Sunday 16 August 2009

அவருக்கு மட்டுமான சூரியன்

நவஜோதி அகஸ்தியரின் மகள் என்பது மட்டும் கவிதைகளை எழுதுவதற்கான அடையாளம் இல்லை. நவஜோதிக்குள் இருக்கும் ஒரு கவிதைக்குரல்தான் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’. அவரது முதலாவது கவிதைகளின் தொகுப்பு இது.
வரலாறும் அனுபவமும் எப்பொழுதும் பண்பட்ட ஆக்க இலக்கியவாதிகளைத் தரும். ‘தீபம்’தொலைக்காட்சியின் இலக்கிய நேரம் பகுதிக்கு ஆர்வமுடன் அவர் எழுதிய கவிதைகள் சிலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றிற்கு நான் ‘விஷவல்’சேர்த்து அழகு படுத்தியிருந்தேன். மனப்பதிவுகள் மனஅதிர்வுகள் வெளிப்பாடுகள் இவரது கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதைகளுக்கு என்ன வரையறை கொடுப்பது என்பது பலவாறாக விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன்று.
எல்லாக் கைகளையும் தட்டிவிட்டு அகல விரித்துக் கொண்டு ‘புதுக்கவிதை தனது ஆழத்தைப் பதித்து ஆண்டுகள் பல.
எமது ஆழ் மனதுக்குள் சிக்காராக உட்கார்ந்து கொண்டிருக்கும் தலைப்பாகைக் கவிஞன் எல்லாவற்றையும் 39 வயதுக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டான். அவனைவிட வேறு யார் உளர். (பாரதி பிறந்த நாள் - 1882 – டிசம்பர் 11. இவ்வுலகை விட்டுப் போன நாள் 1921- செப்டம்பர் 12.)
இந்தக் குறுகிய காலத்துக்குள் செய்துவிட்டுப்போன கவிதைகளால் மட்டுமே அவன் உலகம் முடியும் வரை வாழுகிறான்.
‘கவிதைகள் என்ன சாதிக்கும்’ என்பவர்களுக்காக சொன்னது அது. ஒரு மனிதனை அழியாமல் வைத்திருக்கும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு.
ஒவ்வொரு முறையும் பெண்கள் எழுதும்போது என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்கிறார்கள். எனது செவ்வியொன்றில் பிராங்போட் ரஞ்சனி சொன்னது இன்னும் மனதுக்குள் இருக்கிறது. “பெண்கள் ஆண்கள் என்று என்ன? இரண்டும் சாப்பிடுவது ஒரே மாதிரி குடிப்பது ஒரே மாதிரி சுவாசிப்பது ஒரே மாதிரி பேசுவது ஒரே மாதிரி சிரிப்பது ஒரே மாதிரி கேட்பது ஒரே மாதிரி பின்னரென்ன வேறுபாடு மேல் எண்ணம் ஆண் என்பது” .
“எழுத்துக்கள் என்ன செய்துவிடப் போகின்றன. எவ்வளவு எழுதினோம் எழுதுகிறோம் ஆனால் சமூகம் மாறுகிறதா? என்று எனது பத்திரிகையாளரான எனது நண்பி ஒருத்தி கேட்டாள். “தொடர்ந்து செய்யுங்கள் எங்காவது ஒரு அதிர்வு ஏற்படும் சிலவேளை உங்கள் பார்வை படாத இடத்தில் கூட அது நிகழலாம்”என்றேன்.

கவிதைகளை தொகுப்புக்காக தெரிவு செய்வது எப்படி என்பதில் படைப்பாளிகளின் தைரியம் எந்த மட்டில் இருக்கவேண்டும் எனப்படுவது மிகவும் குழப்பகரமானதாவே இருக்கிறது. பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும் படைப்புக்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பிற்கு எடுபடுமா என்ற அச்சம் இருக்கிறது.
தெரிவு என்பது என்ன? வெளிவந்த கவிதைகள் தானே இவை. எல்லாவற்றையும் தொகுப்பில் சேர்க்கலாமே என்பதுதான் நவஜோதியின் அபிப்பிராயமாக இருந்தது.
பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும்போது அழகாக இருக்கும் கவிதைகள் தொகுப்பில் வரும்போது அழகாக இல்லாமல் போகின்றதா? அல்லது என்ன?
கவிதைகளை எப்படி எழுதுவது என்பது குறித்து அவரவர்க்கும் ஒவ்வொரு தேவையும் ரசனையும் வெளிப்பாடும் இருக்கிறது.
நவஜோதியின் கவிதைகள் உணர்வுகளின் வடிகாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதனை உணருகிறேன்..
மன நெருடல்கள் கவிதைகளாகவோ சிறுகதையாகவோ வேறு ஏதாவதாகவோ வடிகாலாய் மொழியாய் பிரிக்கப்படும்போது ஒரு ஆறுதல் வரத்தான் செய்யும். அந்த ஆறுதல்தான்.

‘நானும் உன்னுடன் வந்திருக்கலாமேஎன நினைத்தேன்எவ்வளவு தூரம் வந்தாலும்ஓர் இடத்தில் பிரியத்தானே வேண்டும்அந்த இனிய அனுபவத்தைநெஞ்சில் தேக்கிக் கொண்டேன்புகையிரதம் போய்க் கொண்டிருந்தது.
(உனக்கு நினைவிருக்கிறதா)

ஒரு தேர்ந்த வாசகன் கவிதைகளுக்குள் தன்னை உட்புகுத்தி அதன் இடைவெளிகளை நெருக்கிக் கொண்டு ஐக்கியமாகும்போது கவிதை வெற்றியடைந்து விடுகிறது.
சில வேளைகளில் கவிதைகள் குறிப்பிட்ட எழுத்தாளரின் தன்னுணர்வால் மட்டும் வெளிப்படும்போது அது வாசகனுக்கு சலிப்பைக்கூடத் தந்துவிடும். அதற்காக எதை எழுதலாம் எதை எழுதாமல் விடலாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தரப்படக்கூடாது.
மனத்தின் பாடுகளை கவிதையாக்கி பார்ப்பதுதானே கவிஞனின் வேலை.
உண்மையில் உறவுகள் எமது பூமி தாய் நிலம் பார்க்கும் அவலங்கள் இவைகளை கவிதைகளாக வெளிப்படுத்தும் அற்புதம் கவிஞர்களுக்கு மட்டுமே வாய்த்தது.
எத்தனையோ உணர்வுகளை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்வுகள் இருக்கும் எழுதத் தெரியாது. எத்தனை பேர் மற்றவர்களை ஆகர்ஷிக்கிறார்கள்.
எண்ணிப் பார்த்தால் லட்சக் கணக்கான மனிதர்களுக்குள் ஒரு கவிஞர் உட்கார்ந்திருப்பார். உண்மையில் கவிஞன் ஒரு அற்புதம் தானே.

நெகிழும், மிதக்கும், வேதனைப்படுத்தும், எம்பிக் குதிக்கும் உணர்வுகளை கவிதைகளால் வடிய விடுவது ஒரு ஆசுவசிப்புத்தான்.

பகலில் தேவையில்லாமல்தேய்ந்து விட்டேன்
இரவின் அமைதியை தேடுகிறேன்நிம்மதியை;
இரவின் கருப்பைக்குள் தேடுகிறேன்.நினைத்துப் பார்க்கிறேன்.
வியர்த்தம் தெரிகிறது.போர் கடுமையாக இருந்தபோதுகையில் வரும் வெற்றியின் இனிமைஇஎன்னுள் பிறை தெரிகிறது நான் பிறை கண்டவள் நிலாக் கண்டவள் அல்ல... (இதயத்தின் தவிப்பு)

இது நவஜோதியின் ஆசுவாசிப்பு.


பெரும்பாலான கவிதைகளில் தனிமை மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதும் சில புள்ளிகளை மட்டும் சுற்றி வருவதும் வாசகனுக்கு சலிப்பைத் தரலாம். மொழியின் போதாமை தொக்கி நிற்பதனை குறிப்பிடாமல் செல்ல முடியவில்லை. எனக்கு. ஆழமான வாசிப்பு இன்னும் உள்வாங்குதல் மொழியை செழுமை செய்தல் போன்றவற்றை நவஜோதிக்கு சொல்லக்கூடிய ஒன்று எனலாம்.

கவிதைகளோடு வாசம் செய்வதும் கவிதைகளோடு சயனிப்பதும் எவ்வளவு சுகமானது.லண்டனில் ஒரு நல்ல கவிதை சொல்பவர் கிடைத்திருக்கிறார். அவர் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
கவிஞருக்குள் இருக்கும் இரக்கம், அன்பு, மற்றவரை கனம் பண்ணுதல்,விருந்தோம்பல் என்ற எல்லாப் பண்புகளும் நவஜோதியில் இருக்கின்றன.. ஜோகரட்னத்திலும் அது மிகையாகவே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது. இதனை மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.

2 comments:

கே.பாலமுருகன் said...

//‘கவிதைகள் என்ன சாதிக்கும்’ என்பவர்களுக்காக சொன்னது அது. ஒரு மனிதனை அழியாமல் வைத்திருக்கும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு.//

இந்தப் பார்வைக்குப் பாரதியை உதாரணம் காட்டியது சிறப்பு நண்பரே. நமது சொற்கள் நமது வரிகள் நமது படைப்பு தொடர்ந்து ஒரு சலனத்தின் ஒரு இருப்பின் யதார்தத்தில் உயிரோடு இருக்கும்.
நல்ல விமர்சனம்.

இளைய அப்துல்லாஹ் said...

மிக்க நன்றி

free counters

நண்பர்கள் கூட்டம்