Thursday, 29 March 2012

லண்டன் உங்களை வரவேற்பதில்லை (மதிப்புரை)

வாழ்வும் நினைவும் விமர்சனமும் புலம்பெயர் தேசங்களிலிருந்து ஈழத்தமிழர்கள் தம் சொந்த தேச மக்களுக்கு சொல்லவிரும்பியவை.
இந்திய தமிழர்களும் ஈழத்தமிழர்கள் போல் உலகின் பல நாடுகளிலும் பரவி வாழ்கிறார்கள். என்றாலும் காத்திரமான இலக்கிய படைப்புகளை அவர்களால் தர முடிந்ததில்லை. ஈழத்தமிழர்களால் மட்டுமே இது சாத்தியமானது. இதற்கு முக்கிய காரணம் வாழ்வின் துயரம் படிந்த அனுபவங்கள். இளைய அப்துல்லாஹ் லண்டனில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்.கவிதை,சிறுகதை மற்றும் கட்டுரை நூல்கள் பல எழுதியுள்ளார். தமிழக மற்றும் ஈழத்து பத்திரிகைகளில் தொடர்ந்தும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரின் அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்,கடவுளின் நிலம் ஆகிய கட்டுரை தொகுப்புகளின் தொடர்ச்சியாகவே இந்த நூலையும் கொள்ளலாம். இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் ஈழத்திலிருந்து வெளிவரும் தினக்குரலில் வெளிவந்தவை. புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்களின் வாழ்வை தெரிந்து கொள்ளும் முகமாக எழுதப்பட்டவை.இதில் சாதி,மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்று வாழ்வின் அடிப்படை சார்ந்த விசயங்களை பற்றி விமர்சனபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சொந்த மண்ணின் ஏக்கம் மனம் முழுக்க இருக்கும். இளைய அப்துல்லாஹ் லண்டன் அனுபவங்களை எழுதினாலும் ஊர் நினைப்பு அவருக்கு வந்து கொண்டே இருக்கிறது.வீடு எனும் பெருஞ்செல்வம் என்ற கட்டுரையில் இதை அதிகம் பார்க்க முடியும். லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற தலைப்பு எதிர் மறையாகத்தோன்றினாலும் பத்து,இருபது ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் புலம் பெயர்ந்தவர்களுக்கு இருந்த வேலைவாய்ப்பு,வரவேற்பு நிகழ்கால்த்தில் இல்லை என்பதையும் பிரித்தானிய அரசாங்க கொள்கைகளால் அகதிகளுக்கு ஏற்படும் மோசமான விளைவுகளையும் பல அனுபவங்களின் மூலம் உணர்த்துகிறார் கட்டுரையாளர். மூத்த தலைமுறையினரின் இரட்டை மனநிலையையும் இளைய தலைமுறையினரின் சுதந்திர மன நிலையையும் பல கட்டுரைகளில் மனோவியல் பாங்குடன் எழுதியள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் சொந்த மண்ணைப்பற்றிய கவலை கொண்டவர்கள்தான். ஆனாலும் ஈழத்தில் அமைதி திரும்பினாலும் சொந்த மண்ணுக்கு திரும்பும் எண்ணம் யாருக்கும் இல்லை என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகளின் அவமதிப்பு செய்திக்கு வழக்கு போட்டு வெற்றி பெற்ற ஈழத்தமிழர் பரமேஸ்வரன் பற்றிய கட்டுரை ஒரு புனைகதைக்கு நிகரானது.இந்தியாவிலோ இலங்கையிலோ நடக்கமுடியாதது.2009 ஆம் ஆண்டு சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது உலகம் முழுக்க தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது லண்டனிலும் போராட்டம் நடந்தது.அதில் பங்கேற்று பல நாட்கள் உண்ணா நோன்பு இருந்தவர் பரமேஸ்வரன்.அவரது உண்ணா நோன்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிட்ட டெயிலி மெயில்,சண் ஆகிய பெரிய பத்திரிகைகள் மீது தனது அகதி நிலையிலும் கூட வழக்கு தொடர்ந்து 77 500 ஸ்டெர்லிங் பவுண் மான நஸ்ட ஈடாக பெற்றுள்ளார். ஆனால் அப்போது அங்கிருந்த தமிழர்கள் அவருக்கு ஆதரவாக இல்லாமல், வெற்றி பெற்றவுடன் கொண்டாடிய போக்கையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார் இளைய அப்துல்லாஹ். ஈழக்கவிஞரும் போராளியுமான புதுவை இரத்தினதுரை பற்றிய கட்டுரை கண்ணீரை வரவழைப்பது. இளைய அப்துல்லாஹ்விற்கு மிக அருமையான மொழிநடை கை வந்துள்ளது. தமிழக ஈழ எல்லை மீறி உலகின் பல்வேறு இடங்களுக்கு தனது கட்டுரை கதைக்களங்களை இழுத்து சென்றவர் அயலில்(கனடாவில்) வாழும் ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியள்ளது மிகவும் பொருத்தமானது. கடைசியாக ஒன்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை.ஈழப்போர் நடந்தவரை புலம்பெயர் எழுத்துக்களின் முக்கியத்துவம் அதிகம். ஏனென்றால் அவர்களின் துயரம் பெரிது.ஆனால் இப்போது அதை விட ஆயிரம் மடங்கு துயரம் சுமக்கும் முள்ளிவாய்க்காலின் இரத்த சாட்சியாய் வாழும் முகமறியாத மனிதர்களின் வார்த்தைகளுக்காக உலகம் காத்திருக்கிறது. (பவுத்த அய்யனார்-இந்தியா டுடே மார்ச் 14 2012)

Monday, 20 December 2010

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விடயங்கள்



கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு,எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.

அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசி சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அந்த அன்ரிக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அந்த அன்ரி வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.

புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.

கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன்டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் “அன்ரி உங்களுக்கு என்ன வயது” என்று எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.

அந்த அன்ரி “நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41”.

மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு ,ளமை அந்த பெண்மணியிடம்.

இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் விடை இல்லை.

“ஸபாஷித ரத்ன பாண்டாகாரம்” என்ற புத்தகத்திலே ஒரு சமஸ்கிருத சுலோகம் ஒன்று வந்திருக்கிறது.

“ஆயுர் விருத்தம், க்ருவர சித்ரம், மந்த்ர மௌஷத மைதுனே தானம் மானாப மா நௌ ச நவ கோப்யானி காரவேத்” சரி இதன் தமிழாக்கம் இப்படி சொல்கிறது.

“தனது வயது, சொத்து, வீட்டில் நடந்த சண்டை, சிறந்த மந்திரம், நல்ல மருந்து, கணவன் மனைவியின் பிரியம், தானம், தனக்கேற்பட்ட புகழ், அவமானம் இந்த ஒன்பது விடயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது”

உண்மையில் மிக முக்கியமான சுலோகம் இது என்று படித்த பிறகு எனக்கு புரிந்தது .

என்னை எல்லோரும் எப்படி இளைமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.

வீட்டில் நல்ல மனைவி, சண்டை சச்சரவு இல்லை. நல்ல இரண்டு பிள்ளைகள் தொந்தரவு இல்லை. எனக்குப் பிடித்த வேலை, பச்சைத் தண்ணீர் குடிக்கிறேன். தினமும் கீரையை உணவில் மனைவி சமைத்துத் தருகிறது. நிறைய வாசிக்கிறேன். இவைகள் சில நேரம் காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.

அத்தோடு எதனையும் போட்டு அலட்டிக் கொள்ளாத மனம் இருக்கிறது. இரத்த அழுத்தம் ஏறுவதற்கு விடமாட்டேன். இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். இலங்கையில் தெளிவத்தை யோசப் எப்ப பார்த்தாலும் அப்பிடியே இருக்கிறார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எப்பவும் உசாராக இருக்கிறார். மனம் வயதுக்கு முக்கிய காரணம் என்றுதான் நான் சொல்லுவேன்.

அடுத்தது உணவு, என்ன கிடைத்தாலும் வயிற்றினுள் தள்ளப்படாது. முஹமது நபிகளாரின் மொழி ஒன்று இருக்கிறது. “வயிற்றை மூன்றாக பிரியுங்கள் ஒரு பகுதி உணவுக்கு, அடுத்த பகுதி நீருக்கு, மற்ற பகுதியை வெறுமையாக வைத்திருங்கள்”. அப்பொழுது தான் உணவு செமிபாடு அடையும். இன்னொன்று பசிக்கும் போது உணவுத் தட்டில் உட்கார்ந்து பசியுடனேயே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விட வேண்டும். அர்த்தம் வயிற்றை நிரப்பாதீர்கள் என்பதுதான். அப்பொழுதுதான் சாகும் வரை உடல் இலகுவாக அழகாக இருக்கும். தண்ணீர் நிறையவே குடிக்க வேண்டும்.

சரி அந்த சுலோகம் சொல்லும் விடயம் வயதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்பது.

அந்த வீட்டுக்கு வந்த அன்ரி தனது வயதை சொல்லாமல் இருந்தால் அவவின் அழகான இளைமைத் தோற்றம் உண்மையில் ஆச்சரியப்படுத்திக் கொண்டு தான் இருந்திருக்கும்.

நடிகை ஸ்ரேயா விடம் ஒரு நிருபர் கேட்டார் “இவ்வளவு அழகுக்கு என்ன செய்கிறீர்கள்” என்று அவ சொன்னா தண்ணீர் குடிக்கிறேன்.

வீட்டில் நடந்த சண்டையை வேறு ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்பது உண்மைதான்.

கணவன் மனைவி அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான சண்டையை வேறு யாருடனும் பகிர்ந்து கொண்டால் பெரும் சிக்கலில் முடிந்து விடும்.

இங்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த விடயம்தான் குடும்பங்கள் பிள்ளைகள் சீரழிய காரணமாகின்றன.

தமிழகத்தில் இருந்த ஒரு கணவன் மனைவியை எனக்குத் தெரியும். அவர்களிடையே அரசல் புரசலான சண்டை இருந்து கொண்டிருந்தது. அதனை அவர்களால் தீர்த்து ஒற்றுமையாக முடியாமல் இருந்தது. அவர்களின் இந்த சண்டை தொடர்பாக லண்டனில் இருந்து தமிழகம் போன கணவனின் ஒரு நண்பரிடம் அந்த மனைவி சண்டையை சொல்லி அழுது கண்ணீர் விட்டிருக்கிறா.

அந்த பெண்மணியின் கண்ணீர் லண்டனில் இருந்து போனவருக்கு இரக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது கணவனுக்கு தெரியாமல் லண்டன் நண்பரை அடிக்கடி ஹோட்டல்களில் சந்திக்க அவர்களுக்கிடையான அன்னியோன்யம் அதிகமாகி விட்டது.

லண்டன்காரருக்கு இங்கு இரண்டு பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். அந்த அன்னியோன்யம் காதலாகி லண்டனுக்கு அவவை கூப்பிடுகின்ற அளவுக்கு விஸ்தாரமாகி விட்டது.

இங்கு மனைவிக்கு தெரிந்து அவவும் சன்னதம் ஆட குடும்பம் பிரிந்து விட்டது. இப்பொழுது இரண்டு குடும்பமும் பிரிந்து விட்டது. அவர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவரின் பிள்ளைகள் அவரை வெறுத்து விட்டன. அவரின் சொந்தக்காரர்கள் வெறுத்து விட்டார்கள். அவரின் அம்மா, அப்பா முகம் பார்ப்பதில்லை. பெரும் மன உளைச்சலோடு திரிகிறார். எனக்குத் தெரிந்தவர் அவர். சுலோகம் சொல்வது சரிதான்.

கணவன் மனைவியின் அன்பு, பாசம், பிரியம் என்பவற்றையும் வெளியில் சொல்லக் கூடாது என்று சுலோகம் சொல்கிறது.

கொழும்பில் எனக்குத் தெரிய நடந்தது. இரண்டு தோழிகள் சின்ன வயதில் இருந்து அவர்களை கண்டிருக்கிறேன் ஏதோ இரட்டையர்கள் போல இருப்பார்கள். கையில் பிடித்துக் கொண்டு தான் றோட்டில் போவார்கள். பேசிக் கொண்டார்கள் தாங்கள் கலியாணம் செய்தால் ஒரு ஆம்பிளையைத் தான் கலியாணம் செய்வோம் என்று. அவ்வளவு ஒட்டுதல்.

தோழிகளில் ஒருத்தி ஒருவரை காதலித்து திருமணம் செய்து விட்டாள். மற்றவள் நாள் போக இரண்டு தோழிகளும் மீண்டும் ஒட்டுதல் கூடி விட்டது. வீட்டுக்காரர்களுக்கும் ஒருவகையில் சந்தோசம். கலியாண நேரத்தில் ஒரு சின்ன மனத்தாங்கல் வந்து பிறகு ஒட்டி விட்டார்கள். ஆனால் ஆறு மாதங்கள் கடந்திருக்கும், தனது நண்பியின் கணவரை கொத்திக் கொண்டு மற்றவள் வெளிநாட்டுக்கு போய் விட்டாள். என்ன நடந்தது என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டது இதுதான்.

கணவன் தன்னோடு செய்யும் எல்லாவற்றையும் தனது தோழிக்கு ஒன்று விடாமல் சொல்லி வந்திருக்கிறாள் தோழி. மிக நல்ல ஆண் மகன் செக்ஸில் பெரும் திருப்தி செய்யக் கூடியவர் அவர் என்று கணவனைப்பற்றி தோழியிடம் சொல்ல சொல்ல அவளுக்கு நண்பியின் கணவன் மீது ஈர்ப்பு வந்துவிட்டது மேலெண்ணம் வர தோழியின் கணவரை தன் வசப்படுத்தி விட்டாள் நண்பி. சுலோகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதானே.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கே லண்டனில் இப்பொழுது பெரும் அல்லாட்டத்தில் கிடக்கிறது. லண்டனுக்கு வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. வேக் பேமிட்டில் இருக்கிறார்கள். எப்பொழுதும் வேக் பேமிட்டில் இருந்தால் கொம்பனிக்காரர்களுக்கு ஒருவித அடிமை சாசனம் போலத்தான் அது. கொம்பனி என்ன சொல்லிகிறதோ அதுக்கு தலையாட்ட வேண்டும். இல்லாவிடில் கொம்பனிக்கு உரிமை இருக்கிறது வேக் பேமிட்டை கான்சல் பண்ண. வேலையும் போய்விடும் விசாவும் அதோகதி.

அதுவும் தமிழ் முதலாளிமார் பாடு பெரும் பாடு. வேக் பேமிட்டில் இங்கு லண்டனுக்கு எடுத்து விட்டால் தங்களுக்கு கீழ் படிய வேண்டும் என்று நடப்புக் காட்டுவார்கள்; காட்டுகிறார்கள்.

நான் சொன்ன குடும்பத்துக்கு பிரான்ஸ், கனடா என்று அண்ணன் தம்பிமார் இருக்கினம். அவர்கள் தங்களது சகோதரத்துக்கு ஒரு வீடு வாங்க கொஞ்சக் காசு கொடுத்தார்கள். லண்டனில் வீடு வாக்குவது என்பது சாதாரணமான விடயம் இல்லை. டிப்போசிட் கட்ட வேண்டும். மாதா மாதம் மோர்கேஜ் கட்ட வேண்டும் என்று அது ஒரு பெரிய விடயம்.

சொந்தக்காரர்கள் முப்பதினாயிரம் பவுண்டுகள் கொடுத்து வீடு வாங்க உற்சாகப்படுத்த இந்த விடயத்தை அந்தப் பெண்மணி வேலை செய்யும் இடத்தில் சொல்லி விட்டாள். அதுவே அவளுக்கு வினையாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

பொறாமை, சூது, வஞ்சகம், குழி பறித்தல் என்பவற்றை நான் வெள்ளைக்காரரிடம் பார்க்கவில்லை. இது எமது மண்ணின் குணமோ தெரியாது தமிழரிடம் அதிகமாக இருக்கிறது.

இங்கு லண்டன் வந்தும் அந்தக் குணம் போகிறது இல்லை. தம்மை விட கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று பக்கத்து வீட்டார், நண்பர்கள் என்று யாரையும் பார்த்து போறாமைப்படும் ஆட்களைத் தான் தினமும் கண்டு கொண்டிருக்கிறேன் லண்டனில்.

அந்தப் பெண்மணி வேலை செய்யும் அலுவலகத்தில் போய் வீடு வாங்கப் போகிறோம் என்று சொல்ல ஆரம்பமானது பொறாமை வியூகம்.

அவள் வேலையிடத்தில் ஒரு பெண்மணி உயர் பதவியில் இருக்கிறா. அவ இவர்களை எப்படியாவது வீடு வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்களின் வேலை நேரத்தைக் குறைத்து ஓவர் டைம்மை குறைத்து இப்பொழுது வேக் பேமிட்டுக்கே உலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது விடயம். அவர்கள் முன்னேறி வந்து விடுவார்களே என்ற பொறாமை வியூகம் சுற்றிச் சூழ்ந்து நிற்கிறது.

கணவனும் மனைவியும் அந்தக் கவலையால் நொந்து நூலாகிப் போய் விட்டார்கள். உண்மையில் இந்தப் பொறாமை கொள்ளும் விடயம் என்பது எங்கள் தமிழர் சமூகத்தில் எங்கிருந்து வந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன்; எரிச்சலாக இருக்கிறது.

அவரின் உழைப்பு, அவரின் பணம், அவரின் ஊதியம் அவர் முன்னேற சும்மா உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை இந்த சமூகத்தை.

சொத்தைப்பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சுலோகம் சொல்வது சரிதானே. எவ்வளவு சிக்கலில் மாட்டுப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்ன ஒன்பது விடயங்களையும் பெரீசா போட்டோ கொப்பி எடுத்து எனது டயறியில் ஒட்டி வைத்திருக்கிறேன். நீங்களும் அவ்விதமே செய்யுங்கள். சொன்னால் சிக்கல் படுவீர்கள்.

Wednesday, 13 October 2010

கண்ணுக்குள் நடமாடும் கவி



எனக்குள்ளே என்ன நடக்குது
ஏதோ ஒரு தடவை
என்ன செய்யுதென்று தெரியாமல்
காணக்கிடைக்காத
கரு நிழலை
கண்டு கொண்டேன் நேற்று இரவு.

ஒற்றை நிலா ஒன்று வந்து
ஊரடங்கி போன வேளை
கண்ணிரண்டும் இருட்டாகி...

கரு விழியில் கோடு விழுந்து
சுருண்ட முடி ஒரு சுகம் தானே
வெட்டிப்பேச்சு பேச முடியாதபடி
ஒரு மோன இடைவெளியில்

வெறும் சத்தம் மட்டும்
என் காதில் தானாய் வந்து
சந்தம் எழுப்பி விட்டு மெதுவாய்
அடங்கிற்று.

எங்கிருந்து வந்ததிந்த தற்றுணிவு
எங்கேயோ போய்விட்ட புது நாணம்
கூடவே வந்திங்கு குதூகலித்த
வெண்புரவி ஓங்கி அடங்க
எத்தனை நாழிகை.

கண்ணுக்கு முன்னால்
குனிந்து மேல் தடவி
புதுப்புனுகை யாரோ முகம் பார்த்து
தடவியது போல் எல்லா மன உணர்வும்
கூடிக்குலாவியதே.

அந்தகாரம் இன்னும் வேண்டும்
ஒரு தனிமை போதாது
மீண்டும் மீண்டும் புதுத்தனிமைகள்
காலைச்சுற்றி நக்கியபடிக்கு வேண்டும்

நான்காம் சாமத்தில் மற்றுமொரு பூசை
ஐயகோ பேருவகை கொள்ள பெரு மனது வேண்டும்.
எல்லாக்கண்களும் விழித்திருக்க வேண்டும்.
புலன்கள் பத்தாவது வேண்டும்.

பேருண்மை அறிந்து விட்டேன்.
இதுவேதான் எல்லாம் நீயேதான் எல்லாம்.
உனக்குள்ளேதான் எல்லாம்.
free counters

நண்பர்கள் கூட்டம்