Tuesday 6 July 2010

அச்சம் மிகுந்த விமானப் பயணம்



இப்போது விமானப் பயணம் என்பது பெரும் வில்லங்கமாகவே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஏயார் போட்டுக்குப் போவது ஏதோ பாதுகாப்பு மிகுந்த ஆமி காம்புக்கு போவது போலவே இருக்கிறது.
நவீன ஆயுதம் தாங்கிய பொலிசார் எப்பொழுதும் சுட்டு விடுவார்களோ என்ற பயத்தோடுதான் டிக்கட் கவுண்டர், விசா கவுண்டரில் நிற்கவேண்டி இருக்கிறது.
விமான நிலையத்தில் எந்த மகிழ்ச்சியும் எங்கும் இல்லை.விமானத்தில் ஏறி உட்கார்ந்தததன் பின்பும் யாராவது குண்டு வைத்திருக்கிறேன் என்று மிரட்டி விடுவார்களோ என்ற அச்ச உணர்வே மேலோங்கி இருக்கிறது.எங்களது நாட்டு ஏயார்போட்டுகளை விட ஐரோப்பிய, அமெரிக்கா ஸ்கன்டினேவிய நாடுகளின் ஏயார்போட்டுகள் அச்சம் மிகுந்தவையாக இருக்கின்றன. விமானப் பயணத்தை விட கப்பல் பயணம் நல்லது என்று எனது நண்பன் ஒருவன் சொன்னான்.ஆனால் கப்பலில் எத்தனை நாட்கள் என்று பயணிப்பது? எங்கும் உயிர் பயம் மிகுந்தே காணப்படுகிறது.
தீவிரவாதிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்வோரின் குறி ஆயுதம் தாங்காத ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களைக் கொண்ட அப்பாவிப் பொதுமக்கள்; மீது திரும்பியிருப்பது மிகவும் வெறுக்கத்தக்கது.
போர் செய்பவர்களும் ஆயுதம் தாங்கிய எதிரிகளை விட்டுவிட்டு கொத்துக் கொத்தாக குண்டுகளை எறிந்து அப்பாவிகளைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல விமானத்தில் பயணம்செய்யும் அப்பாவிகளைக் கொல்வதில் தீவிரவாதிகள் குறியாக இருக்கும் பொழுது கொல்லப்படுவது பொதுமக்கள்தான்.
யுத்தம், தீவிரவாதம் எதிலுமே சம்பந்தப்படாத பொதுமக்களை தமது கொலைக்களமாக்கியிருக்கும் யுத்ததாரிகள் மிகவும் கொடியவர்களாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவும் தனது வேவு பார்க்கும் முறை தோல்வியடைந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது. தீவிரவாதிகள் பொதுமக்கள் போல விமானத்தில் ஏறி வெடிபொருட்களைச் சர்வ சாதாரணமாக எடுத்து வந்து வெடிக்க வைக்கிறார்கள்.
அவசரமான பயணம், பொழுது போக்கு, வியாபாரம் என்று பயணிக்கும் மக்களோடு மக்களாக அவர்களைக் குறிவைத்துக் கொண்டு மரணமே நோக்கமாகக்கொண்டு கொலையுணர்வுடன் பயணிக்கும் மனிதரை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று விமான நிலைய செக்கியூரிட்டிகள், ஸ்கான் கமெராக்கள் எல்லாம் வழிபிதுங்கி நிற்கின்றன.
யார் கொலையாளி என்பதுதான் பெரும் சங்கடம்.
விமானத்தில் 300 பேர் இருந்தால் அவ்வளவு பேரையும் நடுவானில் வைத்து துவம்சம் செய்ய ஒரே ஒரு கொலையாளி போதும் என்பதுதான் தீவிரவாதிகளின் கொள்கை. ஆனால் செத்துப் போவது 300 பேர், நினைக்கவே நெஞ்சு பதறிப் போகிறது.
வாழ்வை வாழ ஆசைப்படும் மனிதன் எப்பொழுதும் கொலை செய்யப்பட்டு விடுவோம் எனும் அச்சமே அவனை மனநோயாளி ஆக்கிவிடும்.கொலை செய்யும் எண்ணம் எப்படி இந்த இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி வருகிறது என்பது பெரும் கேள்வியாக, விடைகாண முடியாத கேள்விகளாக இருக்கின்றன.
அதுவும் முஸ்லீம் இளைஞர்களை இவ்வாறு தற்கொலைத் தாக்குதலுக்குத் தூண்டும் காரணிகள் என்ன?
2001ஆம் ஆண்டில் இருந்து வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
செப்ரெம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் என்ற ஒரு பெரும் தீவிரவாத மனிதர் தொடர்பான கருத்தாடல்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் பொழுது அவர்தான் ஒட்டு மொத்த முஸ்லீம் இளைஞர்களையும் இயக்குகிறாரா என்ற கேள்விதான் அமெரிக்க உளவுத்துறை, பிரித்தானிய உளவுத்துறையின் மிகப் பெரிய வினா. அதற்கு விடை கடந்த பத்தாண்டுகளில் கிடைக்கவில்லை.
முதலில் ஏழை இளைஞர்கள், வேலை இல்லாத இளைஞர்கள்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற வாதம் பொய்யாகி விட்டது. கடந்த பத்தாண்டுகளில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடும் இளைஞர்கள் எல்லோருமே இங்கிலாந்தில், அமெரிக்காவில் படித்தவர்கள். நல்லவேலை செய்து கைநிறையச் சம்பாதிக்கக்கூடியவர்கள்.
காசுக்காரக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். ஆகவே இந்த இளைஞர்கள் எப்படி ஏனையவர்களைக் கொன்று தாங்களும் தற்கொலைசெய்யும் அளவிற்கு துணிகிறார்கள் என்றால் எல்லோரும் கையைக் காட்டுவது இஸ்லாம் மார்க்கம் மீதுதான். அது ஏன்?
இங்கே லண்டனில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அது மட்டுமல்ல. வெள்ளிக்கிழமை ஜிம்மா பிரசங்கத்தில் தீவிரவாதத்திற்கு இளைஞர்களைத் தூண்டும் பிரசாரங்களைப் பள்ளிவாசல் மௌலவிமார் செய்கிறார்களா என்று பிரித்தானிய உளவாளிகள் பள்ளிவாசல்களில் முஸ்லீம்களைப் போல அல்லது முஸ்லீம்களையே வைத்து கண் கொத்திப் பாம்பாகக் கண்காணிக்கிறார்கள்.
ஒற்றுமையே மிகந்த சிறந்த வழிகாட்டியான இஸ்லாம் மார்க்கம் மீது பழிபோடத் தக்க தீவரவாதத் தாக்குதலை இஸ்லாத்தின் பெயரால் செய்யும் தீவிரவாதிகள் உலகில் முஸ்லீம்களுக்குள்ள எல்லா மரியாதையையும் உரிந்து விட்டார்கள்.
ஒரு மனிதரைக் கொலைசெய்யும் எந்த உத்தரவையும் புனித குர் ஆன் எங்கும் வழங்கவில்லை.
ஆனால் முஸ்லீம்களின் நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்க என்று சொல்லப்படும் இந்தத் தற்கொலைத் தாக்குதல்களும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். இதனை மட்டுமே சர்வதேச ஆங்கில ஊடகங்கள் முதன்மைப் படுத்துகின்றன.
வெள்ளைக்காரர் மத்தியில் கைதுசெய்யப்படும் முஸ்லீம் இளைஞர்களை வைத்து ஒட்டு மொத்த முஸ்லீம்களும் கிறீஸ்தவர்களுக்கு எதிரானவர்களாக காட்ட, முஸ்லீம்கள் அனைவரும் எதிரிகளே என்ற மனப்பாங்கு தினம் தினம் அதிகரித்து வருகிறது.
ஈராக் மீதான தாக்குதல்கள், பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள் இப்பொழுது யெமன் மீதான் தாக்குதல்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதும் மேற்குலகை அழிக்க நினைக்கும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் என்றே ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.
பலஸ்தீனம் என்றொரு நாடு இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் கங்கணம் கட்டிநிற்கிறது. ஹமாஸ் மீதான கொடும் தாக்குதல்கள் அதனை நிரூபிப்பதைப் போல இருக்கிறது.
ஈரான் மீதும் தாக்குதல் தொடுத்து ஈரானைத் துவம்சம் செய்துவிடவேண்டும் என்று அமெரிக்கா உறுமிக்கொண்டிருக்கிறது.
முஸ்லீம்களின் மீதான தாக்குதல்களுக்கு இஸ்லாம் மதத்தின் மீதான தாக்குதல்களாகவும் முஸ்லீம்கள் எப்பொழுதும் ஆபத்தானவர்களாகவும் காட்ட என்னென்ன வழிகளைச் செய்யவேண்டுமோ அத்தனை வழிகளையும் அமெரிக்காவும் அதன் சார்பு ஊடகங்களும் முயற்சி செய்கின்றன.
ஈரான் மீதான் தாக்குதல் தொடுக்க ஈராக் நாட்டிற்கு சதாம் குசைனுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களைக் கொடுத்த அமெரிக்கா, ரசியா மீது குடைச்சல் கொடுத்த தலிபான்களுக்கு ஆயுதம் கொடுத்த அமெரிக்கா இப்போது அவையெல்லாம் தம்மீது திரும்பிவிட அந்த விடயத்தையே மறந்துவிட்டு திருப்பித்தாக்கும் விடயத்தினை ஊடகங்கள் மறந்தும் சொல்லவதில்லை.
எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதுதான் பேசுபொருளாக நிறைந்து கிடக்கிறது.
மதரசாக்கள் என்கின்ற அரபுக் கல்லூரிகள் பயங்கரவாதிகளை உருவாக்கும் இடங்களாக பார்க்கும் ஒரு நிலைமை உருவாகி இருக்கிறது. தாடி வைத்தவர், தலைப்பாகை அணிந்தவர், ஜிப்பா போட்டவர் என்றால் அவர் அடிப்படை முஸ்லீம் என்றும் அவரால் ஆபத்து வரும் என்றும் அஞ்சும் நிலைமை பிரித்தானியா போன்ற இடங்களில் இருக்கிறது.
பக்கத்து வீட்டில் தாடி வைத்து, பள்ளிவாசலோடு அதிகமான தொடர்புடைய முஸ்லீம் ஒருவர் இருந்தால் அண்டை வீட்டாரான வெள்ளைக்காரர் பயப்படும் அளவுக்கு ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்துகின்றன.
றோட்டில் தாடிவைத்த, தலைப்பாகை கட்டி ஜிப்பா போட்ட ஒரு முஸ்லீம் கார் ஓட்டிப் போனால் பொலிஸ்கார் ஒன்று அவரைப் பின்தொடர்ந்து நோட்டமிடுகிறது. அவர் ஏதாவது பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுவிடுவாரோ எனும் பயங்கரம்தான்.
மனிதர் மீதான் நம்பிக்கையீனம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து, நடை உடை பாவனையினை வைத்து ஒருவரின் மதத்தை வைத்து பெயரை வைத்து அச்சமடையத் தொடங்கிவிட்ட உலகம் பேராபத்தானது.
முகமட் எனும் பெயர் மேற்குலகில் அச்சம் தரக்கூடிய பெயராக வெளிப்படையாகவே இருக்கிறது.
இதில் முகமட் எனும் பெயருடையவரை விமானத்தில் ஏற்றுவதற்கு ஒன்றுக்கு மூன்றுதடவை யோசிக்கிறார்கள் விமானக் கம்பனிகள்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யெமன், மத்திய கிழக்கு நாடுகள் என்று முஸ்லீம்கள் வாழும் நாடுகளில் இருந்து ஒவ்வொருவரையும் 'பொடி ஸ்கானிங்' (Body scanning) மெசினுக்குள்ளால்தான் ஒவ்வொரு விமான நிலையத்தில் இருந்தும் அமெரிக்காவிற்கு அனுப்பவேண்டும் என்று அமெரிக்கா கடும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இது ஒரு இனம் மீதான பகிரங்கமான உளவியல் தாக்குதல். ஏழை, பணக்காரன், பிஸ்னஸ்காரன் என்றில்லாமல் எல்லோர் மீதான நடவடிக்கை இது. முஸ்லீம்கள் மனதளவில் துவண்டு போய் இருக்கிறார்கள்.
ஏற்கனவே பல கெடுபிடி விமான நிலையங்களில்: இப்பொழுது இதுவேறு வந்திருக்கிறது.
தற்கொலை என்பது இஸ்லாம் மார்க்கத்தில் ஹராமான ஒன்றாகும். அது எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படியே.கொலை செய்வது என்பது மிகப்பெரிய பாவம். ஆனால் இந்த இரண்டு எண்ணங்களையும் இளைஞர்கள் மத்தியில் விதைத்து அவர்களைத் திசைதிருப்பும் எல்லோரும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவர்கள், தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
என்னைப் போல அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போக வேண்டியிருக்கிறது.அடுத்த வாரம் நான் ஜேர்மனிக்குப் போகவேண்டும். மனிசி இப்பவே யோசிக்கத் தொடங்கிவிட்டது. போய் விட்டு வரும் வரை நிச்சயமில்லை. என்ன உலகமிது.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்