Saturday, 5 September 2009

முஸ்லிமாயிருத்தல்

உண்மைத்தன்மை குறித்து பல நேரங்களில் சிந்திக்கிறேன். எவ்வாறு உண்மையாளனாகக் காட்டிக் கொள்வது, எப்படி மற்றவர்களுக்கு அதனை விளங்க வைப்பது. உண்மையில் நான் நல்லவன். என்னிடம் கெட்ட எண்ணங்கள் இல்லை. தீவிரவாதம் தொடர்பாகவோ அல்லது குண்டு வெடித்தல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவனோ அல்லது அப்படியான சிந்தனைகளிலோ நான் இல்லை என்று எப்படி அவர்களுக்கு விளங்கப்படுத்துவது?
அண்மையில் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்த ஒரு இரவுப் பொழுது நேரம் இரவு 11.50. நித்திரை, உடல் களைப்பு, பிரயாண சோர்வு, ஸ்ரண்டட் எயார் போட்டில் இருந்து எனது இடத்துக்கு ரக்ஸி பிடித்துப் போவதென்றால் அறுபது பவுன் செலவழிக்க வேண்டும். அவ்வளவு பணத்தைச் செலவழிக்க எனது மனைவி இப்பொழுதெல்லாம் அனுமதி தருவதில்லை. எல்லாம் கிறடிட் கிறஞ் செய்த மாயம்.
ஐரோப்பா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு வேறு வரிசை; எங்களைப்போல வெளிநாட்டு அன்னியருக்கு வேறு வரிசை. எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த இமிகிறேசன் அதிகாரி சீல் குத்திவிட்டார்.
ஆனால் பக்கத்தில் நின்ற சி.ஐ.டி.யோ யாரோ, பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஒரு ரூமுக்குள் இருத்திவைத்துக் கேள்வி கேட்டான்.
அந்தக் கேள்விகளில் பாஸ்போர்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகாரி என்னிடம் கண்டதெல்லாம் நான் ஒரு முஸ்லிமாக இருப்பதுமட்டும்தான். ஐரோப்பாவில் பிறந்த முஸ்லிமோ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லிமோ என்ற பாகுபாடு இல்லாமல் ‘முஸ்லிம்கள் என்றால் சந்தேகி’ என்ற ஒரு நிலைமை ஐரோப்பாவில் தோன்றிவருவது தெளிவாகத் தெரிகிறது.
எங்கே இருக்கிறீர்கள்? இங்கு முஸ்லீம் இளைஞர்கள் எப்படி? உங்களது பக்கத்து வீட்டுக்காரர் யார்? உங்களது மனநிலையில் வெள்ளைக்காரர் எப்படி? உங்களுக்கு இந்த நாடு பிடித்திருக்கிறதா? ஏதேனும் வெறுப்பு இருக்கிறதா இங்கு? என்று அந்த ஒஃபிஸர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உரையாடல். எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. நடுச்சாமத்தில் என்னை வைத்திருந்து என்ன கேள்வி?
முஸ்லீம்கள் என்றாலே குண்டு வைத்து விடுவார்களோ எனும் சந்தேகத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிகமாக பயப்படுகிறார்கள். அப்படி சில சம்பவங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய அதீத பற்று போன்ற விடயங்கள் இங்குள்ள மீடியாக்களில் அடிக்கடி பாவிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.
ஒரு இஸ்லாமிய இளைஞனை தாடி, தலைப்பாகை, ஜிப்பா, பைஜாமா தோற்றத்தில் கண்டால் பொலிஸில் இருந்து இமிகிறேஸன் ஒஃபிஸர் வரை மிரண்டு போகிறார்கள். இதுதான் இப்பொழுது பெரும் பிரச்சினையாக-ஐரோப்பாவில்-இருக்கிறது.
உண்மையில் இது பின்லேடன் என்ற நபரை முன்னிறுத்தியதான ஒரு தோற்றப்பாடான அச்சமாகும். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய சூத்திரதாரி என்று சந்தேகிக்கும் பின்லேடன் தாடி, ஜிப்பா, தலைப்பாகை கட்டி இருக்கிறார் என்பதற்காக அந்த உடை ஒரு தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனை என்ன வென்று சொல்ல.
முஸ்லிம்கள் பயன்படுத்தும் அல்லது மதரஸா பிள்ளைகள் பயன்படுத்தும் ரூமால் அல்லது பெரிய ஸ்காஃப் ஏதோ பயங்கரவாதத்தின்அடையாளம் போல ஒரு மருட்சி காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்துவந்த ஒருவர் எனது நண்பனுக்கு அந்த ஸ்காஃபை கொடுத்தார். குளிருக்கு கழுத்தில் சுற்றிக் கொள்ளச் சொல்லி. ஆனால் அந்தத் தமிழ் நண்பர் எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். அவர் என்னிடம் தரும்போது சொன்னார் ‘என்னத்துக்கு சும்மா வம்பு’. உண்மையில் அவர் தமிழர். இந்த விறைக்குளிருக்கு கழுத்தில் கட்டுவதற்கே பயப்படுகிறார் அந்த ஸ்காபை. அதாவது மனப்பயம் சந்து இடமெங்கும் வியாபித்துள்ளது விளங்குகிறது.
அண்மையில் சி.என்.என். தொலைக்காட்சியில் இந்த ஸ்காஃபை கட்டியிருந்த ஒரு பாடகி பயங்கரவாதத்தின் சின்னத்தை அணிந்திருக்கிறார் என்று ஊதிப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அது ஒரு பெரிய விவாதமாகவே ஆகி பிரிட்டனிலும் பெரும் செய்தியாக வந்தது.
என் பாஸ்போர்ட்டை திருப்பித்தந்த அந்த ஒஃபிஸர் சொன்னார், ‘இது ஒரு சாதாரணமான விசாரிப்புதான், குறை விளங்க வேண்டாம்’. இங்கே குறை விளங்குவதற்கு அப்பால் ஒரு முஸ்லிம் ஆளை ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் பிரச்சினை. மும்பைத் தாக்குதலின்போதும் இது தெளிவாகவே தெரிந்தது. இஸ்லாமிய தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றுதான் எல்லா டெலிவிசன், பேப்பர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன.
ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ அல்லது இந்துத் தீவிரவாதி என்றோ அல்லது பௌத்த தீவிரவாதி, யூத தீவிரவாதி என்று எந்த ஊடகங்களும் குறிப்பிட்டு சொல்வதில்லை.
இஸ்லாமிய தீவிரவாதி என்பது ஒரு சமூகத்தை வேரோடு அசைத்துப் பார்க்கிற சொல். அதுதான் இப்பொழுது உலகமெங்கும் நடக்கிறது.
ஒரு பொதுமகன் எவ்வாறு உண்மையானவன் என்பதனை பொலிஸிடமும் இமிக்கிறேசன்காரரிடமும் நிரூபிக்கிறது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது ஐரோப்பாவில்.
ஐரோப்பாவில் இருக்கின்ற அனேகமான முஸ்லிம்களின் பூர்வீகம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் என்றுதான் இருக்கின்றன. அவர்களின் பூர்வீக நாடுகளில் எல்லாமே யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தில் யாராவது ஒரு சொந்தக்காரன் ஒரு தொடுசலாக இருப்பான். அதனால் இவருக்கும் ஒரு தொடுசல் வர சாத்தியம் இருக்கிறது. அப்படித்தான் பலர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால் மதத்தைச் சொல்லி ஒரு முழுச் சமூகத்தை விரல் சுட்டி பயங்கரவாதிகள் என்று சொல்வது தினம் தினம் அதிகரித்துச் செல்கின்ற ஒரு விடயமாக மாறிவருகிறது ஐரோப்பாவில்.
ஒபாமாகூட முஸ்லிம் ஆட்கள் கூப்பிட்ட ஒரு விருந்துக்கும் இதுவரை போகவில்லை. காரணத்தையும்அவர் சொல்லவில்லை.

குடும்ப வைத்தியருக்கான 2009 விருது

From left : Mrs. Nagina Khan - senior receptionist , Rt Hon. John Mc Donnell MP (Guest of honour), Dr Shashikanth , Dr Carol Cooper , Mrs. Marie Boulter - Practice nurse and Miss Shayrun Begum - Practice Administrator

இந்த ஆண்டுக்கான சிறந்த குடும்ப வைத்தியருக்கான விருதினை எனது நண்பரும் தீபம் தொலைக்காட்சியில் வைத்திய ஆலோசனை வழங்கி வருபவருமான டொக்டர் ஷசிகாந்த் பெற்றுள்ளார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.

Monday, 17 August 2009

செயற்கை விந்துகள் துள்ளும் உலகம்

ஒரு மாதிரியாக செயற்கையான விந்தணுக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். சமூகம், குடும்பம், ஆண் பெண் உறவு, உடலுறவு எல்லாவற்றிற்கும் பெரும் சவாலாக அமையப் போகும் ஒன்று என்று இப்பொழுதே குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

யுலை 9ஆம் திகதி லண்டனில் இருந்து வெளிவரும் ‘சன்’ பேப்பரில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். ஆதாம் ஏவாள் இருவரும் காட்டுக்குள் இருக்கிறார்கள். ஏவாளை ஆதாம் கூப்பிடுகிறார். ‘நீ தேவையில்லை ஆதாம்’ என்றபடிக்கு செயற்கை விந்து டப்பாவை கையில் பிடித்தபடிக்கு ஏவாள் நிற்கிறாள்.

ஏற்கனவே சிங்கிள் மம், சிங்கிள் பாதர் என்று சிந்திக்கத் தொடங்கிய வெளிநாட்டு சமூக அமைப்புக்குள் உடலுறவில்லாத செயற்கை கருத்தரிப்பு அறிமுகமாகி டெஸ்ட் ட்யூப் பேபி என்று வந்து, அதற்கும் ஆணின் உயிருள்ள விந்தினை வயிற்றில் சுமந்து பிள்ளை பெற்றவர்கள் இப்பொழுது ஆண்களின் விந்தே தேவையில்லை எனும் அளவிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

முந்தி ஜீன்களை எடுத்து ஆடு செய்யப்போய் வத்திக்கான் திருச்சபை அல்லலோலகல்லோலப்பட்டதன் பிறகு இப்பொழுது ஒருத்தருக்கும் சொல்லாமல் ஆய்வுக் கூடங்களில் விஞ்ஞானிகள் மறு உருவங்கள் மறு வடிவங்கள் என்று ஒரு செல்லில் இருந்து மறு செல்லுக்கு என்று உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த உருவாக்கம் உலக நியதிகளோடு ஒத்துப்போக மாட்டாது என்று திருச்சபைகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுது ‘சிங்கிள் மம்’ போன்றவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தங்களது கருப்பைக் குடத்துக்குள் இனம் தெரியாத ஆணின் விந்தை வாங்கி அடைகாக்கத் தேவையில்லை.
இயந்திரங்கள் செய்த விந்தை எடுத்து வைத்துக்கொண்டு பிள்ளை பெத்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரின் விந்து என்று அல்லாடவும் தேவையில்லை.

அந்தரங்கங்கள், அருமையான உடலுறவு எனும் இன்பம் என்பவையெல்லாவற்றையும் மறுதலிக்கும் ஒரு சமூகம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
செயற்கை விந்தணுவின் மூலம் முழுமையான ஒரு பிரசவத்தை எந்தக் குறையுமில்லாமல் செய்விக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உடலுறவின் மூலமான தொந்தரவுகள் இல்லை என்றும், ஒருவருக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து வாழவேண்டுமென்ற வாழ்வை விரும்பாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமென்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இந்தச் செய்தி வந்த திங்கட்கிழமை காலை எங்கள் அலுவலகத்தில் இருந்த இருபது வயது பெண்மணி மிகவும் குதூகலமாக இருந்தாள். ‘இனி ஆண்களின் துணை தேவையில்லை’ என்றாள். ‘என்னத்துக்கு’ என்றுகேட்டேன். பிள்ளை பெறுவதற்கு என்றாள். ‘அப்போ செக்ஸுக்கு’ என்று கேட்டேன். அதற்கு மழுப்பினாள். ‘செக்ஸுக்கு ஆண்கள் வேண்டும். ஆனால் கருத்தரிப்பிற்கு செயற்கை விந்தா?’ என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை.
லண்டனில் ‘பிக்கட்லி சேக்கஸ்’ எனும் இடம்தான் விபச்சாரிகளுக்கு பேர் போன இடம். இடம் ஊத்தை. அந்த இடத்தில் போய் சுத்தினாலே தெரியும், தம்பி செக்ஸ் செய்யும் பெண்களிடத்துதான் வந்திருக்கிறார் என்று.
எனக்கு எல்லாவற்றையும் இந்த இரண்டு கண்களால் பார்த்து உணரவேண்டும் என்ற அவா இருக்கிறது. ஒரு நாள் அங்கு போனேன். சுற்றிவர செக்ஸ் சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது.
முதன் முதல் பார்க்கும்போது உண்மையில் அது ஒரு அதிசயம்தான். போய்ப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும். அங்கே மக்கள் வந்து தங்களுக்கான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு போவதை கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன், வாங்கும் பொருட்களை. வளைந்து கொடுக்கும் ஆண்குறிகள் பல வடிவங்களில் பல சைஸ்களில் இருக்கின்றன. பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்து வைத்திருக்கிறார்கள். அதனை வாங்குகிற பெண்கள் பல வயதினர். பிளாஸ்டிக்கால் செய்த, காற்று ஊதிப் பெண்ணாக்கிவிட்டு அதனோடு உடலுறவு கொள்ளத்தக்க பெண்ணுருவங்கள். உயிரற்றவை அவை. ஆனால் தனியே இருக்கும் ஆண்கள் அதனை வாங்கிப் போகிறார்கள் என்றார் விற்பனைப் பெண்மணி. காலையில் எழும்பி மூஞ்சையை நீட்டிப் பிடிக்காது, புறுபுறுக்காது, நகை நட்டு, சாறி, மூக்குமின்னி கேக்காது, சாப்பாடு குடிப்பு தேவையில்லை, உறங்காது இரவு முழுக்க பகல் முழுக்க விழித்திருக்கும் அந்த பிளாஸ்டிக் பெண்மணி. எனவே அது இலகு என்று வாங்கிப் போகிறார்கள் என்றாள் அவள். எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கக்கூடிய ‘வாய்’ போன்ற பொருட்கள், யோனி போன்ற பொருட்கள், முலையைக் கௌவிப் பிடிக்கக்கூடியதும் உணர்வுகளைத் தூண்டக்கூடியதுமான பொருட்கள் செக்ஸ் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பொருட்கள், மேகஸின்கள், புத்தகங்கள், படங்கள், ஆண்,பெண் நிர்வாணப் படங்கள் வீடியோக்கள், சீடிகள், பாட்டுகள் என்ற எப்பொழுதும் வியாபாரம் நடக்கும் கடைகள் அவை.

லெஸ்பியன், கே எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல சோடி சோடியாகவும் ஆண்கள் பெண்களும் இந்தக் கடைகளுக்கு வருகிறார்கள்.
உடலுறவின் நிலைகளை மாற்றி மாற்றி துய்த்துணர இப்போதைய தலைமுறை பழகிவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம்.
இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் ஒரு மனிதனின் செல்லை எடுத்து அதேபோல ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்பொழுது மிகவும் கட்டுக்கோப்பான ஒரு இந்து நாடென்று உணரப்படுகின்ற இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேச்சு அடிபடுகிறது.
ஓரினச் சேர்க்கை பற்றி அதன் மன உணர்வுகள் பற்றி அப்படி இல்லாத என்னைப் போன்றவர்கள் முழுமையாக தெரிவிக்க முடியாது. ஆனால் அடிமனதின் உணர்வுகளில் எதிர்ப்பின் மீதான கவர்ச்சியின்மை உணர்ச்சியின்மை பற்றி ஒரு ‘கே’யுடன் உரையாடி இருக்கிறேன். அழகான ஆணைக் கண்டால் அவரோடு உடலுறவு கொள்ளத் தூண்டும் எண்ணங்கள் தனக்கு வரும் என்று சொன்னார்.
ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான அழகான பெண்ணைக் கண்டால் எல்லாம் துடிப்பது போல; ஒருபால் உறவுக்காரருக்கு அது இருக்குமாம் ஒத்த பாலினைக் கண்டால்.
வெளிநாடுகளில் ஒரு பால் சேர்க்கைக்காரர்கள் ஒன்றாக இருந்து வாழ்கிறார்கள். ஆனால் ஆண் ஒருபால் உறவுக்காரர்களின் பின் வழி மூலமான உடலுறவால் எயிட்ஸ் போன்ற பேராபத்து தொடர்பான அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது. எச்சரிக்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் உறவு கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு பாலுறவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் வீதியில் இறங்கிக் குதூகலித்த ஆட்களின் தொகை பிரமிப்பை ஏற்படுத்தியது.
இலங்கையிலும் ஒரு பாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களவாகவே தங்கள் சோடிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாக அவர்களும் சிந்திக்கிறார்கள். கூடித் திருமணம் முடித்து வாழ்வது என்பது ஆங்கிலேய கலாச்சாரத்தில் ஒரு விசயமேயில்லை.
இங்கு சுரங்க ரயில், பஸ்களில் ஆண் ஆண், பெண்பெண் சோடிகள் கட்டிப் பிடித்து உதட்டு முத்தம் எல்லாம் கொடுத்து சந்தோசமாக பயணம் செய்வார்கள். எங்களுக்கு அதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.
எனது சின்ன மகள் கூட சொல்வான் அவை லெஸ்பியன் என்று. சில விசயங்கள் ஆரம்பத்தில்தான் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும்.
இலங்கையில் எங்கள் கிராமங்களில்கூட ஆண்கள் சின்னப் பையன்களோடு உடலுறவு கொள்வது நடந்திருக்கிறது. அது ஒருவகை உணர்வுகளின் வெளிப்பாடுதான். அவர்கள் ஆண்களோடுதான் சாகும்வரை உடலுறவு கொள்வார்கள் என்றில்லை. வளர்ந்தபிறகு கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகள் பெத்து இருப்பார்கள். அது ஒரு கவர்ச்சி மட்டும்தான்.
ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் மறுபாலில் வெறுப்புள்ளவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் முடித்து உடலுறவு கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது அதீத வளர்ச்சி, தொழில் நுட்பத் தாக்கம், துய்த்து எல்லாவற்றையும் அனுபவித்துவிடத் துடிக்கும் மனம் என்ற விடயங்களால் அன்பு, ஆதரவு என்பன எல்லாம் சிதறிப் போகின்றன. பிரபலங்களுக்கு எல்லாம் இது பெரிய தலையிடிதான். எங்களுக்கு முன்னால்இருக்கும் பெரிய உதாரணம் மைக்கேல் ஜாக்ஸனின் மூன்று பிள்ளைகள். ‘ஜாக்ஸனைப்போல ஒரு சிறந்த அப்பாவை உலகத்தில் நாங்கள் காணவில்லை’ என்று மனமுருகி பிரேதத்துக்கு முன்னால் நின்று அழுதுகொண்டிருக்க ஜாக்சனின் மனைவி ஒரு அறிக்கை விடுகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் ஜாக்ஸனுக்குப் பிறந்தது அல்ல. தான் ஜாக்ஸனின் டொக்டரோடு உடலுறவில் ஈடுபட்டுத்தான் பிறந்தது என்று.
பிள்ளைகள் நொறுங்கிப் போய்விட்டார்கள். தந்தை செத்தபிறகுகூட அந்தப் பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடுகிறார்களில்லை. இந்தப் பொறிபோதும் மீடியாக்களுக்கு. அந்தப் பிள்ளைகளை வேதனைப்படுத்துவதற்கு.

உண்மையில் உடலுறவின் தாத்பரியம், லிமிட் என்று எதனையும் வரையறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சமூகத்துக்குள் இப்பொழுது செயற்கை விந்துகளும் ஊர்ந்து ஊர்ந்து வந்துவிட்டன.
எல்லாம் செயற்கையாகவே போகப்போகிறதா என்று அச்சப்படத்தேவையில்லை என்கிறாள் மனைவி. ஏனெனில் மனம் முழுக்க காதலுடன் செய்யும் உடலுறவுக்கு நிகரில்லை. அந்த இன்பத்துக்கும் ஈடில்லை.

Sunday, 16 August 2009

அவருக்கு மட்டுமான சூரியன்

நவஜோதி அகஸ்தியரின் மகள் என்பது மட்டும் கவிதைகளை எழுதுவதற்கான அடையாளம் இல்லை. நவஜோதிக்குள் இருக்கும் ஒரு கவிதைக்குரல்தான் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’. அவரது முதலாவது கவிதைகளின் தொகுப்பு இது.
வரலாறும் அனுபவமும் எப்பொழுதும் பண்பட்ட ஆக்க இலக்கியவாதிகளைத் தரும். ‘தீபம்’தொலைக்காட்சியின் இலக்கிய நேரம் பகுதிக்கு ஆர்வமுடன் அவர் எழுதிய கவிதைகள் சிலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றிற்கு நான் ‘விஷவல்’சேர்த்து அழகு படுத்தியிருந்தேன். மனப்பதிவுகள் மனஅதிர்வுகள் வெளிப்பாடுகள் இவரது கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதைகளுக்கு என்ன வரையறை கொடுப்பது என்பது பலவாறாக விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன்று.
எல்லாக் கைகளையும் தட்டிவிட்டு அகல விரித்துக் கொண்டு ‘புதுக்கவிதை தனது ஆழத்தைப் பதித்து ஆண்டுகள் பல.
எமது ஆழ் மனதுக்குள் சிக்காராக உட்கார்ந்து கொண்டிருக்கும் தலைப்பாகைக் கவிஞன் எல்லாவற்றையும் 39 வயதுக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டான். அவனைவிட வேறு யார் உளர். (பாரதி பிறந்த நாள் - 1882 – டிசம்பர் 11. இவ்வுலகை விட்டுப் போன நாள் 1921- செப்டம்பர் 12.)
இந்தக் குறுகிய காலத்துக்குள் செய்துவிட்டுப்போன கவிதைகளால் மட்டுமே அவன் உலகம் முடியும் வரை வாழுகிறான்.
‘கவிதைகள் என்ன சாதிக்கும்’ என்பவர்களுக்காக சொன்னது அது. ஒரு மனிதனை அழியாமல் வைத்திருக்கும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு.
ஒவ்வொரு முறையும் பெண்கள் எழுதும்போது என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்கிறார்கள். எனது செவ்வியொன்றில் பிராங்போட் ரஞ்சனி சொன்னது இன்னும் மனதுக்குள் இருக்கிறது. “பெண்கள் ஆண்கள் என்று என்ன? இரண்டும் சாப்பிடுவது ஒரே மாதிரி குடிப்பது ஒரே மாதிரி சுவாசிப்பது ஒரே மாதிரி பேசுவது ஒரே மாதிரி சிரிப்பது ஒரே மாதிரி கேட்பது ஒரே மாதிரி பின்னரென்ன வேறுபாடு மேல் எண்ணம் ஆண் என்பது” .
“எழுத்துக்கள் என்ன செய்துவிடப் போகின்றன. எவ்வளவு எழுதினோம் எழுதுகிறோம் ஆனால் சமூகம் மாறுகிறதா? என்று எனது பத்திரிகையாளரான எனது நண்பி ஒருத்தி கேட்டாள். “தொடர்ந்து செய்யுங்கள் எங்காவது ஒரு அதிர்வு ஏற்படும் சிலவேளை உங்கள் பார்வை படாத இடத்தில் கூட அது நிகழலாம்”என்றேன்.

கவிதைகளை தொகுப்புக்காக தெரிவு செய்வது எப்படி என்பதில் படைப்பாளிகளின் தைரியம் எந்த மட்டில் இருக்கவேண்டும் எனப்படுவது மிகவும் குழப்பகரமானதாவே இருக்கிறது. பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும் படைப்புக்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பிற்கு எடுபடுமா என்ற அச்சம் இருக்கிறது.
தெரிவு என்பது என்ன? வெளிவந்த கவிதைகள் தானே இவை. எல்லாவற்றையும் தொகுப்பில் சேர்க்கலாமே என்பதுதான் நவஜோதியின் அபிப்பிராயமாக இருந்தது.
பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும்போது அழகாக இருக்கும் கவிதைகள் தொகுப்பில் வரும்போது அழகாக இல்லாமல் போகின்றதா? அல்லது என்ன?
கவிதைகளை எப்படி எழுதுவது என்பது குறித்து அவரவர்க்கும் ஒவ்வொரு தேவையும் ரசனையும் வெளிப்பாடும் இருக்கிறது.
நவஜோதியின் கவிதைகள் உணர்வுகளின் வடிகாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதனை உணருகிறேன்..
மன நெருடல்கள் கவிதைகளாகவோ சிறுகதையாகவோ வேறு ஏதாவதாகவோ வடிகாலாய் மொழியாய் பிரிக்கப்படும்போது ஒரு ஆறுதல் வரத்தான் செய்யும். அந்த ஆறுதல்தான்.

‘நானும் உன்னுடன் வந்திருக்கலாமேஎன நினைத்தேன்எவ்வளவு தூரம் வந்தாலும்ஓர் இடத்தில் பிரியத்தானே வேண்டும்அந்த இனிய அனுபவத்தைநெஞ்சில் தேக்கிக் கொண்டேன்புகையிரதம் போய்க் கொண்டிருந்தது.
(உனக்கு நினைவிருக்கிறதா)

ஒரு தேர்ந்த வாசகன் கவிதைகளுக்குள் தன்னை உட்புகுத்தி அதன் இடைவெளிகளை நெருக்கிக் கொண்டு ஐக்கியமாகும்போது கவிதை வெற்றியடைந்து விடுகிறது.
சில வேளைகளில் கவிதைகள் குறிப்பிட்ட எழுத்தாளரின் தன்னுணர்வால் மட்டும் வெளிப்படும்போது அது வாசகனுக்கு சலிப்பைக்கூடத் தந்துவிடும். அதற்காக எதை எழுதலாம் எதை எழுதாமல் விடலாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தரப்படக்கூடாது.
மனத்தின் பாடுகளை கவிதையாக்கி பார்ப்பதுதானே கவிஞனின் வேலை.
உண்மையில் உறவுகள் எமது பூமி தாய் நிலம் பார்க்கும் அவலங்கள் இவைகளை கவிதைகளாக வெளிப்படுத்தும் அற்புதம் கவிஞர்களுக்கு மட்டுமே வாய்த்தது.
எத்தனையோ உணர்வுகளை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்வுகள் இருக்கும் எழுதத் தெரியாது. எத்தனை பேர் மற்றவர்களை ஆகர்ஷிக்கிறார்கள்.
எண்ணிப் பார்த்தால் லட்சக் கணக்கான மனிதர்களுக்குள் ஒரு கவிஞர் உட்கார்ந்திருப்பார். உண்மையில் கவிஞன் ஒரு அற்புதம் தானே.

நெகிழும், மிதக்கும், வேதனைப்படுத்தும், எம்பிக் குதிக்கும் உணர்வுகளை கவிதைகளால் வடிய விடுவது ஒரு ஆசுவசிப்புத்தான்.

பகலில் தேவையில்லாமல்தேய்ந்து விட்டேன்
இரவின் அமைதியை தேடுகிறேன்நிம்மதியை;
இரவின் கருப்பைக்குள் தேடுகிறேன்.நினைத்துப் பார்க்கிறேன்.
வியர்த்தம் தெரிகிறது.போர் கடுமையாக இருந்தபோதுகையில் வரும் வெற்றியின் இனிமைஇஎன்னுள் பிறை தெரிகிறது நான் பிறை கண்டவள் நிலாக் கண்டவள் அல்ல... (இதயத்தின் தவிப்பு)

இது நவஜோதியின் ஆசுவாசிப்பு.


பெரும்பாலான கவிதைகளில் தனிமை மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதும் சில புள்ளிகளை மட்டும் சுற்றி வருவதும் வாசகனுக்கு சலிப்பைத் தரலாம். மொழியின் போதாமை தொக்கி நிற்பதனை குறிப்பிடாமல் செல்ல முடியவில்லை. எனக்கு. ஆழமான வாசிப்பு இன்னும் உள்வாங்குதல் மொழியை செழுமை செய்தல் போன்றவற்றை நவஜோதிக்கு சொல்லக்கூடிய ஒன்று எனலாம்.

கவிதைகளோடு வாசம் செய்வதும் கவிதைகளோடு சயனிப்பதும் எவ்வளவு சுகமானது.லண்டனில் ஒரு நல்ல கவிதை சொல்பவர் கிடைத்திருக்கிறார். அவர் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
கவிஞருக்குள் இருக்கும் இரக்கம், அன்பு, மற்றவரை கனம் பண்ணுதல்,விருந்தோம்பல் என்ற எல்லாப் பண்புகளும் நவஜோதியில் இருக்கின்றன.. ஜோகரட்னத்திலும் அது மிகையாகவே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது. இதனை மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.

Monday, 27 July 2009

லண்டனில் கார்



லண்டனில் ஒரு கார் வாங்குவதும் இலங்கையில் ஒரு யானை வாங்குவதும் சரி. இரண்டையும் கட்டி மேய்க்கும் செலவு ஒன்றுதான். லண்டனுக்கு வந்து பத்து வருடமாகியும் கார் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. காரணம் இங்கு போக்குவரத்துக்கு அவ்வளவாகப் பிரச்சினை இல்லை. முந்தி என்றால் எனது அலுவலகத்துக்கு மேலேயே ரூம் இலவசமாக தந்திருந்தார்கள். ஆகவே, படியில் இறங்கி படிகளில் ஏறினால் வீடும் அலுவலகமும் வந்துவிடும். அதற்குப் பிறகு அலுவலகமே 5 நிமிட நடை தூரத்தில் ஒரு வீடு வாங்கித் தந்தது எனக்கும் வேலை நண்பர்களுக்கும். அதில் எனக்கு ஒரு ரூம். ஆகவே, காரின் சிந்தனை வரவில்லை. இப்பொழுது இருக்கும் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 10 நிமிட தூரம்தான் நடை.
ஆனால், குடும்பத்துடன் போகவர ஒரு கார் இருந்தால் நல்லது என்று மனிசி ஒருவருடத்துக்கு முன்பு ஒரு கதையைப் போட்டது. அதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது கார் பற்றிய கவலை. லண்டனில் உள்ள குளிர் சாதாரணமானது இல்லை. சாறி உடுத்துக் கொண்டோ சாதாரணமான சேட்டை உடுத்துக் கொண்டோ இந்தக் குளிர் காலத்தில் போகமுடியாது. அதுக்கு ஹீற்றர் போட்ட ஒரு கார் இருந்தால் நல்லதுதான் என்பது மனிசியின் வாதம்.
வத்தளையில் இருக்கும் போது மனிசி படிச்சுப் படிச்சு சொன்னது, ''கார் பழகுங்கோ, கார் பழகுங்கோ ஒரு 15 ஆயிரம் ரூபாய்தானே பழகுங்கோ'' என்று ஆனால் அசட்டையீனத்தால் மனிசி சொன்னதைக் கேட்கவில்லை.இங்கு வந்ததன் பின்பு என்னதான் இலங்கையில் ஓடத் தெரிந்திருந்தாலும் இங்கு லைசன்ஸ் எடுப்பதற்கு லேனர்ஸிடம் போய் கார் பழகி சட்டதிட்டங்களை முறையாகப் படித்து அதனை அவதானித்து ஐம்பது பவுண் காசு கட்டி பின்னர் லேனர்ஸ் கார்காரருக்கு எழுபது பவுண் அளந்து போய்த்தான் எக்ஸ்ஸாமினர் 45 நிமிடம் ஓடவைத்துப் பார்த்து எல்லாம் நூற்றுக்கு நூறு சரியென்றால் மாத்திரம் அவர் லைசன்சுக்கு பாஸ் பண்ணுவார்.
எக்ஸாமினர் கண்ணுக்குள் எண்ணெயை விட்டுக் கொண்டு நாங்கள் கார் ஓடுவதைப் பார்த்துத்தான் ஓ.கே. பண்ணுவார்.ஊர் உலகத்துக்குத் தெரியாத பல பிழைகள் அவரது கண்களுக்குப் பட்டுவிடும். 16 சிறிய பிழைகளில் 15 விடலாம் என்றிருக்கிறது. அந்த சின்ன பிழைகளில் கண்ணாடி சரியாகப் பார்க்க வேண்டும், ஸ்ரேறிங் அங்கும் இங்கும் அல்லாடக்கூடாது, வெள்ளை கோட்டை மீறக்கூடாது என்று மயிர்போல சிறிய அவதானமும் தேவை.
பெரிய பிழைகளில் மஞ்சள் கோட்டில் மனிதர் இறங்கி விட்டால் காரை சிறிது மூவ் பண்ணினாலும் உடனே பெயிலாக்கிவிடுவார். றவுண்ட் எபெளட்டில் சரியான லேனை தெரிவு செய்யாவிடில் ,பொக்ஸ் ஜங்சனில் பிழையாக போய் நின்றால் வன்வே பாதையில் பிழையான பக்கத்திற்குப் போய் நின்றால் பின்னுக்கு எடுக்கும்போது சரியாக எடுக்காவிடில் பெயில் பெயில் தான்.
அதுதான் இங்கு லண்டனில் ஒருவர் லைசன்ஸை எடுத்துவிட்டால் ஒரு பெரிய பேறு பெற்றவராக தன்னை நினைத்துக் கொள்வார்.
அது சரிதான்இந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நூல்போல எல்லாம் சரியாக செய்து விட்டால் அவர் பாஸாகி விடுவார். இது ஒரு வெட்டிமுறிக்கிற வேலை இல்லைத்தான். அப்படி என்றால் இத்தனை பேர் கார் வைத்து ஓட முடியாதே.
ஆனால், எல்லாம் மிக நுணுக்கத்தில் இருக்கிறது. இரண்டு பரீட்சைகள் பாஸ் பண்ண வேண்டும். ஒன்று கேள்வி தொடர்பான பரீட்சை அதனை 35 பவுண் கட்டி பாஸ் பண்ணின சேட்டிபிக்கட்டோடுதான் அடுத்த பிறக்டிக்கலுக்கு போக வேண்டும். இவ்வாறு பல கட்டங்கள் தாண்டினால் பிறகு கார் எடுக்க வேண்டும் இதனைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னனான். கார் வாங்குவது மிகவும் சுலபம். 10 ஆயிரம் பவுண் காரையும், ஒரு ஆயிரம் பவுண் கொடுத்துவிட்டு வீட்டுக்கு கொண்டு வந்துவிட முடியும். பிறகு மாதா மாதம் கட்ட வேண்டும். இங்கே சாதாரண வருமானம் உள்ளவர்களுக்கு கார் ஒரு பெரும் சுமை. றோட் ரக்ஸ் வருடம் 220 பவுண், இன்சூரன்ஸ் வருடம் 800 பவுணில் இருந்து....., எம்.ஓ.ரி. 100 பவுண் வருடம் என் று இவ்வளவும் இருந்தால் தான் காரை றோட்டில் இறக்க முடியும்.இப்பொழுது பொலிஸ்காரரிடம் இருக்கும் சாதனம் மூலம் காரின் நம்பர் பிளேட்டை அது கண்டவுடன் இன்சூரன்ஸ், எம்.ஓ.ரி, இருக்கிறதா? றோட் ரக்ஸ் இருக்கிறதா என்று பார்த்து றீட் பண்ணி விடும். பொலிஸ்காரர் மறித்து செக் பண்ணத் தேவையில்லை.
அப்போ நான் கார் பழக ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மாதத்தில் 4 கிளாஸ் ஒரு வகுப்புக்கு 21 பவுண் கொடுத்தாயிற்று. கார் இப்பொழுது நான் சொன்னபடி கேட்கிறது. டொமினிக் ஜீவாவின் பாணியில் சொல்வதென்றால் வாலாயப்பட்டிருக்கிறது.இனித்தான் எக்ஸ்ஸாம் எடுக்க வேண்டும்.
மாத்தளையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஓடப்பழகி விட்டேன். ஆரம்பத்தில் கந்தரோடையில் இருக்கும் பொழுது மாமாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் ஒரு கிழவிக்கு இடித்த ஒரு கதையும் இருக்கிறது. மோட்டார் சைக்கிள் லைசன்சுக்கு அப்ளை பண்ணிவிட்டேன். மாத்தளையில் வைத்து,
இது நடந்தது 1983 அப்போ எனது நண்பனின் அப்பா படிவங்களையும் நிரப்பி ஒரு லேனர்ஸ் காரரை பிடித்து எக்ஸ்ஸாமினரிடம் கொண்டு போகும் போது படிவத்துக்குள் 100 ரூபா நோட்டொன்றும் வைத்து எக்ஸ்ஸாமினரிடம் கொடுத்தார். ஏன் நூறு ரூபா என்று கேட்டேன். அவர் பாஸ் பண்ணிவிடுவார் என்றார். 100 ரூபா வைக்க படிவம் எல்லாம் பெயிலானவர்களுடையதாக இருந்தது அன்று.
ஒரு சுவரில் கீறி இருக்கும் ஹைவே கோட் களை ஒரு குச்சியால் தொட்டு காட்டி இது என்ன என்று கேட்பார் அவர் 100 ரூபா படிவம் காரராக இருந்தால் பிழையாகச் சொன்னாலும் பரவாயில்லை.பின்னர் 8 போடச் சொன்னார். கால் ஒரு முறை ஊன்றிவிட்டேன். ஆனால் நான் பாஸ் தான் என்பது எனக்கு தெரியும்.ஏனெனில் 100 ரூபா காரர்களில் ஒருவராக நானும் இருந்தேன். மோட்டார் சைக்கிள் லைசன்ஸ் பிரச்சினை ஒருவாறு முடிந்தது. அன்றைக்கு மட்டும் ஒரு ஐம்பது பேர்வரை வந்திருப்பார்கள். அவருக்கு மாதம் என்ன வருவாய் லஞ்சமாக கிடைத்திருக்கும்.எம்.ஓ.ரீ என்றொரு சாமானை எனக்கு லண்டன் வரும் வரை தெரியாது. றோட்டில் ஓடுவதற்கு புகை, நச்சுவாயு, நாசமறுப்பு எதுவும் இல்லாமல் நல்ல வாகனம் என்று உறுதிப்படுத்தி பதிவு செய்த கராஜ் ஒன்று சான்றிதழ் தரவேண்டும்.இலங்கையில் இந்தியாவில் எம்.ஓ.ரீ. செய்யப் போனால் 90 வீதமான வாகனங்களை இரும்புக் கடைக்கு தான் போடவேண்டும். அவைகள் விடும் புகை மண்டலத்தில் ஒரு பெரிய ஓசோன் ஓட்டை விழுந்து விடும் அளவுக்கு இருக்கின்றது.அதுவும் ஆட்டோவில் போகும் போது லொறிகாரர் அல்லது பஸ் காரர் நேரே இருக்கைக்கு பக்கத்தில் வைத்து அக்ஸிலேட்டரை அமத்துவார் பாருங்கள். எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கிறது தினமும்.ஒரு ரெஸ்ரிங்கும் இல்லை மண்ணும் இல்லை. நாலு ரயரும் ஒரு இரும்பு துண்டும் இருந்தால் அது வாகனம். மனிதரின் சுகாதாரமாவது மண்ணாவது? ஊழலிலும் லஞ்சத்திலும் எல்லாவற்றையும் சாதித்து விடத் துடிக்கும் இலங்கையராகிய எமக்கு வேறு என்னத்தைப் பற்றி யோசிக்க.இங்கு லண்டனில் லஞ்சம் இல்லாத அதிகாரிகளால் தான் நாடு முன்னேறிக் கொண்டே போகிறது.
ஒருமுக்கியமான விடயம் எல்லா பரீட்சைகளும் பாஸ் பண்ணி ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி 2009இல் லைசன்ஸ் தந்து விட்டார் எக்ஸ்ஸாமினர் எனக்கு. இப்ப கார் என்ற சுமையை தூக்கி கொண்டு மனிஸியையும் ஏத்திக்கொண்டு திரிகிறேன்.

அறைதல் ( கவிதை)

பாய்ந்து வந்துமுகத்தில்
அறைகிறதுபனித்துளி
பொலிஸ்காரரின் சைரன் ஒலிகாதுக்குள் எரிகிறது
ஆணும் பெண்ணும்உதட்டை
உறுஞ்சி கடித்து எரிச்சலூட்டுகிறார்கள்
டயருக்கு செயின் பூட்டிபனிக்குள்
ஓடும் வாகனங்கள்கறிஸ் கறிஸ்
என்று சத்தமிட்டுகருவறுக்கின்றன
அதிகாலை என்றால்குயில்கள் கூவ வேண்டும்
குருவிகள்நெல் வயலுக்கள் குத்தி எழும்ப வேண்டும்
மெல்லிய தென்றல் முகத்தை வருட வேண்டும்
பெண்கள் குளித்து கோலம் போட வேண்டும்
முற்றத்தில் துளி நீர் தெளிக்க
பள்ளி வாசல் பாங்குகாதில் ஒலிக்க வேண்டும்
கறந்த பசும்பாலோடு சுட சுட
தேனீர் கலந்துஆவி பறக்க
குளித்த ஈர உடுப்போடு மனைவி
கொண்டு வந்து தர வேண்டும்
மெல்லமாய் சூரியன் மேலெளும்ப
வேண்டும்.
ச்சீ இதென்ன ……….

Tuesday, 14 July 2009

நாய்கள்



நாக்கு சிவந்த நாய்க்குட்டி அது
எனக்கும் எல்லோருக்குமானது அது.
புலி போலவும் இருக்கும்
சில நேரம் நரி போலவும்
கொழும்பிலிருந்துலண்டனுக்கு
வந்திருந்தது அது.
விமானத்தில் இடம் பத்தாது என்று
கப்பலில் வந்தது அது.
ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்ததில்
நாக்கு இன்னும் நீண்டிருந்தது.
எச்சிலிலும் உப்பு இருந்தது
அதன் எச்சிலைஒருநாள்
எனது சின்ன மகள்
சுவைத்து விட்டு சொன்னாள்
ஜிம்மிக்கு உப்பு ஊறுகிறது என்று.
தனிய இருந்த எனக்குநாய்பூனை
பன்றிகளில் ஆர்வமில்லை
என்கொரு காதலி இருந்தாள்
அவளிடம் ஒரு நாய்க்குட்டி இருந்தது.
சிலோனும் லண்டனும்
நாயால் சேர்ந்திருந்தன.
ஒருநாய்இன்னொரு நாயை முத்தமிட்டது
நாக்கால் முத்தமிட்டதுவெள்ளைக்காரர் போல
எல்லா இடமும்நாக்கு பரந்திருந்தது நாய்க்கு
அதுதான் அவளுக்கும் பிடிக்கும்.
சிலோன் நாய்க்கு
ஒரு சிம்மாசனம்வேண்டுமென்று
மனைவி கேட்டாள்
எனது ஈஸி செயாரை
நாய்க்கான சிம்மாசனமாக்கினாள் மனைவி.
சிலோன் நாயும்
லண்டன் நாயும்
காதலிக்க தொடங்கி விட்டன.
நான் தரையில் படுத்திருக்கிறேன்.
மனைவியும் நாயும்
கட்டிலில்படுத்திருக்கின்றனர்
மனைவி உறங்கி விட்டாள்
குறட்டை சத்தம் மட்டும்
முழு அறையிலும்கேட்கிறது.
கொர் கொர் கொர்.....................

Saturday, 27 June 2009

பறை மேளக்கலைஞன்

மேளம் உண்மையில் எனக்கு மிகவும் விருப்பமான இசைக்கருவி. இப்பொழுதெல்லாம் எமது கிராமத்தில் பறை மேளக்கலைஞர்கள் தங்கள் கலையை விட்டு விட்டு வேறு உத்தியோகத்துக்கு சென்று விட்டனர். காரணம் தமிழ் சமூகத்தில் அந்த கலைஞர்களை மதிக்காததும் உதா சீனப்படுத்தியதுமாகும். வெளிநாடுகளில் அவர்கள் தங்களது சாதியை சொல்லாமல் வாழக்கூடிய நல்ல தருணம் இருப்பதனால்அவர்கள் வெளிநாடுகளில் மதிப்போடு வாழ்கிறார்கள். இருந்தும் சாதிபார்க்கிற முட்டாள்கள் சாதியை தேடி அலைகிறார்கள். எனக்கு பல அனுபவங்கள் உண்டு எனது பெயரை அனஸ் என்று பலர் விளங்குவதில்லை அனக்ஸ் என்றுதான் நினைக்கிறார்கள். அதனால் கொக்கி போடுவார்கள் நீங்கள் எந்தப்பக்கம் அதற்கு அர்த்தம் ''நீ என்ன சாதி'' என்பதுதான். ''முட்டாள்களே முஸ்லிமில் சாதி இல்லையடா'' என்று மனதுக்குள் திட்டுவேன்.பரம்பரை தொழில் என்பது இப்பொழுது இல்லாமலாகி வருகிறது. வோஸிங் மெசின் வந்து விட்ட பிறகு கட்டாடி தொழில் குறைந்து விட்டது கொழும்பு போன்ற இடங்களில்.

இந்த பறையை இங்கே லண்டன் ஹவுன்ஸ்லோவில் கண்ட நான் உடனே எனது போனில் றைக்கோட் செய்தேன்.

14 வயதிருக்கும் கருவேலன்கண்டல் சிவாவின் அப்பா தம்பர் நாய் கடித்து செத்துப்போனார். அந்தக்காலத்தில் சிவாவின் அண்ணன்தான் வெளிநாட்டில் இருந்தவர். அதனால் தம்பர் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பபியவர் என்ற புகழோடு கருவேலன்கண்டலில் இருந்தவர். அவருக்கு நாய் கடித்து விட்டது. அவரின் பிரேதம் வலு சங்கையாக வீட்டின் முன் விறாந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சிவாவின் நண்பர்கள் என்ற படியால் செத்த வீட்டுக்கு போனோம். அப்போ அப்பா செத்த கவலையில் சிவா அழுது கொண்டிருந்தான்.

வீட்டுக்கு போனபோது முற்றத்தில் இருந்த பறை மேளக்கலைஞர்கள் மேளம் அடித்து நாங்கள் வந்த சேதியை ஊருக்கு அறிவித்துவிட்டார்கள். வீட்டு கேற்றடிக்கு யார் போனாலும் மேளமடித்து ஊருக்கு சொல்லிவிடுவார்கள். அதில் இருந்த மூத்த பறை மேளகக்கலைஞனுக்கு வயது 40 இற்கும் மேல் நன்றாக கள்ளுக்குடித்திருந்தார். இல்லாவிட்டால் அடிப்பதற்கு சுருதி சேராதல்லவா.

அவர் வெறும் மேலோடு இருந்தார் அவரின் முலை பெரிதாக இருந்தது. எங்களோடு வந்த ஒருவன் சொல்லிவிட்டான் ''அவற்றை பாச்சியை பாரடா'' எண்டு சத்தமாக. அவர் மேளம் அடிக்கும் ஒவ்வொருமுறையும் பாச்சி குலுங்கி குலுங்கி கெம்பி கெம்பி எழும்பியது.

அழுது கொண்டிருந்த சிவாவையும் கூப்பிட்டு காட்டியாச்சு. அப்பா பிரேதமாக கிட்க்கும் போது கெக்கட்டம் போட்டு சிரிக்கிறான் சிவா. அவனுக்கும் 14 வயதுதான் அப்பொழுது. பெரியவர்கள் எல்லோரும் சிவாவை கோபமாக பார்க்கிறார்கள். தேப்பன் பிரேதமாக கிடக்க மகன் அழாமல் சிரிக்கிறானே என்று. யாரிட்டை போய் சொல்லுறது அவரின் பப்பா ஆடுகிறது என்று அதுதான் அவன் சிரிக்கிறான் என்று.

பிரேதம் சுடுகாட்டுக்கு போகும் வரைக்கும் அவன் சிரித்துக்கொண்டுதான்இருந்தான்.

இங்கு ரவுஸர் உடுத்த பறைக்கலைஞன் மேளமடித்து பிச்சையெடுக்கிறார் மேளமும் நன்றாக அடிக்கிறார் நான் 20 பென்ஸ் போட்டேன்.

Monday, 22 June 2009

லண்டன் சிற்றி

லண்டனில் என்ன விசேசம் என்று 1996 ஆம் ஆண்டு அக்குறணையில் இருந்து லண்டனுக்கு வந்து திரும்பி வந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ''அங்கு இரட்டை தட்டு பஸ் இருக்கு தம்பி'' என்று. இரட்டைத்தட்டு பஸ் என்ன இங்கு கண்டியிலும் ஒன்று இருக்குதானே அது கடுகண்ணாவை கடுகஸ் தோட்டை போறது. ஆனாலும் கண்டியில் இருக்கும் 4 வருடத்தில் ஒருமுறைதானும் ஏறவில்லை அதில். ஏனெனில் பயம். போய் வந்தவர்கள் சொன்னார்கள். மேல் கூரை ஆடுகிறது என்று கண்டியில் உள்ள சிங்கள றைவர்களை நம்பி நான் அதில் ஒருநாளும் ஏறவில்லை. அது மகியாவ பாலத்துக்கு கீழால் போகும் போது பார்த்திருக்கிறேன் கூரை இடித்து விடும் என்கின்ற பயம் எனக்கு பார்க்கும் போதெல்லாம் வரும். 1958 இல் இரட்டைதட்டு பஸ் இலங்கைக்கு வந்து விட்டது. 122 ஆம் நம்பர் போட்டுக்கொண்டு மகரகம அவிசாவளைதான் முதல் பயணம்.

ஆனால் கண்டியில் அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கும் ஒரே ஒரு இரட்டைத்தட்டு பஸ் அது.

பிறகு லண்டன் வந்தாப்பிறகு இரட்டைத்தட்டு பஸ்தான் எல்லாத்துக்கும் என்றாகி விட்டது. எல்லாம் புத்தம் புதிய பஸ்கள். கூரை விழும் என்ற பயம் கிஞ்சித்தும் இல்லை. அதில் ஏறி மேல் தட்டில் முன் சீற்றில் இருந்து போவது எனக்கு அலாதி விருப்பம். ஏதோ நான்தான் அதனை ஓட்டுவது போல இருக்கும்.(ஒரு முறை ஒரு மேம்பாலத்தால் திருப்பும் பொழுது கிங்ஸ்டனில் வைத்து பாலத்தில் இடித்துவிட கூரை தனியாக வந்து விட்டது)

குட்டி பிள்ளைகள் முன் சீற்றில் மேல்தட்டில் இருந்து டுர் டுர்...... என்று ஓட்டுங்கள். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

இரண்டு வருடத்துக்கு முந்தி லண்டனில் இருந்த டீசலில் ஓடும் இரட்டைதட்டு பழைய பஸ்களை முழுமையாக நிற்பாட்டி விட்டார்கள் சேவையில் இருந்து. அது பாதுகாப்பில்லையாம். கதவால் ஓடி ஏற முடியும். டீசல் புகை விடுகிறது. என்று சொல்லி நிற்பாட்டி போட்டார்கள்.இப்பொழுது எல்லாம் புதிய பஸ்கள் தான் வலு கலாதி. (இந்த வீடியோவையும் எனது மொபைல் போனில் இரட்டைத்தட்டு பஸ்ஸின் மேல் தட்டில் முன் சீட்டில் இருந்துதான் எடுத்தேன்)

லண்டன் சிற்றிக்குள்ளால் இரட்டைத்தட்டு பஸ்ஸில் பயணம் செய்வதே அழகான அனுபவம்தான்.

இப்பொழுதும் யாரும் என்னை கேட்டால் லண்டனில் என்ன இருக்கிறது என்று.

எனது பதில் இரட்டைத்தட்டு பஸ் தான்.

Thursday, 11 June 2009

முரண் கவிதை


அவளுக்கு ஒரு போர்வை கொடுத்தேன்.

எனது தெருவால் சில நேரம் நிர்வாணமாய்ப்போவாள்
குத்திட்ட நேர் நோக்கில்
அவளைப்பற்றிய எல்லாவற்றையும்என்னுள் இறக்கியபடிக்கு
கூந்தல் குண்டிவரை நீண்டிருக்கும்
தூசியும் மண்ணும்தான் அவை வாரி முடித்தவை.

கறுத்த உடல்
இன்னும் சரியாத முலைகள்
வெறும் மேலோடு திரிவாள்.

அவள் ஒரு சீமாட்டி என்றும்
திருமணம் முடித்தவளென்றும்
அம்மம்மா சொல்வா
அவளிடம் கேட்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை

ஆனால் ஏன் நிர்வாணமாய்த்திரிகிறாய்

ஆண்கள் அவளைக்கடந்து செல்கிறார்கள்
உணர்வற்றுயோனியின் ஊத்தையும் மணமும் வெறுத்து
அவள் நடக்கிறாள்

அம்மம்மா சொன்னா
அவள் கணவன் அவளுக்கு சூனியம் செய்தவன்

ஆண்குறி பலவீனப்பட்டவன்கள்சூனியம் செய்பவர்கள்.
அவள் அழகானவளாம்அவனும் அழகானவனாம்
அவனுக்கு செய்ய இயலாதாம்
அவள் இன்னொருவனுடன் செய்தாளாம்
அவன் சூனியம் செய்தானாம்….

எனது போர்வையை அவள் தூர எறிந்து விட்டாள்.

Wednesday, 10 June 2009

'கெபாப்' எனும் எனக்கு எட்டிய கனி

எனக்கு இன்னும் மனதில் அச்சொட்டாய் இந்த விடயம் பதிந்து போய்க்கிடக்கிறது. 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் டெல்லிக்கு போயிருந்த பொழுது கெபாப் கடைகள் எங்கள் ஊரில் இருக்கும் தேத்தண்ணி கடைகள் மாதிரி றோட்டு றோட்டாய் இருந்தன. ஆனால் இலங்கையில் இருந்து போன எனக்கு அது ஒரு புதினமான சாப்பாடு ஆனால் அதனை வாங்கி சாப்பிட என்னிடம் ஒரு 10 ரூபா பணம் இருக்கவில்லை. என்னை கூட்டிக்கொண்டு போனவர்களிடமும் கேட்க எனக்கு மனமில்லை. இருந்த ஒரு மாதமும் அந்த கடைக்கு கிட்டபோய் நின்று கொண்டு அதன் வாசத்தை ஏக்கத்தோடு நுகர்ந்து விட்டு திரும்பியிருந்தேன்.

ஆனால் நான் லண்டன் வந்த பிறகு பார்த்தால் றோட்டு முழுக்க கெபாப் கடைகள்தானே. எனக்கு வலு சந்தோசம் இங்கு நாவூற மனதார சாப்பிட்டேன்.

இப்பொழுது குறைத்து விட்டேன். ஜி.பி சொல்லியிருக்கிறார் கொழுப்புணவை குறைக்க சொல்லி அதுதான்.

Tuesday, 9 June 2009

ஒரு கள்வரின் நிலை

ஹவுன்ஸ்லோ அஸ்டா சுப்பர் மார்க்கட்டில் 40 பவுண் பெறுமதியான சாப்பாட்டு சாமான்களை களவெடுத்த ஒரு ஆபிரிக்க காரருக்கு செக்கியூரிட்டிகள் அமுக்கி பிடித்து அடிக்கிறார்கள்.

Sunday, 7 June 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே அவதானிக்கபடுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். எந்த கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.


எனது வாள்

கூர்வாளொன்றுஎப்போதும் என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்துகம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்பிரியம் காட்டுவதாய்
நினைத்து குரல்வளையை கீறிவிடும்
ரோஸாக்களைக் கொய்துகைப்பிடியில்
சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்கூர்வாளொன்று…

இது அவருடைய கவிதை இது போதும் அவரை அறிவதற்கு

Thursday, 4 June 2009

ஆவி பிடித்தல் என்பது

அஞ்சலா ஜெகநாதனின் மூலிகை கூடம்

Wednesday, 27 May 2009

தாலியால் நின்று போன திருமணம்


ங்கு லண்டனில் ஒரு மாப்பிள்ளை தாலியை கட்டுவோமா வேண்டாமா என்றுயோசிக்கிறார். தனக்கு தாலி கட்ட விரும்பமில்லை. கொஞ்சம் பெரியார் கொள்கைகளோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர். ஆனால், பெண் வீட்டுக்காரர் மாப்பிள்ளை லண்டன் என்றவுடன் சம்மதித்துவிட்டனர். பெண்ணுக்கு தாலி கட்டுவதுதானே மரபு. அதுதானே முறை என்று மாப்பிள்ளையின் வீட்டுக்காரர் அக்கம் பக்கத்துகாரர் ஒரே பிடியாய் பிடிக்கினம். ஆனால், மாப்பிள்ளையோ அது பெண்ணடிமைத்தனம் என்கிறார்.தாலி கட்டினால் புருசன் சாகும்வரை கழற்றக்கூடாது என்றுதான் ஊரில் வழக்கமிருக்கிறது. கழுத்திலை லேசான சங்கிலி போடுகிறவர்களும் கழுத்திலை பாரத்தை விரும்பாதவர்களும் இப்ப உள்ள பிள்ளைகளில் வேலைக்கு போகிறவர்களும் தாலியைக் கழட்டி வீட்டில் வைத்து விட்டே வருகிறவர்களை பார்க்கிறேன்.
புருசன் மரணமானபிறகு தாலியைத் தொடர்ந்து போட்டிருக்கிற ஒரு பெண்மணியையும் இங்கே கண்டிருக்கிறேன். அவ சொல்கிறா புருசன் இருக்கும் பொழுது மட்டும் ஆர் போடச் சொன்னவை? இது வேறுமாதிரியான எதிர்ப்பு.
1954 களிலே தமிழ் நாட்டில் தாலி தொடர்பான ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கிறது. தமிழர்களிடத்தில் இந்த தாலி தொடர்பான வழக்கம் ஏதும் இல்லை என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. பெரியார் தமிழகத்தில் தாலி இல்லாத பல திருமணங்களை நடத்தி வைத்தார்.
1968ம் ஆண்டு அண்ணாத்துரை காலத்தில் தமிழகத்திலே நிறைவேற்றப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டம் தாலி இல்லாத கல்யாணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது. தமிழ் நாட்டிலே இது செல்லுபடியாகும்.
பெண்கள் விடயத்தில் ஆண்கள் செய்யும் அடிமைத்தன சாட்சியங்களுள் ஒன்று தாலி என்றே பெண்ணியவாதிகள் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு பெண்விடுதலை தொடர்பாக பேசுகிறோமோ அதுபோல தாலிக்கும் மெட்டிக்கும் விடுலை வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
கணவர் இறந்தவுடன் கைவளையல்களை உடைத்து தாலியை அறுத்து குங்குமத்தை அழித்து என்று ஒரு பெண்ணுக்கு நடக்கிற கொடுமை தாங்கொணாதது எனவே இவையெல்லாம் இருந்தால் தானே அவளை அவ்வாறு செய்ய வேண்டும். தாலி அணியாவிட்டால் அறுக்கத் தேவையில்லையே என்று கேட்கும் பெண்களின் கேள்விகளும் சரியே.

உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர புதல்வற் பயந்த சிதலை அவ்வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி கற்பினின் வழா அ.
நற்பல உதவி பெற்றோன் பெட்டும் பிணைய அக! என நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி, பல் இருங்கதுப்பின் நெல்லொரு தயங்கவதுவை நல் மணம் கழிந்த பின்றை

இந்த அக நானூற்று பாடலில் வருகின்ற திருமணக் காட்சியில் எங்குமே தாலி குறிப்பிடப்படவில்லையே. பிறகென்ன தாலி என்று அடம்பிடிக்கிறார் மாப்பிள்ளை. தாலி எங்கேயிருந்து தமிழர் வாழ்வில் புகுந்து இவ்வளவு பிரச்சினைகளையும் எழுப்புகிறது ஆண்டவனே!

தாலியால் ஒரு கல்யாணமே நின்று போனது எனக்குத் தெரியும். பெண் இங்கே புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு தங்கம் என்றாலே அலர்ஜி. அவள் ஒருவனை காதலித்தாள் பின்னர் கல்யாணம் செய்யச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கல்யாணம் செய்ய சம்மதித்தாள். ஆனால், நோதாலி என்று சொல்லிவிட்டாள். பெற்றோர் பணக்காரர் தங்களது படாடோபங்களை இங்கு வெளிநாடுகளில் காட்டுவதற்கு கோவில்குளம், சாமத்தியவீடு, கல்யாண வீடு என்று அலைந்து திரிவார்கள். ஆனால் இங்குள்ள பிள்ளைகள் அப்படியில்லை. தாங்கள் எது நினைத்ததோ அதனைத்தான் செய்வார்கள். மற்றவர்களைப் பற்றி மிகவும் பார்க்க, கேட்க மாட்டார்கள்.

பிள்ளை சொல்லிவிட்டது தங்கம் எதுவுமே வேண்டாம். தாலி உட்பட ஆனால், பெற்றோர் தாலி கட்டாமல் என்ன கல்யாணம் என்று சொல்லி வாக்குவாதப்பட கல்யாணம் நின்று போனது. பின்னர் அந்தப் பெடியனும் பெட்டையும் லிவ் இன்டு கெதர் வாழ்க்கை வாழுகினம். அவர்களைத் தடுக்க முடியாது. அப்பிடித் தடுத்தால் அது இங்கே லண்டனில் கோட்டு கேஸ் என்று பெரிய பிரச்சினையாகிவிடும். தாலி ஒரு பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் சிலருக்கு அது சுகம். பலருக்கு அது சுமையாகிக் கிடக்கிறது.

புன்னியாமீன்

நூறு புத்தகங்களை எழுதி விட்டார். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆசிரியர் என்பதற்கு அப்பால் அவர் இதுவரை 240 எழுத்தாளர்களின் முழு விபரங்களைத் தொகுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு எல்லா எழுத்தாளர்களும் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.
எனக்கு 2005ம் ஆண்டு ஒரு சிவப்பு படிவம் ஒன்று அனுப்பி வைத்தார் புன்னியாமீன். அதில் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதனைப் பார்த்தவுடன் அலுப்புத்தட்டியது. நிறைய விவரங்கள். அது இது என்று அதிகம். அப்படியே வைத்துவிட்டேன்.ஆனால், ஏதோ ஒரு எண்ணத்தில் இங்கு செல்வராஜா லண்டனில் வைத்துத் தந்த ஒரு படிவத்தை பொறுமையாக உட்கார்ந்து எழுதிக் கொடுத்தேன். (தினக்குரலில் ஞாயிறு இதழில் வந்தது)அது இப்பொழுது தொகுதி 09இல் வந்திருக்கிறது. அதனைத் திறந்து பார்த்த பொழுதுதான் உண்மையில் புன்னியாமீனின் பெரும் சேவை எனக்குத் தெரிந்தது.தமிழ் எழுத்தாளர்களின் விபரத்தை முழுமையாகப் பதிவு செய்த புன்னியவான் அவர்.
எல்லா விபரங்களையும் மிகத் தெளிவாக தொகுத்திருக்கிறார். இது எல்லா நூலகங்களுக்கும் போகிறது. எல்லோரும் பார்ப்பர். அட இத்தனை எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்களா இலங்கையில் என்று மூக்கில் விரலை வைப்பர். அது மட்டுமல்ல, மற்றவர்களைப் போல இல்லாமல் தெந்தட்டமான குறிப்புகள் இல்லாமல் விலாவாரியான குறிப்புகள் விபரங்களை சேகரித்து பதிப்பித்து இருக்கிறீர்கள். ஒரு சிறந்த தமிழ்ப் பணி செய்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் வன்னியில் தரமான கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் நிச்சயம் பதியப்பட வேண்டியவர்கள்.
கலாபூசணமே உங்களுக்கு மௌத்துக்குப் பிறகும் பேசப்படும் விடயம் இது. கை குலுக்கல்கள் உங்களுக்கு

இந்து திருமணம் தொடர்பான அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Betty LaDuke அவருக்கு நன்றி
free counters

நண்பர்கள் கூட்டம்