Monday 5 July 2010

லண்டன் வரை தொடரும் மாமியார் சண்டை




எங்களுடைய தமிழ் மாமிமார்களுக்கு ஒரு திமிர் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறது. மாமியாருக்கும் மருமகளுக்குமிடையிலான சண்டையை யார் தொடக்கினார்களோ அது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்தவாரம் லண்டனில் எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்குப் போய் இருந்தேன். அங்கு இருந்த தமிழ் மாமி தனது மருமகளோடு முறைத்துக்கொண்டே இருந்தா. அவ போன மாதம்தான் மகனின் ஸ்பொன்சரில் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தா.

இங்கு லண்டனிலிருந்து ஒருவரை ஸ்பொன்சர் பண்ணி எடுப்பதென்றால் அவ்வளவு லேசான விடயமல்ல. வங்கியில் போதுமான பணம் இருக்கவேண்டும், தொழில் வருமானம் காட்டவேண்டும், வீடு சம்பந்தமான ஆவணங்கள் கவுன்சிலில் உறுதிப்பாட்டுடன் காட்டவேண்டும், ஸ்பொன்சர் பண்ணுறவர் இலங்கையிலிருந்து அழைத்து தங்குமிடம், உணவு, போக்குவரத்துக்களை எல்லாம் சரியாக செய்வார்களா என்று உறுதிப்படுத்தும்படியான எல்லா எழுத்துமூலமான ஆவணங்களும் சரியானது என சென்னையில் உள்ள விசா ஒபிசருக்கு துல்லியமாக புரியவேண்டும்.

(சிலோன் விசா கோரிக்கைகள் எல்லாம் இப்பொழுது சென்னையிலுள்ள பிரித்தானியத் தூதுவராலயத்திற்குத்தானே போகின்றன. பின்னை சிலோனிலுள்ள பிரித்தானியத் தூதுவரை கொடும்பாவி கட்டி எரிப்பீர்கள். டேவிட் மிலிபாண்டை வெள்ளைப்புலி என்பீர்கள். இத்தனைக்கும் தூதுவராலயத்தையும் வைத்துக்கொண்டு இந்தக் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ள அவர்கள் என்ன குப்பனா, சுப்பனா?) அதுதான் விசா சம்பந்தப்பட்ட என்னவென்றாலும் வி.எப். எஸ் உடன் தொடர்புகொள்ளுங்கள். ஒன்றுக்கும் பிரித்தானிய தூதரகத்திற்கு வராதீர்கள் என்கிறார்கள். அது கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

முந்தி என்றால் விசா றிஞக்ட் பண்ணினால் கொழும்பு தூதுவராலயத்திற்கு போன் பண்ணியாவது கேட்கலாம். இப்ப வாய்மூடி இருக்கவேண்டியதுதான். ஒரு வார்த்தை யாரோடும் பேச முடியாது. அம்மம்மா ஒரு பழமொழி சொல்லுவா. வாய்க்கொழுப்பு சீலையால போகுது. அதுதான் இது. அப்பவும் விசா ஒபிசர் ஒரு கொன்சவேட்டிவ் கட்சிக்காரராக இருந்தால் வெளிநாட்டுக்காரர் ஏன் லண்டன் போகினம் என்று ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கலாம். விசாவை றிஞக்ட் பண்ணலாம். அவ்வளவு நெருக்குவாரங்களுக்குப் பிறகுதான் லண்டன் விசா கிடைக்கிறது.

மாமி ஒருவாறு லண்டன் வந்ததால், மாமி நினைக்கிறா மருமகள் தனது மகனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறா என்று. அந்த வீட்டில் நான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன். கணவரும் மனைவியும் நல்ல ஒற்றுமை. லண்டனில் இப்படி ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியான விசயம்தான். கணவன் வேலைக்குப் போக மனைவி வீட்டில்தான் இருக்கிறா. மனைவி பிள்ளைகளின் பணிவிடைகள், கணவனின் பணிவிடைகள் என்று பிசியாக இருக்கிறா. கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால்தான் இங்கு காலம் தள்ள முடியும். ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் அன்பாகப் பார்த்துக்கொள்ளும் கணவர் அவர். மனைவியும் கணவனின் சம்பாத்தியத்தில் அழகாக குடும்பம் கொண்டுபோகிறா. கணவனை அதுவேண்டும், இது வேண்டும் என்று நச்சரிப்பது இல்லை.

இங்கு லண்டனில் பக்கத்து வீட்டுக்காரர் என்ன வைத்திருக்கிறாரோ அதுவேண்டும் என அடம் பிடிக்கும் மனைவிமார்கள் மத்தியில், அதற்காக மூன்று வேலை செய்யும் கணவன்மார்கள் மத்தியில், இந்தக் குடும்பம் எனக்கு எப்பொழுதும் அபூர்வமாகவே தெரியும்.

கணவன் மனைவியின் சொல்லை மீறி எதையும் செய்வதில்லை. மனைவியிடம் கேட்டுத்தான் எதனையும் செய்வார். அதனால் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக ஓடுகிறது. இதுதான் மட்டக்களப்பிலிருந்து வந்த மாமிக்குப் பொறுக்கமாட்டன் என்கிறது. நான் அங்கு போன நேரத்திலிருந்து மாமி காலில் சுடு தண்ணி ஊத்துப்பட்ட மாதிரி ஏதோ துடித்துக்கொண்டிருந்தா. மருமகளைப் பார்த்து முறைத்தவண்ணமே இருந்தா.

நான் மாமிதானே. மகனைப் பெற்றுக்கொடுத்த நான்தானே என்னும் ஒருவகைத் திமிர் எங்களுடைய தமிழ் மாமிகளுக்குக் காலங் காலமாக இருந்து வருகிறது. இது தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு பரம்பரை வியாதி. தமிழ் நாட்டில் மாமி மருமகள் சண்டை பத்திரிகை தலைப்பு செய்திகளாக இன்னும் வெளிவருவதை நாம் காண்கிறோம். மகன் என்னும் வைரத்தை மருமகளிடம் கொடுத்ததற்காக காலம் காலமாக மருமகள் தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்றதொரு மனோபாவம் மாமியார்களிடம் இருக்கிறது.

இங்கு லண்டனில் ஒரு மாமியார் இப்படித்தான் ஊரிலிருந்து வந்தவா. வந்த நாள் முதல் ஒரே வீட்டில் கெடுபிடி. ஊரிலிருந்து வந்த நாளிலிருந்து மருமகளுக்கு ஒரே தொல்லை. அதை அங்க வை, இதை இங்கை வை என்று ஊரில் உள்ள வீட்டில் சட்டம் போடுவது போல இங்கையும் வந்த இடத்தில் சட்டம் போட்டா மாமி.

மருமகள் வேலைக்குப் போறவா. மாமியின் கெடுபிடி தாங்க முடியாமல் கணவன் வேலைக்குப் போன பிறகு அவ வேலைக்கு லீவு போட்டுவிட்டு மாமியை உட்காரவைத்து நல்ல பேச்சுக்கொடுத்தா. இவ்வளவு காலம் பொறுத்துக்கொண்டிருந்த மருமகள் அன்று சன்னதம் கொண்டுவிட்டா. இங்குள்ள விசா நிலவரங்கள் எல்லாவற்றையும் சொல்லி நன்றாக ஏசிவிட்டு கடைசியாக இதுக்குப் பிறகு வாயைத் திறந்தால் பொலிசை கூப்பிட்டு பிடிச்சுக் கொடுத்துவிட்டு விசாவையும் கான்சல்பண்ணி ஊருக்கு பெட்டி கட்டிவிடுவேன் என்று நல்ல மிரட்டல். அதுக்குப் பிறகு மாமி சாப்பாட்டுக்குத் தவிர வாயைத் திறப்பதில்லை.

மருமகளை மகளாக நினைக்கும் மாமிமார்கள் இருக்கிறார்கள். ஆனால் மருமகளின் மனநிலையைப் புரிந்துகொண்ட மாமிமார்கள் தமிழ் சமூகத்தில் குறைவு.

ஆனால் இங்கு புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு மாமியார் கொடுமை என்பது தெரியாது. அப்படி யாராவது ஒரே ஏசிக்கொண்டிருந்தால் 999 இற்கு அடித்து உளவியல் ரீதியாக என்னைத் துன்புறுத்துகிறார்கள் என்றால் பொலிஸ் வந்து உடனே அள்ளிக்கொண்டுபோய்விடும்.

கொலண்டில் ஒரு சாமத்திய வீட்டுக்குப் போயிருந்தேன். அது அந்த வீட்டில் நடக்கும் முதலாவது பிள்ளையின் சாமத்தியவீடு. மாமா, மாமியை ஊரிலிருந்து அழைத்திருந்தார் புருஷன். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வசதியாக வாழ்ந்தவர்கள். மகன் ஹொலண்ட் வந்து இப்போது சுமாரான ஒரு வாழ்க்கை வாழுகிறார்.

மகன் இங்குவந்து தங்களிலும் சாதிகுறைந்த ஒரு பெண்ணை காதலித்து கலியாணம் முடித்துவிட்டது பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனை இவ்வளவு செலவழித்து இங்கு வந்து காட்டிக் கொண்டிருந்தார்கள். மருமகளையோ அல்லது மருமகளின் வீட்டுக்காரரையோ ஒரு துளிகூட மதிக்கவில்லை. அத்தனைக்கும் மருமகளின் வீட்டில் அவள் சமைத்துப்போடுவதை சாப்பிட்டுவிட்டு அவளுக்கே பேசுகின்ற கூட்டமாக இருந்தது அது.

ஊரிலிருந்து வந்த நாள் முதல் மருமகளை மட்டந்தட்டிப் பேசுவதில்தான் நாட்களைக் கழித்தார் மாமி. சீதனம் இல்லாத இடத்தில் எடுத்தது, சாதி குறைந்த இடத்தில் கலியாணம் செய்தது என்று ஒரே புறுபுறுத்துக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்ல, சாமத்தியவீட்டுக்கு வருகிறவர் போகிறவர்கள் எல்லோரிடத்திலும் மருமகளைப்பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தா. இவ்வளவுக்கும் அந்த மருமகளை எல்லோருக்கும் தெரியும் அவ நல்லவா என்று.

இப்படி அவ மருமகளை குறை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மருமகளின் நண்பி ஒருத்தி அவள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிறவள்.

மாமி மருமகளைப்பற்றி அவவிடமும் குறையாகப் பேசினா. உடனே சாமத்திய வீட்டுக்கு வந்த எல்லோரையும் கூப்பிட்டு சத்தம்போட்டு சொன்னாள். மாமி இங்கை வந்து மருமகளை அடக்கப்பார்க்கிறா. வயதுபோயும் உந்தக் கிழவிக்கு இன்னும் புத்தி இல்லாமல் முட்டாள் தனமாக இருக்கு. எல்லாரும் கேளுங்கோ என்று சத்தம்போட்டு சொல்ல ஊர்விட்டு ஊர் வந்து சண்டை பிடிக்கிறா. இப்பவே ஹொலண்ட் பொலிசுக்கு போன் பண்ணுங்கோ. இந்த மனிசியை பிடிச்சுக்கொடுங்கோ என்று கத்திவிட்டாள்.

மாமி மானபங்கப்படுத்தப்பட்ட உணர்வோடு பிறகு மருமகளைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வாய் திறக்கவில்லை. மூன்று மாதம் இருக்க வந்தவா, 15 நாளிலேயே வீட்டைவிட்டு ஊருக்குப் பிளேன் ஏறிப்போய்விட்டா.

சீதனம் வாங்குவது, மருமகள்களை அடக்குவது என்று தொடருகின்ற மாமியார் அடக்குமுறைப் பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மாமிகள்தான் தன்னுடைய மகளைப்போல் மருமகளையும் பார்ப்பார்கள்.

எனக்குத் தெரிந்த இன்னொரு மாமி இருக்கிறா. அவவுக்கு மருமகள் என்றாலே பிடிக்காது. மூத்த மருமகளை கலியாணம் முடித்து மகள் வீட்டுக்கு மருமகளை அழைத்துவந்த முதல் நாளில் இருந்தே கெடுபிடியை ஆரம்பித்தா. ஒரே வேலை. சும்மா இருக்க மருமகளை விடவில்லை. அதை செய். இதை செய் என்று ஒரே ஆய்க்கினை. சும்மா ஒரு நிமிஷமும் இருக்க விடமாட்டா. அந்தப் பிரச்சினையில் மகன் தாயைவிட்டு தனியே வீடு எடுத்துப் போய்விட்டார்.

ஏழையாக இருந்த மகன் உழைத்து மருமகளின் சேமிப்பால் நன்றாக வளர்ந்து ஓரளவு பணம் வந்துவிட்டது. மாமி தனக்கு செய்த 10 வருட கொடுமையை நினைத்து மருமகள் இப்பொழுது மாமியோடு ஒட்டுறவு குறைவு. கதைத்தால் மட்டும் ஆ.. மாமி, எப்படி இருக்கிறீர்கள், சுகமா? அவ்வளவுதான்.

மாமிக்குத் தெரியாது மருமகள் வசதியாக மாறுவா என்று. இத்தனைக்கும் மருமகள் கொடுமைக்காரி இல்லை. மாமி போட்டு துன்புறுத்தியதால் மருமகள் இப்படி மாறிவிட்டார். அதன் பிறகு அந்த மாமிக்கு இரண்டு மருமகள்மார் வந்தார்கள். அவர்கள் மாமியை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இத்தனைக்கும் அந்த மாமி இரண்டு மருமகள்களையும் தன்னோடு வைத்திருப்பதற்கு வீடு கட்டினா. ஆனால் மாமியின் சட்டாம்பித்தனம் அந்த இரண்டு மருமகளிடமும் எடுபடவில்லை. மகன்மார் உழைத்து தன்னிடம் தரவேண்டும் என்று எதிர்பார்ககிறா. இது இந்தக் காலத்தில் நடக்கும் காரியமா?

மகன்மார் உழைத்து மனைவியிடம் தானே கொடுப்பார்கள். அதுதானே முறை. எப்படி மாமியிடம் கொடுப்பது? இதுதான் அந்த மாமிக்கு பெரும் பிரச்சினையாக மாறி இப்ப தனிமைப்பட்டுத்தப்பட்டுக் கிடக்கிறா.

அவவுக்கு மருமகனும் ஒத்து வராது, மருமகளும் ஒத்து வராது. அப்படிப்பட்ட மாமா மாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

லண்டனில் எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு மாமி ஒவ்வொரு நாளும் மருமகளை நச்சரித்த வண்ணம்தான் இருப்பா. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மருமகள் குசினிக்குள் வைத்து 'நொய் நொய்' என்று சத்தம் போட கன்னத்தைப் பொத்தி ஓங்கி ஒரு அறை. இனிமேல் கத்தினா அல்லது இதை வெளியில் சொன்னால் பொலிசீல் பிடித்துக் கொடுத்துவிடுவேன். ஒரு மிரட்டல். அவ்வளவுதான் மாமி இப்பொழுது அந்த வீட்டுக்குப் போனால் பிள்ளைப்பூச்சி போல, இருக்கிறாவா அல்லது இல்லயா எனக்கூடத் தெரியாமல் இருக்கிறது.

மருமகள் என்னிடம், என்னாலும் எத்தனை காலத்தக்கென்று பொறுத்துக்கொள்வது என்று சொன்னா.

ஊரில் உள்ள மாமிமார்கள், மருமகள் மகன் அல்லது மகள் மருமகன் சண்டையில் தலைபோட்டு நியாயம் சொல்லப் போகிறேன் என்று முட்டாள்தனமாகக் குடும்பத்தைப் பிரித்து விடுவார்கள்.

மாமி மார்கள் இப்பொழுதும் விடாப் பிடியாக மருமகள் தனது வேலைக்காரி என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். அல்லது அவர்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள். முந்தி என்றால் மாமி வீட்டின் ராசாத்தி மாதிரி எல்லா அதிகாரங்களையும் சாவிக் கொத்தாக்கி இடுப்பில் சொருகியபடி வலம் வருவா.

ஆனால் இந்ததத் தொழிநுட்ப யுகத்தில் மாமி மார்கள் மாறவேண்டும். அல்லது மாற்றப்படுவார்கள்.

மாமியின் வீடுதான் நிம்மதியான வீடு என்று சொல்லி மருமகள்மார் மாமியின் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அந்த மாமி மார்கள்தான் சிறந்த மாமிமார்கள். இல்லை என்று அடம்பிடிக்கும் மாமிமார்களை விட்டு விட்டு புறம்தள்ளியபடிக்கு மருமகள்மார் போய்க்கொண்டே இருக்கிறார்கள். கடைசி காலத்தில் நோய் வாய்ப்படுகிற நேரம் ஒரு மருமகளையாவது பக்கத்தில் இருக்கவைக்க பாசத்தோடு மாமி மார்கள் முயற்சிக்க வேண்டும். அல்லது சும்மா கஸ்டப்பட்டுச் சாகவேண்டிவரும். மாமிமார்களே கவனமாக இருங்கள்.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்