Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, 20 December 2010

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விடயங்கள்



கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு,எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.

அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசி சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அந்த அன்ரிக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அந்த அன்ரி வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.

புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.

கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன்டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் “அன்ரி உங்களுக்கு என்ன வயது” என்று எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.

அந்த அன்ரி “நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41”.

மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு ,ளமை அந்த பெண்மணியிடம்.

இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் விடை இல்லை.

“ஸபாஷித ரத்ன பாண்டாகாரம்” என்ற புத்தகத்திலே ஒரு சமஸ்கிருத சுலோகம் ஒன்று வந்திருக்கிறது.

“ஆயுர் விருத்தம், க்ருவர சித்ரம், மந்த்ர மௌஷத மைதுனே தானம் மானாப மா நௌ ச நவ கோப்யானி காரவேத்” சரி இதன் தமிழாக்கம் இப்படி சொல்கிறது.

“தனது வயது, சொத்து, வீட்டில் நடந்த சண்டை, சிறந்த மந்திரம், நல்ல மருந்து, கணவன் மனைவியின் பிரியம், தானம், தனக்கேற்பட்ட புகழ், அவமானம் இந்த ஒன்பது விடயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது”

உண்மையில் மிக முக்கியமான சுலோகம் இது என்று படித்த பிறகு எனக்கு புரிந்தது .

என்னை எல்லோரும் எப்படி இளைமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.

வீட்டில் நல்ல மனைவி, சண்டை சச்சரவு இல்லை. நல்ல இரண்டு பிள்ளைகள் தொந்தரவு இல்லை. எனக்குப் பிடித்த வேலை, பச்சைத் தண்ணீர் குடிக்கிறேன். தினமும் கீரையை உணவில் மனைவி சமைத்துத் தருகிறது. நிறைய வாசிக்கிறேன். இவைகள் சில நேரம் காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

அத்தோடு எதனையும் போட்டு அலட்டிக் கொள்ளாத மனம் இருக்கிறது. இரத்த அழுத்தம் ஏறுவதற்கு விடமாட்டேன். இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். இலங்கையில் தெளிவத்தை யோசப் எப்ப பார்த்தாலும் அப்பிடியே இருக்கிறார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எப்பவும் உசாராக இருக்கிறார். மனம் வயதுக்கு முக்கிய காரணம் என்றுதான் நான் சொல்லுவேன்.

அடுத்தது உணவு, என்ன கிடைத்தாலும் வயிற்றினுள் தள்ளப்படாது. முஹமது நபிகளாரின் மொழி ஒன்று இருக்கிறது. “வயிற்றை மூன்றாக பிரியுங்கள் ஒரு பகுதி உணவுக்கு, அடுத்த பகுதி நீருக்கு, மற்ற பகுதியை வெறுமையாக வைத்திருங்கள்”. அப்பொழுது தான் உணவு செமிபாடு அடையும். இன்னொன்று பசிக்கும் போது உணவுத் தட்டில் உட்கார்ந்து பசியுடனேயே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விட வேண்டும். அர்த்தம் வயிற்றை நிரப்பாதீர்கள் என்பதுதான். அப்பொழுதுதான் சாகும் வரை உடல் இலகுவாக அழகாக இருக்கும். தண்ணீர் நிறையவே குடிக்க வேண்டும்.

சரி அந்த சுலோகம் சொல்லும் விடயம் வயதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது.

அந்த வீட்டுக்கு வந்த அன்ரி தனது வயதை சொல்லாமல் இருந்தால் அவவின் அழகான இளைமைத் தோற்றம் உண்மையில் ஆச்சரியப்படுத்திக் கொண்டு தான் இருந்திருக்கும்.

நடிகை ஸ்ரேயா விடம் ஒரு நிருபர் கேட்டார் “இவ்வளவு அழகுக்கு என்ன செய்கிறீர்கள்” என்று அவ சொன்னா தண்ணீர் குடிக்கிறேன்.

வீட்டில் நடந்த சண்டையை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்பது உண்மைதான்.

கணவன் மனைவி அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான சண்டையை வேறு யாருடனும் பகிர்ந்து கொண்டால் பெரும் சிக்கலில் முடிந்து விடும்.

இங்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த விடயம்தான் குடும்பங்கள் பிள்ளைகள் சீரழிய காரணமாகின்றன.

தமிழகத்தில் இருந்த ஒரு கணவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்களிடையே அரசல் புரசலான சண்டை இருந்து கொண்டிருந்தது. அதனை அவர்களால் தீர்த்து ஒற்றுமையாக முடியாமல் இருந்தது. அவர்களின் இந்த சண்டை தொடர்பாக லண்டனில் இருந்து தமிழகம் போன கணவனின் ஒரு நண்பரிடம் அந்த மனைவி சண்டையை சொல்லி அழுது கண்ணீர் விட்டிருக்கிறா.

அந்த பெண்மணியின் கண்ணீர் லண்டனில் இருந்து போனவருக்கு இரக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது கணவனுக்கு தெரியாமல் லண்டன் நண்பரை அடிக்கடி ஹோட்டல்களில் சந்திக்க அவர்களுக்கிடையான அன்னியோன்யம் அதிகமாகி விட்டது.

லண்டன்காரருக்கு இங்கு இரண்டு பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். அந்த அன்னியோன்யம் காதலாகி லண்டனுக்கு அவவை கூப்பிடுகின்ற அளவுக்கு விஸ்தாரமாகி விட்டது.

இங்கு மனைவிக்கு தெரிந்து அவவும் சன்னதம் ஆட குடும்பம் பிரிந்து விட்டது. இப்பொழுது இரண்டு குடும்பமும் பிரிந்து விட்டது. அவர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவரின் பிள்ளைகள் அவரை வெறுத்து விட்டன. அவரின் சொந்தக்காரர்கள் வெறுத்து விட்டார்கள். அவரின் அம்மா, அப்பா முகம் பார்ப்பதில்லை. பெரும் மன உளைச்சலோடு திரிகிறார். எனக்குத் தெரிந்தவர் அவர். சுலோகம் சொல்வது சரிதான்.

கணவன் மனைவியின் அன்பு, பாசம், பிரியம் என்பவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது என்று சுலோகம் சொல்கிறது.

கொழும்பில் எனக்குத் தெரிய நடந்தது. இரண்டு தோழிகள் சின்ன வயதில் இருந்து அவர்களை கண்டிருக்கிறேன் ஏதோ இரட்டையர்கள் போல இருப்பார்கள். கையில் பிடித்துக் கொண்டு தான் றோட்டில் போவார்கள். பேசிக் கொண்டார்கள் தாங்கள் கலியாணம் செய்தால் ஒரு ஆம்பிளையைத் தான் கலியாணம் செய்வோம் என்று. அவ்வளவு ஒட்டுதல்.

தோழிகளில் ஒருத்தி ஒருவரை காதலித்து திருமணம் செய்து விட்டாள். மற்றவள் நாள் போக இரண்டு தோழிகளும் மீண்டும் ஒட்டுதல் கூடி விட்டது. வீட்டுக்காரர்களுக்கும் ஒருவகையில் சந்தோசம். கலியாண நேரத்தில் ஒரு சின்ன மனத்தாங்கல் வந்து பிறகு ஒட்டி விட்டார்கள். ஆனால் ஆறு மாதங்கள் கடந்திருக்கும், தனது நண்பியின் கணவரை கொத்திக் கொண்டு மற்றவள் வெளிநாட்டுக்கு போய் விட்டாள். என்ன நடந்தது என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டது இதுதான்.

கணவன் தன்னோடு செய்யும் எல்லாவற்றையும் தனது தோழிக்கு ஒன்று விடாமல் சொல்லி வந்திருக்கிறாள் தோழி. மிக நல்ல ஆண் மகன் செக்ஸில் பெரும் திருப்தி செய்யக் கூடியவர் அவர் என்று கணவனைப்பற்றி தோழியிடம் சொல்ல சொல்ல அவளுக்கு நண்பியின் கணவன் மீது ஈர்ப்பு வந்துவிட்டது மேலெண்ணம் வர தோழியின் கணவரை தன் வசப்படுத்தி விட்டாள் நண்பி. சுலோகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதானே.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கே லண்டனில் இப்பொழுது பெரும் அல்லாட்டத்தில் கிடக்கிறது. லண்டனுக்கு வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. வேக் பேமிட்டில் இருக்கிறார்கள். எப்பொழுதும் வேக் பேமிட்டில் இருந்தால் கொம்பனிக்காரர்களுக்கு ஒருவித அடிமை சாசனம் போலத்தான் அது. கொம்பனி என்ன சொல்லிகிறதோ அதுக்கு தலையாட்ட வேண்டும். இல்லாவிடில் கொம்பனிக்கு உரிமை இருக்கிறது வேக் பேமிட்டை கான்சல் பண்ண. வேலையும் போய்விடும் விசாவும் அதோகதி.

அதுவும் தமிழ் முதலாளிமார் பாடு பெரும் பாடு. வேக் பேமிட்டில் இங்கு லண்டனுக்கு எடுத்து விட்டால் தங்களுக்கு கீழ் படிய வேண்டும் என்று நடப்புக் காட்டுவார்கள்; காட்டுகிறார்கள்.

நான் சொன்ன குடும்பத்துக்கு பிரான்ஸ், கனடா என்று அண்ணன் தம்பிமார் இருக்கினம். அவர்கள் தங்களது சகோதரத்துக்கு ஒரு வீடு வாங்க கொஞ்சக் காசு கொடுத்தார்கள். லண்டனில் வீடு வாக்குவது என்பது சாதாரணமான விடயம் இல்லை. டிப்போசிட் கட்ட வேண்டும். மாதா மாதம் மோர்கேஜ் கட்ட வேண்டும் என்று அது ஒரு பெரிய விடயம்.

சொந்தக்காரர்கள் முப்பதினாயிரம் பவுண்டுகள் கொடுத்து வீடு வாங்க உற்சாகப்படுத்த இந்த விடயத்தை அந்தப் பெண்மணி வேலை செய்யும் இடத்தில் சொல்லி விட்டாள். அதுவே அவளுக்கு வினையாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

பொறாமை, சூது, வஞ்சகம், குழி பறித்தல் என்பவற்றை நான் வெள்ளைக்காரரிடம் பார்க்கவில்லை. இது எமது மண்ணின் குணமோ தெரியாது தமிழரிடம் அதிகமாக இருக்கிறது.

இங்கு லண்டன் வந்தும் அந்தக் குணம் போகிறது இல்லை. தம்மை விட கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று பக்கத்து வீட்டார், நண்பர்கள் என்று யாரையும் பார்த்து போறாமைப்படும் ஆட்களைத் தான் தினமும் கண்டு கொண்டிருக்கிறேன் லண்டனில்.

அந்தப் பெண்மணி வேலை செய்யும் அலுவலகத்தில் போய் வீடு வாங்கப் போகிறோம் என்று சொல்ல ஆரம்பமானது பொறாமை வியூகம்.

அவள் வேலையிடத்தில் ஒரு பெண்மணி உயர் பதவியில் இருக்கிறா. அவ இவர்களை எப்படியாவது வீடு வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்களின் வேலை நேரத்தைக் குறைத்து ஓவர் டைம்மை குறைத்து இப்பொழுது வேக் பேமிட்டுக்கே உலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது விடயம். அவர்கள் முன்னேறி வந்து விடுவார்களே என்ற பொறாமை வியூகம் சுற்றிச் சூழ்ந்து நிற்கிறது.

கணவனும் மனைவியும் அந்தக் கவலையால் நொந்து நூலாகிப் போய் விட்டார்கள். உண்மையில் இந்தப் பொறாமை கொள்ளும் விடயம் என்பது எங்கள் தமிழர் சமூகத்தில் எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்; எரிச்சலாக இருக்கிறது.

அவரின் உழைப்பு, அவரின் பணம், அவரின் ஊதியம் அவர் முன்னேற சும்மா உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை இந்த சமூகத்தை.

சொத்தைப்பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சுலோகம் சொல்வது சரிதானே. எவ்வளவு சிக்கலில் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்ன ஒன்பது விடயங்களையும் பெரீசா போட்டோ கொப்பி எடுத்து எனது டயறியில் ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்களும் அவ்விதமே செய்யுங்கள். சொன்னால் சிக்கல் படுவீர்கள்.

Monday, 17 August 2009

செயற்கை விந்துகள் துள்ளும் உலகம்

ஒரு மாதிரியாக செயற்கையான விந்தணுக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். சமூகம், குடும்பம், ஆண் பெண் உறவு, உடலுறவு எல்லாவற்றிற்கும் பெரும் சவாலாக அமையப் போகும் ஒன்று என்று இப்பொழுதே குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

யுலை 9ஆம் திகதி லண்டனில் இருந்து வெளிவரும் ‘சன்’ பேப்பரில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். ஆதாம் ஏவாள் இருவரும் காட்டுக்குள் இருக்கிறார்கள். ஏவாளை ஆதாம் கூப்பிடுகிறார். ‘நீ தேவையில்லை ஆதாம்’ என்றபடிக்கு செயற்கை விந்து டப்பாவை கையில் பிடித்தபடிக்கு ஏவாள் நிற்கிறாள்.

ஏற்கனவே சிங்கிள் மம், சிங்கிள் பாதர் என்று சிந்திக்கத் தொடங்கிய வெளிநாட்டு சமூக அமைப்புக்குள் உடலுறவில்லாத செயற்கை கருத்தரிப்பு அறிமுகமாகி டெஸ்ட் ட்யூப் பேபி என்று வந்து, அதற்கும் ஆணின் உயிருள்ள விந்தினை வயிற்றில் சுமந்து பிள்ளை பெற்றவர்கள் இப்பொழுது ஆண்களின் விந்தே தேவையில்லை எனும் அளவிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

முந்தி ஜீன்களை எடுத்து ஆடு செய்யப்போய் வத்திக்கான் திருச்சபை அல்லலோலகல்லோலப்பட்டதன் பிறகு இப்பொழுது ஒருத்தருக்கும் சொல்லாமல் ஆய்வுக் கூடங்களில் விஞ்ஞானிகள் மறு உருவங்கள் மறு வடிவங்கள் என்று ஒரு செல்லில் இருந்து மறு செல்லுக்கு என்று உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த உருவாக்கம் உலக நியதிகளோடு ஒத்துப்போக மாட்டாது என்று திருச்சபைகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுது ‘சிங்கிள் மம்’ போன்றவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தங்களது கருப்பைக் குடத்துக்குள் இனம் தெரியாத ஆணின் விந்தை வாங்கி அடைகாக்கத் தேவையில்லை.
இயந்திரங்கள் செய்த விந்தை எடுத்து வைத்துக்கொண்டு பிள்ளை பெத்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரின் விந்து என்று அல்லாடவும் தேவையில்லை.

அந்தரங்கங்கள், அருமையான உடலுறவு எனும் இன்பம் என்பவையெல்லாவற்றையும் மறுதலிக்கும் ஒரு சமூகம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
செயற்கை விந்தணுவின் மூலம் முழுமையான ஒரு பிரசவத்தை எந்தக் குறையுமில்லாமல் செய்விக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உடலுறவின் மூலமான தொந்தரவுகள் இல்லை என்றும், ஒருவருக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து வாழவேண்டுமென்ற வாழ்வை விரும்பாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமென்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இந்தச் செய்தி வந்த திங்கட்கிழமை காலை எங்கள் அலுவலகத்தில் இருந்த இருபது வயது பெண்மணி மிகவும் குதூகலமாக இருந்தாள். ‘இனி ஆண்களின் துணை தேவையில்லை’ என்றாள். ‘என்னத்துக்கு’ என்றுகேட்டேன். பிள்ளை பெறுவதற்கு என்றாள். ‘அப்போ செக்ஸுக்கு’ என்று கேட்டேன். அதற்கு மழுப்பினாள். ‘செக்ஸுக்கு ஆண்கள் வேண்டும். ஆனால் கருத்தரிப்பிற்கு செயற்கை விந்தா?’ என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை.
லண்டனில் ‘பிக்கட்லி சேக்கஸ்’ எனும் இடம்தான் விபச்சாரிகளுக்கு பேர் போன இடம். இடம் ஊத்தை. அந்த இடத்தில் போய் சுத்தினாலே தெரியும், தம்பி செக்ஸ் செய்யும் பெண்களிடத்துதான் வந்திருக்கிறார் என்று.
எனக்கு எல்லாவற்றையும் இந்த இரண்டு கண்களால் பார்த்து உணரவேண்டும் என்ற அவா இருக்கிறது. ஒரு நாள் அங்கு போனேன். சுற்றிவர செக்ஸ் சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது.
முதன் முதல் பார்க்கும்போது உண்மையில் அது ஒரு அதிசயம்தான். போய்ப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும். அங்கே மக்கள் வந்து தங்களுக்கான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு போவதை கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன், வாங்கும் பொருட்களை. வளைந்து கொடுக்கும் ஆண்குறிகள் பல வடிவங்களில் பல சைஸ்களில் இருக்கின்றன. பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்து வைத்திருக்கிறார்கள். அதனை வாங்குகிற பெண்கள் பல வயதினர். பிளாஸ்டிக்கால் செய்த, காற்று ஊதிப் பெண்ணாக்கிவிட்டு அதனோடு உடலுறவு கொள்ளத்தக்க பெண்ணுருவங்கள். உயிரற்றவை அவை. ஆனால் தனியே இருக்கும் ஆண்கள் அதனை வாங்கிப் போகிறார்கள் என்றார் விற்பனைப் பெண்மணி. காலையில் எழும்பி மூஞ்சையை நீட்டிப் பிடிக்காது, புறுபுறுக்காது, நகை நட்டு, சாறி, மூக்குமின்னி கேக்காது, சாப்பாடு குடிப்பு தேவையில்லை, உறங்காது இரவு முழுக்க பகல் முழுக்க விழித்திருக்கும் அந்த பிளாஸ்டிக் பெண்மணி. எனவே அது இலகு என்று வாங்கிப் போகிறார்கள் என்றாள் அவள். எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கக்கூடிய ‘வாய்’ போன்ற பொருட்கள், யோனி போன்ற பொருட்கள், முலையைக் கௌவிப் பிடிக்கக்கூடியதும் உணர்வுகளைத் தூண்டக்கூடியதுமான பொருட்கள் செக்ஸ் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பொருட்கள், மேகஸின்கள், புத்தகங்கள், படங்கள், ஆண்,பெண் நிர்வாணப் படங்கள் வீடியோக்கள், சீடிகள், பாட்டுகள் என்ற எப்பொழுதும் வியாபாரம் நடக்கும் கடைகள் அவை.

லெஸ்பியன், கே எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல சோடி சோடியாகவும் ஆண்கள் பெண்களும் இந்தக் கடைகளுக்கு வருகிறார்கள்.
உடலுறவின் நிலைகளை மாற்றி மாற்றி துய்த்துணர இப்போதைய தலைமுறை பழகிவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம்.
இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் ஒரு மனிதனின் செல்லை எடுத்து அதேபோல ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்பொழுது மிகவும் கட்டுக்கோப்பான ஒரு இந்து நாடென்று உணரப்படுகின்ற இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேச்சு அடிபடுகிறது.
ஓரினச் சேர்க்கை பற்றி அதன் மன உணர்வுகள் பற்றி அப்படி இல்லாத என்னைப் போன்றவர்கள் முழுமையாக தெரிவிக்க முடியாது. ஆனால் அடிமனதின் உணர்வுகளில் எதிர்ப்பின் மீதான கவர்ச்சியின்மை உணர்ச்சியின்மை பற்றி ஒரு ‘கே’யுடன் உரையாடி இருக்கிறேன். அழகான ஆணைக் கண்டால் அவரோடு உடலுறவு கொள்ளத் தூண்டும் எண்ணங்கள் தனக்கு வரும் என்று சொன்னார்.
ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான அழகான பெண்ணைக் கண்டால் எல்லாம் துடிப்பது போல; ஒருபால் உறவுக்காரருக்கு அது இருக்குமாம் ஒத்த பாலினைக் கண்டால்.
வெளிநாடுகளில் ஒரு பால் சேர்க்கைக்காரர்கள் ஒன்றாக இருந்து வாழ்கிறார்கள். ஆனால் ஆண் ஒருபால் உறவுக்காரர்களின் பின் வழி மூலமான உடலுறவால் எயிட்ஸ் போன்ற பேராபத்து தொடர்பான அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது. எச்சரிக்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் உறவு கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு பாலுறவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் வீதியில் இறங்கிக் குதூகலித்த ஆட்களின் தொகை பிரமிப்பை ஏற்படுத்தியது.
இலங்கையிலும் ஒரு பாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களவாகவே தங்கள் சோடிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாக அவர்களும் சிந்திக்கிறார்கள். கூடித் திருமணம் முடித்து வாழ்வது என்பது ஆங்கிலேய கலாச்சாரத்தில் ஒரு விசயமேயில்லை.
இங்கு சுரங்க ரயில், பஸ்களில் ஆண் ஆண், பெண்பெண் சோடிகள் கட்டிப் பிடித்து உதட்டு முத்தம் எல்லாம் கொடுத்து சந்தோசமாக பயணம் செய்வார்கள். எங்களுக்கு அதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.
எனது சின்ன மகள் கூட சொல்வான் அவை லெஸ்பியன் என்று. சில விசயங்கள் ஆரம்பத்தில்தான் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும்.
இலங்கையில் எங்கள் கிராமங்களில்கூட ஆண்கள் சின்னப் பையன்களோடு உடலுறவு கொள்வது நடந்திருக்கிறது. அது ஒருவகை உணர்வுகளின் வெளிப்பாடுதான். அவர்கள் ஆண்களோடுதான் சாகும்வரை உடலுறவு கொள்வார்கள் என்றில்லை. வளர்ந்தபிறகு கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகள் பெத்து இருப்பார்கள். அது ஒரு கவர்ச்சி மட்டும்தான்.
ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் மறுபாலில் வெறுப்புள்ளவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் முடித்து உடலுறவு கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது அதீத வளர்ச்சி, தொழில் நுட்பத் தாக்கம், துய்த்து எல்லாவற்றையும் அனுபவித்துவிடத் துடிக்கும் மனம் என்ற விடயங்களால் அன்பு, ஆதரவு என்பன எல்லாம் சிதறிப் போகின்றன. பிரபலங்களுக்கு எல்லாம் இது பெரிய தலையிடிதான். எங்களுக்கு முன்னால்இருக்கும் பெரிய உதாரணம் மைக்கேல் ஜாக்ஸனின் மூன்று பிள்ளைகள். ‘ஜாக்ஸனைப்போல ஒரு சிறந்த அப்பாவை உலகத்தில் நாங்கள் காணவில்லை’ என்று மனமுருகி பிரேதத்துக்கு முன்னால் நின்று அழுதுகொண்டிருக்க ஜாக்சனின் மனைவி ஒரு அறிக்கை விடுகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் ஜாக்ஸனுக்குப் பிறந்தது அல்ல. தான் ஜாக்ஸனின் டொக்டரோடு உடலுறவில் ஈடுபட்டுத்தான் பிறந்தது என்று.
பிள்ளைகள் நொறுங்கிப் போய்விட்டார்கள். தந்தை செத்தபிறகுகூட அந்தப் பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடுகிறார்களில்லை. இந்தப் பொறிபோதும் மீடியாக்களுக்கு. அந்தப் பிள்ளைகளை வேதனைப்படுத்துவதற்கு.

உண்மையில் உடலுறவின் தாத்பரியம், லிமிட் என்று எதனையும் வரையறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சமூகத்துக்குள் இப்பொழுது செயற்கை விந்துகளும் ஊர்ந்து ஊர்ந்து வந்துவிட்டன.
எல்லாம் செயற்கையாகவே போகப்போகிறதா என்று அச்சப்படத்தேவையில்லை என்கிறாள் மனைவி. ஏனெனில் மனம் முழுக்க காதலுடன் செய்யும் உடலுறவுக்கு நிகரில்லை. அந்த இன்பத்துக்கும் ஈடில்லை.
free counters

நண்பர்கள் கூட்டம்