Tuesday 20 July 2010

மெலிந்த உடலெனும் மோகம்



சுவிற்சலாந்துக்கு அண்மையில் போனபோது எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கும் போனேன். இவர் எனது நீண்டகால நண்பர். அக்குறணையில் நானும் அவரும் தொண்ணூறுகளில் சுற்றித் திரிந்தோம்.பின்னர் அவரின் விதியும் ஊரெல்லாம் அழைத்துச் சென்றது. எனது விதியும் நாடு நாடாக அழைத்துச் சென்றது. நீண்ட காலத்திற்குப் பிறகு இரண்டு பேரின் குடும்பங்களும் சுவிற்சலாந்தில் சந்தித்து மகிழ்ந்து போனோம்.அவருக்கு ஒரு மகள். வயது ஆறு. நண்பரின் மனைவியின் பிரச்சினை என்னவென்றால், ஆறு வயது மகள் சோறு சாப்பிடுகிறாள் இல்லை என்பது. இது ஒரு பெரிய கவலை அவவுக்கு.'ஏனடி சோறு சாப்பிடுகிறாய் இல்லை' என்றால் சோறு சாப்பிட்டால் குண்டாகி விடுவாளாம். இப்பவே முருங்கைக் காய் மாதிரி இருக்கிறாள். சோறினைத் தொட்டுக்கூடப் பார்க்கமாட்டாள். காலையில் சலட், பகலுக்கு சலட், இரவுக்கும் சலட். இப்படி சலட்டை மட்டுமே சாப்பிடும் ஒரு மனிசியாக அவள் மாறிவிட்டாள்.அவள் படிக்கும் பாலர் பாடசாலையில் பிள்ளைகள் கூடிப் பேசும்போது யாரோ சுவிஸ் நாட்டுப் பிள்ளை சொல்லிவிட்டது. சோறு சாப்பிட்டால் உடம்பு குண்டாகிவிடும் என்று.அதனை அப்படியே பிடித்துவைத்துக்கொண்டு அவள் அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனையும் சொல்லி சொல்லி சோறு சாப்பிடாமல் பண்ணிவிடுவாளோ இவள் என்று அம்மாவுக்குக் கவலை.சுவிசுக்குப் போனபோது ஜெனிவாவில் ஒரு பிடி சோறு சாப்பிடவேண்டும் என்று நானும் மனைவியும் கடை கடையாக அலைந்தோம். இது ஜெனிவாவைச் சுற்றிப் பார்க்கப்போனபோது நடந்தது.ஒரு மாதிரி ஒரு மொறொக்கோ காரனின் கெபாப் கடையில் சோறு இருந்தது. பெரிய பெரிய அரிசி எங்கிருந்து இறக்கினார்களோ தெரியாது. வாயில் ஆசையோடு வைத்தால் 'சப்' என்று இருந்தது அந்தச் சோறு.எனக்கெல்லாம் மூன்று நேரத்தில் ஒரு நேரம் சோறு உள்ளிறங்க வேண்டும்.ஊர்க் குத்தரிசியை நினைத்தால் இன்னும் நாவில் நீர் ஊறுகிறது. அதன் மணமும் குணமும் தனி. கொழும்பில் இருக்கும்போது சிறி கதிரேசன் றோட்டில் இருக்கும் யாழ்ப்பாணம் சாப்பாட்டுக் கடையில் குத்தரிசி சோறும் மீன் குழம்பும் சாப்பிட்டது இன்னும் ருசி அடி நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.இப்பத்தைய பிள்ளைகள் சோறை வெறுக்கிறார்கள். அளவாக சாப்பிட்டு உடம்பை 'சிக்' என்று வைத்திருப்பதைவிட்டு விட்டு 'டயட்' என்ற பெயரில் உடம்பை பாரமில்லாமல் ஆக்குகிறார்கள். அதனால் பல நோய்கள் அண்டும் ஆபத்து இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி கவலைப்படாமல் உடலை மெலிய வைப்பதில் மட்டுமே ஆர்வம் கொள்கின்றனர்.மெலிந்த இடை, பெரிய மார்பு, ஒல்லியான உடல்வாகு என்ற நிலமைதான் மேற்குலகில் பெண்கள் மத்தியில் உள்ள வாய்ப்பாடு.ஆனால் எமது ஊர்ப் பிள்ளைகள் இந்த மூன்றையும் அடைவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.இந்திய, இலங்கை ஆண்களுக்கு கொஞ்சம் குண்டான, மார்பு பெருத்த பெண்களைத்தான் பிடிக்கிறது. சினிமாவிலும் பாருங்கள். நமீதா, முன்பு குஷ்பு என்றுதான் ரசிக ஆண்கள் இருக்கிறார்கள்.டயட் டயட் என்று உடலை மெலிய வைப்பது மட்டுமில்லமால் வளரும் இளம் பெண்கள் மிகவும் ஆரோக்கியம் பேணவேண்டும். அதோடு சத்தான உணவும் சாப்பிடவேண்டும். இல்லாவிடில் அவர்களின் உடலுக்கு பேரிடர் வந்துவிடும்.
உடம்பும் மெலிந்து இருக்கவேண்டும். ஆனால் சுறு சுறுப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே வைத்தியர்களின் ஆலோசனை.இளைய பெண்களே 17 வயதில் உங்கள் எலும்புகள், தோல், உயரம், வளர்ச்சி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வருகிறது. ஆகவே இந்தக் காலங்களில் நல்ல சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.பெண்களைப் பொறுத்தமட்டில் உடலின் கொழுப்புச் சத்து மிகவும் முக்கியம். அதாவது இனப்பெருக்க உறுப்புக்கள் அமைப்பாக வளர்வதற்கு மிகவும் முக்கியம். இளம் பெண்கள்(நான் சொல்வது 13 முதல் 17,18 வயதுவரையானோர்) மெலிதாக இருக்கவேண்டும் என்பதற்காக சரியான சாப்பாடு சாப்பிடாமல் இருக்கிறார்கள். இது சாதாரண விடயமல்ல. சரயான சாப்பாடு சாப்பிடாமல் விட்டால் முதலில் பூப்பெய்தலில் பிரச்சினை ஆரம்பிக்கும் பிறகு மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும். சரியான சத்துணவுகளை சாப்பிடாமல் விடுவதன் காரணமாக இரும்புச் சத்தும் கல்சியமும் உடம்பில் குறைந்து பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.வளரும் பிள்ளைகளினுடைய ஒவ்வொரு நாள் சக்திக்கும் 2500 கலோரி தேவை. இது குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாச்சத்து ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளவேண்டும். அரிசி அல்லது கோதுமை மாப்பண்டங்கள் நல்லது. இதில் 10 முதல் 12 வயதுடைய பிள்ளைகள் நாளொன்றுக்கு 320 கிராம் வரை சாப்பிடவேண்டும். 13 முதல் 15 வரையான பிள்ளைகள் 350 கிராம் அளவில் சாப்பிட வேண்டும். அதற்காக தினமும் தராசு வைத்து நிறுத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.ஒரு நாள் அளவு பார்த்தால் தினமும் அந்த அளவு சாப்பிடலாம்தானே. பருப்பு, பயறு வகைகள் தினமும் 70 கிராம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் புரதம் கிடைக்கும்.இறைச்சி, மீன் ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய துண்டு அதாவது 60 கிராம் அளவில் சாப்பிட வேண்டும். மரக்கறிக்காரர் என்றால் பட்டாணிக்கடலை 50 கிராம் சாப்பிடுங்கள்.கட்டாயம் 10 முதல் 18 வயதுள்ள சிறுமிகள் நாளொன்றுக்கு ஒரு லீற்றர் பால் குடிக்கவேண்டும். ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ் பால் குடியுங்கள். அது ஒரு லீற்றர் பாலுக்கு சமனாகிவிடும்.ஒவ்வொரு நாளும் உணவில் கீரை சேர்க்க வேண்டும்.
பப்பாசிப்பழம், மாம்பழம், வாழைப்பழம் தினமும் சாப்பிடுங்கள். இது எங்கள் ஊர்களில் கிடைக்கும். அலட்சியப்படுத்தக்கூடாது. புளிப்புள்ள பழங்கள் சாப்பிடலாம். அதில் விற்றமின் சி கிடைக்கும். ஆகவே உடல் மெலிந்து போக சாப்பிடாமல் பட்டினி கிடந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவேண்டும். அல்லது நோய் வந்து அதனை மாற்ற முடியாமல் அவதிப்படுவீர்கள்.எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண்மணி. கலியாணம் முடிக்கிற வயது. உடல் மெலிந்து இருக்கவேண்டும் என்பதற்காக காலையில் சாப்பிடமாட்டா. சாப்பிட்டாலும் ஒரே ஒரு பாண் துண்டு. பகலுக்கு சூப் மட்டும் குடிப்பா. அதுவும் கடையில் விற்கின்ற உடனடி சூப் பக்கற்றை வாங்கி வந்து தண்ணியில் சூடாக்கி குடிப்பா. இரவு சாப்பிடுவதில்லை.'நல்லா சாப்பிடு உடம்பு போய்விடும்' என்று எங்கள் ஒபிசில் உள்ளவர்கள் ஒரே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவ ஒரு சிரிப்போடு போய்விடுவா. வயிறு உள்ளேபோய் அழகாகத்தான் இருந்தா. ஆனால் வந்தது ஒரு நோய். துவண்டு வழுந்துவிட்டா. அந்த நோயிலிருந்து இன்னமும் மீளவே இல்லை.
வயிற்றில் புண் வந்துவிட்டது. கை நடுக்கம், வாந்தி என்ன உணவை இப்பொழுது சாப்பிட்டாலும் உடனடியாக வயிற்றாலை போய்விடும். ஒரு சிறங்கை மருந்து உட்கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டா இப்பொழுது.
அதோடு இன்டர்நெற்றில் போய் தனக்கு என்ன வருத்தம் என்று வெப் சைட்டுக்களில் தேடி அருக்கிறா. அவ ஏற்கனவே மனது பலவீனம் உடையவா. வெப் சைட்டில் அவவினது வருத்தத்திற்குப் பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் இருக்கிறது என்று எழுதியிருக்கிறதைப் பார்த்துவிட்டு இப்பொழுது மனப் பிரமை பிடித்தவ மாதிரி இருக்கிறா.
'இன்டர்நெற்றில் போய் நோய் அறிகுறிகளைத் தேடுவதை நிறுத்து', என நான் ஏசினேன்
வெப் சைட்டில் பொதுவான அறிகுறிகளும் நோயும்தான் போட்டிருப்பார்கள். அது அப்படியே இருக்கும் என்று உடனடியாக நம்புவது மடத்தனம்.எனது நண்பன் ஒருவனுக்கு இரவுக் காய்ச்சல். தொடர்ச்சியாகவே இருந்தது. இதற்கு இங்கே லண்டனில் வைத்து மருந்து எடுத்தான்.
அவனின் மனிசி வெப்சைட்டில் போய் இரவுக் காய்ச்சல் என்ன நோய் என்று தேடினால் அது கான்சருக்கான அறிகுறி என்று இருந்தது. மனிசி குழம்பி, நண்பர் குழம்பி தனக்கு கான்சர் என்று அழுது இப்படி அல்லாடிக்கொண்டிக்கும்பொழுது குடும்ப வைத்தியர் ஏசி அனுப்பியிருக்கிறார். முதலில் வெப் சைட்டில் நோய் அறிகுறியை வைத்துத் தேடுவதை நிற்பாட்டச் சொல்லி.யாருக்குத்தான் செத்துப்போக விருப்பம். கான்சர் என்று பயந்தவன் தற்போது உசாராகி வேலை செய்கிறான்.லண்டனில் ஒரு பெண்மணி தனது மகன் மெலிந்துபோய் இருக்கிறான் என்று வெப் சைட்டில் போய் தேடி மருந்துகள் வாங்கிக் கொடுத்தா. அவன் இப்பொழுது குண்டாகி குண்டாகிக்கொண்டு வருகிறான். ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இப்பொழுது அந்தப் பெண் தலையிலடித்துக்கொண்டிருக்கிறா. டொக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள்.மகனின் உடல் பருத்துக்கொண்டே வருகிறது. இது அவனுக்குப் பேராபத்தை விளைவிக்கப்போகிறது. உலகம் முழுவதும் இளம் பெண்கள் மெலிந்த தோற்றமுள்ளவர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். அதற்கு சரியான போதுமான உணவு, நடைப்பயிற்சி, தேகப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்கிறார்களில்லை.
வெறுமனே இலகுவான முறை என்று சாப்பாட்டை ஒதுக்குகிறார்கள். இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எமது சிலோன் பெண்கள் கலியாணம் முடிக்கும்வரை எலும்பும் தோலுமாக இருப்பார்கள். மெலிந்து துடி இடையோடு இருப்பார்கள். என்ன, மாயமோ மந்திரமோ கலியாணம் முடிந்து ஒரு பிள்ளை பெற்றவுடன் குண்டாகிப் பருத்து விடுவார்கள். ஆனால் வெள்ளைக்காரர் ஐந்து, ஆறு பிள்ளைகளைப் பெற்றாலும் அதே மெலிவாகத்தான் இருக்கிறார்கள்.உடல் என்பது கைக்குள் வைத்து பாதுகாப்பவேண்டிய பொக்கிசம். அதனை சீரழிய விடக்கூடாது.'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது உடலைப் பொறுத்தவரை பொய்யானதல்ல.

1 comment:

M.Rishan Shareef said...

நல்ல பதிவு.
இப் படங்களையும் பாருங்கள்

உடல் மெலிவை ஊக்குவித்தால் 2 வருட சிறைத்தண்டனை
http://rishansharif.blogspot.com/2008/04/2.html

free counters

நண்பர்கள் கூட்டம்