Monday 26 July 2010

பெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம்



உலகம் முழுவதும் தொடரும் பயங்கரவாதமாகவே ஆண்களின் அடக்குமுறைக்குள் பெண்கள் சிக்கிவிடுவதை காண்கிறோம். எல்லா யுத்த வெறியர்களும் ஆண்களாக இருக்க சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தும், வன்புணர்ச்சி செய்யும் கடத்திக்கொல்லும் அநியாயத்தை பெண்கள்மீது புரியும் ஆண்களை உலகம் முழுவதும் காண்கிறோம். யுத்த வெறியர்களாக ஆண்கள் இருக்கும்பொழுது பெண்களை அநியாயமாக தங்கள் யுத்தக்குள் இழுத்து பழிவாங்கும் ஆண்களைத்தான் எல்லா இடங்களிலும் காண்கிறோம்.இலங்கை, பொஸ்னியா, ஈராக், சூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தற்பொழுது கிர்கிஸ்தான் என்று முழு தேசத்திலும் பெண்கள்மீது வன்முறையை பிரயோகிக்கும் யுத்த வெறியர்களான ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.ஆண்களின் யுத்தப் பசிக்கு முதலில் இரையாவது பெண்களும் குழந்தைகளும்தான். பெண்கள் யுத்தத்தில் எந்த சம்பந்தமும் படாத பட்சத்தில் அவர்களை வன்முறைக்குள் ஆளாக்கி நேரடியாக அவர்கள்மீது அநியாயம் விளைவிக்கும் ஆண்கள் உண்மையில் கொடூரமானவர்கள்தான்.நிராயுதபாணிகளான பெண்களின்மீது ஆயுதம் தரித்த ஆண் நேரடியாக வன்முறை செய்கிறான். இதனை உலகில் கேட்க யாருமே இல்லை. எல்லா ஆட்சிக்கட்டிலும் ஆண் இருந்துகொண்டு தனக்கு தோதுவான சட்டங்களை இயற்றிக்கொண்டு பெண்களின் மீதான வன்முறையை ஏவிவிடுகிறான். யுத்த ஆயுதம் செய்வது ஆண், அணுகுண்டை செய்வது ஆண், துப்பாக்கியை செய்வது அதனை உபயோகிப்பது ஆண் ஆனால் ஏன் சாகிறோம் என்று தெரியாமல் செத்துப் போவது பெண்களும் குழந்தைகளும்.யுத்த பூமியில் அல்லது இன வன்முறையில் முதல் பலி பெண்தான். யுத்த பிரதேசங்களில் பெண் நேரடியாகப் பலிக்கடாவாக்கப்படுகிறாள். உலகில் யுத்தவாதிகள் யாரை எடுத்தாலும் அவர்கள் ஆண்கள்தான். கிட்லரிலிருந்து இன்றைய ஒபாமாவரை எல்லோரும் ஆண்கள்தான். இன்று அமெரிக்கா உலகம் முழுவதும் யுத்தத்தைப் பரப்பிவிட்டு மூள வளங்களைக் கொள்ளையிடுவதில் எவ்வளவு முனைப்போடு இருக்கிறது.தான் விரும்பும் நாடுகளுக்கு தான் விரும்பும் நேரத்தில் இராணுவத்தை அனுப்பி யுத்தம் செய்கிறது. ஆனால் அந்த தேசத்தின் இயல்பு வாழ்க்கை, அந்த கிராம மக்களின் வாழ்வு, கலாசாரம், பண்பாடு, வழிமுறைகள் எல்லாவற்றையும் பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்துவிட்டு வருகிறது.அங்கு அழிந்துபோன பெண்களைப்பற்றி, குழந்தைகளைப்பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் வந்துவிடுகிறது. பெண்கள் எப்பொழுதும் குழந்தைகளை பிரசவிக்கின்ற இயந்திரங்களாகவே ஆண் வன்முறையாளர்களால் பார்க்கப்படுகின்றனர். பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துக்கொண்டிருக்க ஆண்கள் அந்தக் குழந்தைகளை யுத்தவாதிகளாக ஆக்குகின்றனர். உலகத்துக்கு ஆக்கதாரிகளாகப் பெண்கள் இருக்க அழிக்கிறவர்களாக ஆண்கள் இருக்கின்றனர்.

எல்லா யுத்தங்களையும் எடுத்தால் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை இருக்கிறது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவு அதிகளவில் இடம்பெறுவதற்குக் காரணம் பெண்கள்மீதான கற்பழிப்பை ஆண்கள் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். யுத்தம் இடம்பெறும் உலக நாடுகளில் அதிகளவில் 80 வீதத்தினர் பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களும் சிறுமிகளும் இராணுவத்தினரான ஆண்களால் வன்கொடுமைக்கு உள்ளாவது உலகில் ஒவ்வொரு நிமிடமும் நடந்துகொண்டிருக்கின்ற கொடுமையாகும். கொங்கோவில் இடம்பெற்றபோரில் யுவிரா எனும் இடத்தில் ஒவ்வொரு நாளும் 40 பெண்கள் வீதம் 2002 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமாக ஆய்வு ஒன்று சொல்கிறது. உகண்டாவில் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்முறையில் 5 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருக்கின்றனர். சியாராலியோன் சண்டையில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஈராக்கில் அமெரிக்கப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தகவல்களின்படி 600 பேர் என்று சொல்லப்படுகிறது. தகவல்களை தெரிவிக்காதவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பொஸ்னியாவில் 1992 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கி;டத்தட்ட 60,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொசோவாவில் சேர்பிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பிள்ளைகளை வேண்டுமென்றே பெறவைத்து காலம்காலமாக துன்புறுத்தப்பட்ட பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள்.போர் நடைபெறும் இடங்களில் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை உண்டு. அரச படைகள் அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல் அல்லது விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் போன்றன போர் பாலியல் குற்றங்களுக்குக் கீழ் வருகின்றது. பரந்த அளவில் நன்கு திட்டமிடப்பட்டு நடைபெறும் இந்தக் குற்றங்கள் மனிதாபிமானத்துக்கு எதிராக பார்க்கப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். உலகின் எந்த மூலையில் என்றாலும் யுத்தம் நடைபெறும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை இராணுவம் அல்லது ஆயுதக் குழுக்கள் செய்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.உலகில் உள்ள பெண்களில் நூற்றுக்கு முப்பது பேர் ஏதாவது ஒரு தருணத்தில் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்பதுதான் கொடுமையாகும்.பெண்களுக்கெதிரான வன்முறை உலகில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்றபோதிலும் அதனை பெருமளவுக்குப் பொருட்படுத்தாத தன்மையே காணப்படுகிறது.'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும்பொழுது உலகில் நாகரிகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை', என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.இலங்கையில் சிங்கள இராணுவத்தினர் ஒன்றும் மகிந்த சொல்வதுபோல ஒழுக்கசீலர்களாகவும் வெறுமனே எதிரியுடன் மட்டும் யுத்தம் புரிந்தவர்களாகவும் மட்டும் இல்லை. ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த கொடுமைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் சமூக அந்தஸ்துக்கு அஞ்சி தங்கள் மீதான சிங்கள இராணுவம் செய்த பாலியல் வன்கொடுமைகளை வெளியில் சொல்ல அச்சப்படுவதின் காரணமாக இந்த செய்திகள் அமுங்கிப்போகின்றன.இலங்கை இராணுவத்தினர் தமிழ்ப் பெண்கள்மீது பாலியல் வன்முறையை யுத்தத்தின் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர் என அமெரிக்க ராஜாங்க திணைக்களச் செயலர் கிலாரி கிளின்ரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் புலிகள் இயக்கப் பெண்களையும் வேறு தமிழ்ப் பெண்களையும் கற்பழித்ததாக கிலாரி கிளின்ரன் சொன்னார்.ஆனால் அரசாங்கம் இந்த பாரிய வன்முறைகளை இல்லை என்று வாதிட்டது. சில வெளிநாட்டு அரசுகளின் உதவியுடன் சில அமைப்புக்கள் இலங்கை அரசுக்கும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கின்றன என்று கெகலிய ரம்புக்வெல பொய் சிரிப்போடு இதனை மறுத்திருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு.இந்திய இராணுவத்தினரும் யுத்தம் நடைபெறும்பொழுது இலங்கையில் தமிழ் பெண்கள் பல நூறு பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். ஒரு சிலரைத் தவிர அவை வெளிவராமலேயே போய்விட்டது. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்களில் ஒன்று திரண்டு வழக்குப் போட்டிருக்க வேண்டும். அதற்குப் பெரிய சட்டத்தரணிகள், தமிழ் அரசியல்வாதிகள்கூட வழிகாட்டவில்லை எமது பெண்களுக்கு.கொங்கோ நாட்டில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையாகப் போன இந்திய இராணுவத்தினர் அங்குள்ள பசி பட்டினியோடு இருக்கின்ற பெண்களின்மீதும் சிறுமிகள்மீதும் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும் இளஞ் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்முறை புரிந்ததாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வெறியர்கள் இந்த வன்கொடுமையை புரிந்துள்ளது தெரியவந்து அவர்கள்மீது விசாரணை நடாத்தப்பட்டது.2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் 100 இற்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்திய இராணுவத்தைக் குற்றவாளியாகக் கண்டனர்.ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன் இந்திய இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டார். இந்திய சட்டப்படி குற்றமிழைத்த இராணுவத்தினருக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கோரினார். இந்திய இராணுவ அமைச்சர் அன்ரனியும் முழுமையான விசாரணை நடாத்தப்படும் என்றார்.கடந்த மாதம் விசுவமடுப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் இரண்டு குடும்பப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர். இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இராணுவமோ அல்லது கெகலியவோ இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஏனெனில் அடையாள அணிவகுப்பில் இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இன்னும் முகாம்களில் இருக்கும் பெண்கள் மீதான வன்முறை தொடருவதாகவே சொல்லப்படுகிறது. பெண்களை ஒரு ஆயுதமாக இன்னும் இராணுவம் பயன்படுத்திக்கொண்டுதான் வருகிறது. சித்திரவதை மூலமாகப் புலிகளுடனான தொடர்புகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்றுவிட்டு பெண்களுக்கு அதிகபட்சமாக கற்பழிப்பு எனும் தண்டனையை கொடுப்பதுதான் பெரும் துன்பமானது.இன்னும் தமிழ்ப் பெண்கள் இராணுவ சித்திரவதைக் கூடங்களில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அல்லது எழுதினால் உடனே இலங்கை அரசின்மீது பழியைப் போடுகிறார்கள் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுதான். உலக சனத்தொகையில் பெண்கள்தான் அதிகம். அதாவது 53 வீதம். ஆனால் 47 வீதமாகவுள்ள ஆண்களால்தான் பெண்கள் ஆளப்படுகிறார்கள்.

இந்த ஆண்களின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது. ஆம் எல்லாம் இருக்கிறது. ஒபாமா நினைத்தால் இந்த உலகத்தையே அணுகுண்டுபோட்டு அழித்துவிடலாம். மன் மோகன்சிங், திமித்ரி மெத்வேதவ், கிலானி அகமதுன்னியாத், வென்ஜியாபோ என ஆண்களின் உத்தரவுக்காகத்தான் அணுகுண்டுப் பொத்தான்கள் காத்திருக்கின்றன. அழிக்கிறவர்களாக இந்த உலகத்தில் ஆண்கள்தான் இருக்கிறார்கள் பாருங்கள்.பெண்கள் எப்போதும் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்படித்தான். ஒரு சமரச நிலமைக்குப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலமை பெண்களுக்குத்தான் இருக்கிறது.அக்குறணையில் நான் இருந்தபோது எனது வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் இருந்தது. ஒவ்வொருநாளும் அந்த ஆண் குடித்துவிட்டு வந்து மாலைவேளைகளில் மூர்க்கத்தனமாகத் தாக்குவான். ஆனால் அந்த மனைவி அத்தனை அடிகளையும் வாங்கிவிட்டு மறுநாள் காலை அவனுக்கு சுடு தண்ணீர் வைத்துக் குளிப்பாட்டுவாள். உண்மையில் எனது மனதுக்குள் 16 வருடமாக கிடந்து உழலும் சோகம் இது. ஈழ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் பெரும்தொகையினர் செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கின்றனர். அவர்கள் எல்லாமே இழந்த நிலையில் வெறும் நடைப்பிணமாக திரிகின்றனர். தந்தையை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என்று துன்பம் அனுபவிக்கும் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.சிறுநீர் கழிக்கக்கூட ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இந்த உலகில் வழங்கப்படுவதில்லை என்று எனது நண்பி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள்.விதவைப் பெண்கள் மீதான ஆண்களின் பார்வையும் கொடுமையானது. விதவைப் பெண் என்றாலே எப்பொழுதும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தலாம் என்ற ஒரு மனநிலையே ஆண்கள் மத்தியில் இருக்கிறது.எப்பொழுதும் ஆண்கள் பெண்கள்மீதான அடாவடித்தனத்தை அரங்கேற்ற விரும்பியபடியே இருக்கின்றனர்.இங்கே ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு பெற்றுக்கொள்வதைப்போல இலங்கையில் சாத்தியப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தங்களுடைய சுதந்திரம்பற்றிய தொடர் கவனிப்பில் இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்களை பண ரீதியாக ஆண்களிடம் தேவையற்றவர்களாக்குகின்றனர்.உதாரணமாக பஸ் ஓடுவது பார வாகனங்கள் ஓடுவது மட்டுமல்ல பாரிய கட்டட வேலைகள், என்ஜினியர் வேலைகள் என்று தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.நான் பார்த்த ஒரு விடயம் கல்வி. கல்வியை முழுமையாக கஸ்ரப்பட்டு அடைவதன் மூலம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து பெண்கள் விடுபட்டு விடுகிறார்கள். சுயமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆசிய நாடுகளில், இலங்கையில் பெண்களுக்குக் கல்வி போதாமையுள்ளது. அல்லது மறுக்கப்படுகிறது. அதன் காரணத்தினால் எப்பொழுதும் பெண் தாழ்ந்தே கிடக்கிறாள்.பூமிக்குத் தாய் என்கின்ற ஆண் பெண்களின் மீதான வன்முறைகளை எப்பொழுது கழையப் போகிறான் என்ற கேள்விக்கு அப்பால் பெண்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும்.வன்முறையற்ற உலகத்தில் தான் இது தாச்சதியமாகும். பெண்கள் மீது வன்முறை புரிகின்றவர்களுக்குக் கடும் தண்டனை தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறை இல்லாமல் போகும்.

2 comments:

Unknown said...

கர்ப்பிணி விதவையை, 200 முறை சாட்டையால் அடித்து, தலையில் 3 குண்டுகளை போட்டு,அனுப்பி வைத்துள்ளனர் தலிபான்கள்! சேர்ந்து தவறு செய்த, ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை!

அ.முத்து பிரகாஷ் said...

//நான் பார்த்த ஒரு விடயம் கல்வி. கல்வியை முழுமையாக கஸ்ரப்பட்டு அடைவதன் மூலம் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து பெண்கள் விடுபட்டு விடுகிறார்கள். சுயமான முடிவுகளை எடுக்கிறார்கள். //

கல்வியின் மூஒலமாக அடையும் பொருளாதார சுதந்திரம் பெண் விடுதலைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடும். கற்றறிந்த ஆண்களின் மனதிலும் பெண்களை தங்கள் உடமையாக கருதும் மனோபாவம் இருப்பதை மறுக்க முடியாது. காத்திரமான இடுகை.நன்றி தோழர்.

free counters

நண்பர்கள் கூட்டம்