Tuesday 20 July 2010

சித்திரவதை உண்மையை உரைக்குமா?


சித்திரவதை – என்ற சொல்லைக் கேட்டதுமே பலருக்கு உயிர் உதறிவிடும். ஏனெனில் இலங்கையில் பலர் அதிலும் தமிழா்கள் பலர் சித்திரவதையை அனுபவித்துள்ளனர். இராணுவத்தினர், பொலிசார், இயக்கப் பெடியன்கள், பெட்டைகள், முதலாளிமார் என்று இந்த சித்திரவதை செய்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. வீட்டில் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவிமார் இருக்கின்றனர். மனைவியால் சித்திரவதை செய்யப்படும் கணவர்கள் இருக்கின்றனர். அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த தமிழர் ஒருவரை சந்தித்தேன். அவருக்கு நடந்த சித்திரவதைகளை சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்கு உடம்பு நடுங்கியது. அதிர்ந்தது. எனது மூளை அதனைக் கிரகிக்கும் சக்தி இல்லாததாக இருந்தது. எனக்கு இவ்வாறு நடந்திருக்குமானால் நான் தாங்கி இருப்பேனா என்று மனம் முழுக்க பதறிக்கொண்டே இருந்தேன்.இப்பொழுதும் அவருக்கு நடந்த சித்திரவதையைப்பற்றி நினைக்கும்போது முள்ளந்தண்டில் சில்லிடுகிறது. வெறுமனே ஒருவருக்கு நடந்த ஏதோ ஒன்றாக என்னால் உணர முடியாமல் இருக்கிறது. எனக்கு அல்லது உங்களுக்கு நடந்த வேதனையாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒரு மனிதனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக அவருக்கு உடல் ரீதியான துன்பத்தை அதிக பட்சமாகக்கொடுத்து உண்மையைக் கக்குவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பது என்றுதான் சித்திரவதையை மேற்கொள்கின்ற எல்லோரும் சொல்கின்றனர். கையில் கொலை ஆயுதம் இருக்கின்ற எல்லோரும் ஏதோ ஒருவகையில் ஆயுதமற்ற அப்பாவிகள்மீது சித்திரவதையைச் செய்து அந்த வலிய, அழுகுரலை, முனகலை ரசித்துச் சிரிக்கின்றனர். ஒரு மனிதன் வலியில் அவர்கள் சந்தோசத்தைக் காணும் அரக்கர் குணமுள்ளவர்களாக இருக்கின்றனர்.இராணுவத்தினர், பொலிசார், இயக்கப்பெடியன்கள், விசாரணையாளர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சித்திரவதை செய்பவர்கள் என்று சொல்ல முடியாது. சித்திரவதை செய்வதை விரும்பாதவர்களும் இருக்கின்றனர். லண்டனில் நான் சந்தித்த தமிழர் படித்தவர். அறிவானவர். சமூக ஆர்வம் கொண்டவர். அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கொழும்பில் வைத்து வெள்ளைவானில் வந்த விசாரணைப் பிரிவினரால் தூக்கிச் செல்லப்பட்டவர். அவர் புலிகளின் முகவராக கொழும்பில் இருந்து செயல்படுகிறார் என்பதுதான் விசாரணையாளருக்கு சந்தேகம்.உண்மையில் இப்படித்தான் ஆயிரக்கணக்கானவர்கள் அள்ளிக்கொண்டு போகப்பட்டனர். ஆனால் அவர்களைக் கொலை செய்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்துவிட்டார்கள். வெள்ளைவானில் கொண்டுபோன தமிழர்களின் பிரேதங்களைக் காட்டினாலாவது அவர்களின் பெற்றோர், கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், சகோதரர்கள் அந்தியட்டியை முடித்துவிட்டு செத்துப் போய்விட்டார்கள் என்று நிம்மதியாக இருப்பார்கள். இப்பொழுது இருக்கிறார்களோ? இல்லையோ? என்றுகூடத் தெரியாமல் அவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் சித்திரவதை கொடுமையானது.ஒரு மனிதனை துன்புறுத்துவதினூடாக அவர் சார்ந்த குடும்பத்தை, சமூகத்தை வேதனைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் சித்திரவதைக்காரரின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது.அடுத்தது மிகவும் மோசமான அல்லது கேவலமான ஒரு செயலாக பெரு வடிவம் எடுத்திருக்கும் சித்திரவதை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்.பெண்களை துன்புறுத்துவதன் மூலமாக ஒரு சமூகத்தை துன்புறுத்தும் அடையாளமாக சித்திரவதை செய்பவர்கள் சாதிக்க நினைப்பது பெரும் கொடூரம். இந்தவகையில் எமது தமிழ் சமூகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சித்திரவதைக்குள்ளாகி தீராத வலியை இன்னும் எங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். சிங்கள இராணுவத்தினரின், பொலிசாரின், இந்தியப் படையின் ஆயுதம் தாங்கிய இயக்கப் பெடியன்களின் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு செத்து அழிந்துபோன பெண்களின் ஆவிகளின் அலறல்கள் இன்னும் எமது வடக்குக் கிழக்குப் வெளிகளில் ஏன் இலங்கை முழுவதிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அதனை உணர முடியாதவர்கள் கடும் மனம் படைத்தவர்கள்.பாலியல் ரீதியான சித்திரவதை மூலம் சமூகத்தில் பெண்களை ஒதுக்கும் ஒரு நடவடிக்கையை சித்திரவதையாளர்கள் மேற்கொள்கின்றனர். 'அவவோ, அவ இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவவாம்' என்ற இழிபழியுடன் முதுமை வரைக்கும் ஏன் சாகும்வரைக்கும் பெண் அந்த சமூகத்தில் வாழவேண்டிய அவலம்தான் இலங்கை முழுவதும் காணக்கிடைக்கிறது.எங்களது தமிழ்க் கிராமங்களில் இவ்வாறான அழி நிலையோடு, கண்ணீரோடு காலத்தைக் கழிக்கும் பெண்கள் உண்மையில் பாவமானவர்கள். உலகம் முழுவதும் இராணுவம் அடர்ந்தோதும் இடங்களில் பெண்கள் ரீதியான சித்திரவதைகள் இந்த நிமிடம்வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கைதுசெய்யப்படும் பெண்கள் மீதான, ஆண்கள்மீதான சித்திரவதைகள் அமெரிக்க 'குவாண்டனோமோ' சிறை சித்திரவதையை ஒத்தது. இலங்கை சித்திரவதைக் கூடங்கள் என்றே சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை சோதனை செய்த வைத்தியர்கள் தங்கள் கைப்பட அறிக்கைகள் எழுதியிருக்கின்றனர். மண்டையின் பின்பகுதியில் குண்டூசி போன்ற சிறிய ஆணிகளால் அடித்து மூளையின் சவ்வுகளை சிதைத்தல், மலத்துவாரத்தில் சிறிய பைப்புக்குள் வைத்து முட்கம்பியை உள்ளேவிட்டு பைப்பை இழுத்துவிட்டு முட்கம்பியை தனியே குத வாசல் கிழிந்து வரும்படி இழுத்தல், ஆண் உறுப்பில் படிப்படியாக கூடுதல் மின்சாரம் பாய்ச்சுதல், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுவிட்டு பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பை முகத்தில் கட்டி குதிக்காலில் அடித்தல், பெண் உறுப்பில் காரமான மிளகாய் தூளை அடைத்தல், பெண்ணின் முலைக்காம்பில் மின்சார வயர்களைப் பொருத்துதல் என்று நீழுகின்ற சித்திரவதைகளில் மிகக் கடுமையானது மின்சார அடுப்பில் உயிரோடு ஒருவரைப் போட்டு கொல்லுவதை அடுத்தவர் பார்க்க வைத்தல் என்று சித்திரவதைகளின் கொடூரத்தைக் கண்ணால் கண்டு, தான் அனுபவித்தவற்றை எனக்கு அவர் சொன்னபொழுது அவர் உண்மையில் அழவில்லை. நான் தான் நடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். அவர் அனுபவித்தவர். நான் கேட்பவன். இந்த சித்திரவதைகளின் கொடூரம்பற்றி அவர் எத்தனைபேரிடம் விரிவாக சொல்லி இருப்பார்.சித்திரவதை செய்பவரும் ஒரு மனிதர்தானே. அவருக்கு எப்படி சித்திரவதை செய்யும்போது மனிதர்கள் கதறும் ஒலியைக் கேட்டுவிட்டு இரவில் தூக்கம் வருகிறது என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.
சித்திரவதை செய்யும் கூடத்தின் பொறுப்பாளர் எப்படி வீட்டில்போய் தனது குழந்தைகளுடன், மனைவியுடன் கொஞ்சி மகிழ்கிறார். எப்படி அவர் மனைவியுடன் சந்தோசமாக உடலுறவில் ஈடுபடுகிறார்? என்ற கேள்விகளை என்னால் தவிர்க்க முடியாமல் உள்ளது. உண்மையில் அவர் மனம் மரத்துப்போன ஒருவராக இருக்கிறாரா?

உலகின் எல்லா நாடுகளிலும் சித்திரவதைக்கென்றே இலங்கையில் இருப்பது போன்ற அதிகாரிகள் இருக்கின்றனர். அகதி கேஸ் வேக்கரான ஒரு நண்பரிடம் திருகோணமலையில் இருந்து ஒரு பெண் அகதியாக தஞ்சம் கோருகின்ற வழக்கோடு இங்கு லண்டன் வந்திருந்தார். அவர் தனது உடலை கேஸ் வேக்கருக்கு காண்பித்தார். பொலிசார் அவரை கைதுசெய்து விசாரணையின்போது கொழும்பில்வைத்து அவளின் உடல் முழுவதும் சிகரட்டால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.தொடை, மார்பகம், வயிறு என்று எல்லா பகுதிகளிலும் ஒரு இடம் விடாமல் சிகரட்டால் சுட்ட தழும்புகள் இருந்திருக்கின்றன அவரது உடலில். அதைவளின் முகத்தைப் பார்த்தால் சொல்ல முடியாது இவ்வளவு சித்திரவதை தழும்புகள் அவள் உடலில் இருக்கின்றன என்று. லண்டனில் நான் சந்தித்த (தொடக்கத்தில் குறிப்பிட்ட) அவர் இப்போது எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். அவரின் 34 வயது வாழ்க்கை சித்திரவதையினால் சீரழிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான். மனைவி இருக்கிறார். திருமணமாகி 4 வருடம். எதிர்காலம் சந்தோசமாக இருக்கவேண்டிய காலத்தில் ஆணுறுப்பில் அவர்கள் செய்த சித்திரவதையினால் அவருக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கான வலிமை இல்லாமல் போய்விட்டது.
எண்ணிப் பாருங்கள் அந்த இளம் குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது?
இவ்வளவு மிகக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த அவர் மற்றும் ஏற்கனவே நான் குறிப்பிட்ட இளம்பெண் ஆகியோர் புலிகள் இல்லை என்றும் பயங்கரவாதி இல்லை என்றும் பின்னர் சித்திரவதை செய்தவர்களால் விடுவிக்கப்பட்டனர்.கொடூரம் எப்படி நடக்கிறது பாருங்கள். உடலை சிதறி குதறிவிட்டு பிறகு 'சொறி, நீங்கள் குற்றவாளி இல்லை' என்று தைரியமாக எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லும் மனித அரக்கர்களை என்ன என்று சொல்வது? இதில் ஒரு மனிதன் மீதான தவறு எத்தனை பேரின் வாழ்வை பாதித்து சீர்குலைக்கிறது. இனி அவர் மீண்டு வருவதற்கு எத்தனை லட்சம் ரூபாவை செலவழிக்க வேண்டும்? அதனை யார் கொடுப்பார்கள்? சொத்துக்கள் உள்ளவர்கள் இந்தியாவில் போய், வெளிநாடு போய் நோயை குணப்படுத்த முனைகின்றனர். பணம் இல்லாத ஏழை எங்குபோய் சித்திரவதையினால் ஏற்பட்ட நோய்க்கு மருந்து தேடுவான்? எந்தவிதமான மாற்றீடும் இலங்கையில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுவதில்லை. சித்திரவதை முடிந்தவுடன் அவர்மீது குற்றம் இல்லை என்றால் அவரை தூக்கி ஒரு புதருக்குள் வீசிவிட்டு போய்விடும் நடைமுறைதான் இலங்கையில் இருக்கிறது. சித்திரவதைக்கு உள்ளான இன்னொரு தமிழரைச் சந்தித்தேன். அவருக்கு இலங்கையிலுள்ள சித்திரவதைக்கூடமொன்றில் வைத்து அடித்து முழங்காலை சிதைத்துவிட்டனர். நல்ல திடகாத்திரமாக இருந்தவர் ஊன்றுகோலுடன் வந்தபோது மனைவி அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
இப்பொழுது லண்டன் வந்து அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்தவுடன் மனைவி கொழும்பிலிருந்து உறவு கொண்டாடப் பார்க்கிறா. அவவுக்கும் லண்டன் வரவேண்டும் என்று ஆசை வந்துவிட்டதாம். இவரைவிட்டுப் பிரிந்துபோய் வேறொருவருடன் லிவ்-இன்-ரு-கெதர் வாழ்க்கை நடாத்தி வந்தவா இப்பொழுது லண்டனுக்கு வரப்போகிறேன் என்று துரத்திவிட்ட கணவனை நச்சரிக்கிறாவாம்.
சீரழிந்துபோன குடும்ப வாழ்வு, சீரழிந்துபோன சமூக வாழ்வு என்று சித்திரவதைக்கு உட்பட்டவர்கள் படுகின்ற பின் அவஸ்தை சாதாரணமானது அல்ல.
வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவஸ்தைப்பட்டு அல்லலுற்ற வாழ்வாக எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வு அலைக்கழிந்துபோய்க் கிடக்கிறது இலங்கையில். யுத்தம் முடிந்துவிட்டது இலங்கையில், ஆனால் சித்திரவதைக் கூடங்கள் இன்னமும் மூடப்படவில்லை. சித்திரவதை செய்யும் அதிகாரிகள் இன்னமும் அந்த வேலையினைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
வேதனை, துன்பம், துயரம், வெறுமை மட்டுமே சித்திரவதையினை எதிர்நோக்கிய மனிதரின் எஞ்சிய வாழ்க்கையாக இருக்கிறது. மனிதரின் நுண்ணிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான தேசமாக இலங்கை எப்போது மிளிரப் போகிறது. உண்மையில் ஏக்கத்தோடும் மன வலிமையோடும் காத்திருக்கிறோம் சித்திரவதை இல்லாத ஒரு இலங்கையைக் காணுவதற்கு.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்