said...

2. இரண்டவாதாக உங்களின் அந்தரங்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் கருவியாக கருதப்படும் இதே செல்லிடபேசியையே அதை பாதுகாக்கவும் பயன்படுத்தலாம். அதை பயன்படுத்தும் முறையை இப்போது விளக்கமாக பார்க்கலாம். இதைப்பற்றி நண்பர் பி.கே.பி தனது "ஆயிரத்தோராவது பிரச்சனை" இடுகையில் கூறி உள்ளார். தவிர இது தனது ஒரே வாழ்க்கைத் துணையான மனைவியுடன் மட்டும் வெளியே தங்கும் நபர்களுக்காக கூறப்பட்டது. :-)
எதையும் தவறாக உபயோகப்படுத்துபவர்களைப் பற்றி என்னிடம் கருத்தில்லை.நான் முன்னர் சொன்னபடி அவரவர் செயலுக்கு அவரவர்களே பொறுப்பாளி. மற்றவர்கள் அல்ல.


சில தங்குமிடங்களில் உள்ள அறைகளில் அதில் தங்குபவர்களுக்கு தெரியாமல், இருளில் வாழ்க்கைத்துணையுடன் நடத்திய அவர்களின் அந்தரங்க நடவடிக்கைகள் படம் பிடிக்கப்பட்டு அவை இணையத்தில் உலாவர நீங்கள் பார்த்திருக்கலாம். உண்மையில் அந்த அசைபடங்கள் நமது கண்ணுக்குத்
தெரியாத அகச்சிவப்புக்கதிர்களால் இயங்கும் ஒளிப்படக் கருவியால் (இன்ஃப்ரா ரெட் காமிரா /Infra Red Camera) எடுக்கப்பட்டவைகள். மனித
கண்களால் புற ஊதாக்கதிருக்கும் (அல்ட்ரா வயலட் / Ultra Voilet), அகச்சிவப்புக் கதிருக்கும் இடைப்பட்ட நிறமாலையின் அடிப்படை ஏழு
நிறத்தையே காண இயலும். இது தான் மனிதர்களின் பார்வை சக்தியின் வரையறை. அது போல கேட்கும் சக்தியானது 20 Hz to 20 KHz என
நமக்கு வரையறை உண்டு. இதைப் பற்றியும் விவரமாக அறிய நண்பர் பி.கே.பியின் "கேட்காத சப்தங்கள்"
இடுகைக்கு செல்லுங்கள்.


ஆனால் உங்களிடம் ஒளிப்படக்கருவி இணைந்த செல்லிடபேசி (கேமிரா செல்போன் /Camera Cell Phone) இருந்தால் போதுமானது. நீங்கள்
தங்கும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், நமது கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக்கதிர்களால் இயங்கும் ஒளிப்படக்கருவியை நீங்கள்
எளிதாக கண்டுபிடிக்கலாம். நீங்கள் செய்யவேண்டியது இது தான். தங்கப்போகும் அறையில் நுழைந்து அங்குள்ள விளக்குகளை அணைத்து விட்டு, படுக்கையில் படுத்து உங்களின் கையில் உள்ள ஒளிப்படக்கருவி இணைந்த செல்லிடபேசியை இயக்கி, படம் எடுக்கும் நிலையில் வைத்துக்கொண்டு
அந்த அறையை அங்குலம் அங்குலமாக பொறுமையாக பார்க்கவும். கண்டிப்பாக உங்களின் ஒளிப்படக்கருவி இணைந்த செல்லிடபேசியின் திரையில்
காரிருளாக இருக்கும். கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒளி வருவதாக தெரிந்தால் அந்த இடத்தை நன்றாக சாதாரண விளக்கு வெளிச்சத்தில் சோதிக்கவும். காரணம் அங்கே அகச்சிவப்புக் கதிர்களால் இயங்கும் ஒளிப்படக்கருவி மறைத்து
வைக்கப்பட்டிருக்கலாம். அகச்சிவப்புக் கதிரினை மனித கண்ணால் காண இயலாது. ஆனால் ஒளிப்படக்கருவி இணைந்த செல்லிடபேசியின் திரை
வழியாக காண இயலும். தவிர இருளில் எதனையும் படமெடுக்க அகச்சிவப்புக் கதிரினை அதன் மீது பாய்ச்சுவதன் மூலமே அவற்றை படமெடுக்க இயலும். இதுதான் நடைமுறையில் உள்ள அறிவியல் வழிமுறை.


இதை உடனே சோதித்து பார்க்க ஆர்வமாக உள்ளதா? உங்களின் ஒளிப்படக்கருவி இணைந்த செல்லிடபேசியை, ஏதேனும் ஒன்றின்
தொலைக்கட்டுப்பாட்டு இயக்கியை (ரிமோட் கண்ட்ரோல்= Remote Control) கையிலெடுத்து அதன் பித்தானை அழுத்தி, அதே நேரத்தில் அதன் முகப்பு பகுதியில் உள்ள சிறிய LED விளக்கை ஒளிப்படக்கருவி இணைந்த செல்லிடபேசியை இயக்கி அதன் திரை வழியாக பார்க்கவும்.
ஆச்சரியப்பட்டு போவீர்கள். காரணம், நமது கண்ணுக்கு அதை இயக்கும் ஒன்றும் நடவாது போல தெரிந்த அந்த LED விளக்கானது செல்லிடபேசியை இயக்கி அதன் திரை வழியாக பார்க்க்கும் போது மின்னும். அது ஒளியை பாய்ச்சும். எங்களிடம் பழுது நீக்க வரும்
தொலைக்கட்டுப்பாட்டு இயக்கிகளையும் இப்படித்தான் சோதிப்போம். இந்த செயல் முறை விளக்கம் போதுமென்றே கருதுகிறேன். வசதி, தேவை
உள்ளவர்கள் இந்த "Mini Hidden Camera Detector" ஐ US $89.95 வாங்கலாம்.


to be cont ...

Muhammad Ismail .H, PHD., said...

3. மூன்றாவதாக இந்த செல்லிட பேசியால் இன்னொரு பலனும் உண்டு. அதை பற்றி அறிய மருத்துவர் துமிழின் பதிவான மருத்துவம் பேசுகிறது ! இல் உள்ள இடுகையான "உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்" பார்க்கவும். அதில் உள்ள எனது நீண்ண்ண்ட்ட பின்னூட்டத்தையும் பார்க்கவும். விவரம் புரியும்.

இங்கே அதை இட்டால் அளவு கூடிவிடும். தற்காலிக கருத்தடைக்கு காப்பர்-டி தான் சிறந்த ஒன்றாக இருந்தாலும் ஒரு தாமிர கம்பியை எப்படி கருப்பையில் வைக்க இயலும்? காலில் சிறிய முள் குத்தி அதன் சிறு பகுதி உள்ளிருந்தால் நமக்கு எப்படி வலிக்கிறது. அதே போல் மென்மையான கருப்பையில் எப்படி ஒரு அந்நியப் பொருளை நமது சுயநலத்திற்காக வைப்பது? அதனால் உதிரப்போக்கும், வலியும் அதிகமாக்கும் அபாயமும் உள்ளது. சொன்ன நம்புங்க ! நானும் பெண் ஈய வாதி தான் ! ஆதலால் தான் மேல் சொன்ன இந்த எளிய நடைமுறை.





குறிப்புகள் :-

1. இந்த பெரிய பின்னூட்டம் உங்களை தாக்கும் புண்ணூட்டம் அல்ல. மாறாக நிதர்சனத்தை அனைவருக்கும் விளங்கச் செய்வதற்காகவே எழுதப்பட்ட பின் ஊட்டம் தான். பொதுவாக மனிதர்கள் யாவரும் தமது தவறை உணர மறுக்கின்றனர். ஒரு செயலால் நன்மை விளைந்தால் அதற்கு
தான் காரணமில்லையென்றாலும் அது தன்னால் தான் விளைந்த ஒன்றென அதற்கு உரிமை கொண்டாடுகின்றனர். அதே சமயம் ஒரு செயலால் தீமை
விளைந்தால், அது தன்னால் ஏற்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது தனக்கு சம்மந்தமில்லையென அதன் உரிமையை மறுத்து விடுகின்றனர். இது மனித குணமல்ல, மாறாக ஷைத்தானுடைய குணமாகும். ஷைத்தான் தான் தவறிழைத்து விட்டு பழியை அடுத்தவர் மீது போடுவான். இவ்வூலக வாழ்வே இந்த சோதனையின் அடிப்படையில் அமைந்த ஒன்று தான்.


2. இந்த பின்னூட்டதையே யாரும் தமது விருப்பத்திற்கேற்ப மாற்றி தமது பதிவில் ஒர் இடுகையாக இட்டுக் கொள்ளலாம். அதற்கு என எந்த தடையுத்தரவோ, முன் அனுமதி பெறச்சொல்லி சிக்கலான காப்பிரைட், காப்பிலெப்ட், காப்பிமிடில், காப்பிடாப், காப்பிபாட்டம் என்ற
நடைமுறையும் கிடையாது. அந்த இடுகைகளில் எனது பெயர் குறிப்பிட்டாலும், குறிப்பிட படாவிட்டாலும் எனது நம்பிக்கையின் படி வல்ல இறைவனின் என்றும் அழியாத மாபெரும் தகவல் தளமான சித்திர குப்த ஏடு @ ஜீவ புத்தகம் @ ல்வ்ஹூல் மக்பூலில் எனது பெயர் இருக்கபோவதால் இது பற்றி கிஞ்சித்தும் கவலை கிடையாது. சில பள்ளிக்கூட பொடியர்களை போல டீச்சர் கிள்ளிட்டான், என் சிலேட்டை உடைச்சிட்டான் என அலறப்போவதும் இல்லை. :-)

3. இதற்கு மேலும் விரிவாக இங்கே பின்னூட்டமிட
கல்வெட்டு என்கிற பலூன்மாமா
மற்றும்
மருத்துவர்.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும். உங்களை நான் வெகுநேரமாக தேடிக்கொண்டிருக்கிறேன் !!!. தயவு செய்து உடனே மேடை ஏறவும். நிற்க இதற்கு மேல் இங்கே டைப்பி அண்ணன் உண்மை தமிழனுக்கு
போட்டியாக விரும்பவில்லை . ஆகையால் விடு ஜூட்ட்ட...


with care & love,

Muhammad Ismail .H, PHD.,
+91.94420.93300

இளைய அப்துல்லாஹ் said...
This comment has been removed by the author.
இளைய அப்துல்லாஹ் said...

மிக்க நன்றி அன்பரே

Shaifa Begum said...

யதார்த்தமான விசயங்கள் உங்கள் எழுத்துக்களோடு வருவதனால் ஒரு கணம் நின்று யோசிக்க வைக்கிறது... நீங்கள் சொன்னது விடயங்கள் எல்லாமே 100 வீதம் உண்மைதான்..தொலைபேசிக்குள் காதை வைத்தால் சுற்றுப்புறம் மறப்பென்பது உண்மையே..தலையே போனாலும் கவனச்சிதறல் இங்கு வராது..நம்பாட்டில் நம்ம கதையும் நாமும் தான்..எவ்வளவு பயங்கரமான ஒரு விசயம் என்பது..இதனைப்படித்தபின் தான் யோசிக்கவைத்ததது..கைத்தொலைபேசியின் எதிர்மறையான விளைவு பயங்கரமானதே!!!

”இது என்னைச் சுற்றி நடந்த ஒரு மணிநேர கைத்தொலைபேசி உரையாடல்கள். எனக்குத் தேவையில்லாத இவ்வளவையும் நான் என்னை மீறி ஏன் கிரகிக்க வேண்டும். என்னை இவை கிரகிக்க நிர்பந்தப்படுத்துகின்றன.எனக்குச் சம்பந்தமில்லாதவர்கள் என்னை நெருக்குகிறார்கள். உண்மையில் தங்களது அந்தரங்கங்களை யாருக்கும் சொல்ல யாரும் விரும்புவதில்லை. ஆனால் கைத் தொலைபேசி வாயிலாக எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து கொள்கிறோம்.”

உள்ளதை உள்ளபடியே இணைத்து எழுதவதனால் . உங்கள் எழுத்துக்கள்.. உணர்வுகளை உசுப்பி சிந்திக்க தூண்டுவதாக உஙடகளட எழுத்துக்கள் இருக்கின்றன்..Break கொடுக்காமல் தொடர்ந்த எழுதுங்கள்..

நன்றிகள்

இளைய அப்துல்லாஹ் said...

அன்பு நன்றி உங்களுக்கு

free counters

நண்பர்கள் கூட்டம்