Thursday 14 May 2009

எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்

ஒன்பது வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி லண்டன் தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம். எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு வேலைகள். என்னை மிகவும் அசௌகரியப்படுத்தியிருந்தன. ஒன்று சிப்ஸுக்காக உருளைக்கிழங்கு வெட்டுவது. மற்றது பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கஸியர். எத்தனையோ படித்தவர்கள் இந்த வேலைகளில் இருந்து தான் வேறு வேலைகளுக்கு மாறுகிறார்கள். லண்டன் போனவுடன் கிடைக்கும் வேலைகளில் உடனே கிடைப்பது பெற்றோல் ஸ்ரேசனில் தான். ஏனெனில் பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் அதிகமாக தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கும். அதுவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகவே அதில் ஏதோ ஒரு வேலை கிடைக்கும். நண்பர்கள் தெரிந்தவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தரும்படி கேட்டால் எங்காவது பெற்றோல் நிலையங்களில் வேலை கிடைக்கும். அடுத்து நாம் தேடிப்போய் இந்தியாக்காரரிடம் வேலை கேட்க வேண்டும். அவர்கள் ஹிந்தி காரராக இருப்பார். எனக்கு ஹிந்தி தெரியும்

லண்டனில் தீபம் தொலைக்காட்சி ஆரம்பித்துவிட்டதாக அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எப்படியும் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். விண்ணப்பப்படிவத்தை நிரப்பி எனது சர்ட்டிபிக்கட்டுகள், நான் எழுதிய ஆக்கங்கள் எல்லாம் வைத்து அனுப்பியிருந்தேன். நேர்முகம் மற்றும் ஸ்கிறீன் டெஸ்ட் போனபோது மீடியா மனேஜராக இருந்த சபனீதா மனோகர் சொன்னா இந்தளவு சேர்ட்டிபிக்கட்டுகளை தான் பார்க்கவில்லை. அவ்வளவு பெரியகட்டு.
இலங்கையில் இருக்கும் பொழுது பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலிடம் பெற்ற நிறைய சேர்ட்பிக்கட்டுகள். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இரண்டு வருடம் திரு. உருத்திராபதியோடு சேர்ந்து “விடியலை நோக்கி” எனும் சமாதான நிகழ்ச்சி இன்னும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்த அனுபவம். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து காலப்பகுதியில் இருந்து இலக்கிய கவிதா அனுபவம் எல்லாவற்றையும் சேர்த்து களம் ஒன்றுக்காக தேடிக்கொண்டிருந்த போது லண்டனில் “தீபம்” தொலைக்காட்சி ஒரு வரமாகத் தான் கிடைத்திருந்தது.
வானொலியை விடவும் தொலைக்காட்சி உண்மையில் ஒரு அறிவிப்பாளனின் அத்தனை உணர்வுகளையும் அச்சொட்டாய் வெளிக்கொணர்ந்துவிடும். கவலை சந்தோஷம், தடுமாற்றம், தயாரின்மை, எல்லாவற்றையும் முகத்தினூடாக வெளிக்கொணரும் ஒரு சாதனம் தொலைக்காட்சி கமெரா. சில நேரம் கவலையாய் இருக்கும் மனது. ஆனால் நேரடி ஒளிபரப்பின் போது காண்பிக்க முடியாது. சிரித்தபடி “வணக்கம் நேயர்களே” என்று சொல்ல வேண்டும். சில நேரம் தயாரில்லாமல் இருக்கும் மனது ஆனால் எதற்கும் நான் தயார் என்றபடிக்கு “வணக்கம் நேயர்களே!” என்று தயாராக வேண்டும்.
இன்னுமொரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் நண்பனொருவனோடு கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது சொன்னான் அவன் இரண்டு வருடமாக மிகவும் அன்போடு நேசித்த காதலி அவனை விட்டு விட்டுப் போய்விட்டாள். உறவு முறிந்துவிட்டது இரவு ஆனால் காலையில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் மனது அழுது கொண்டேயிருக்கிறது. ஆனால் சிரித்துக் கொண்டு இரண்டு மணிநேர காலை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியைச் செய்தாக வேண்டிய நிலமை அவனுக்கு; செய்தான். உள்ளுக்குள் அழுதபடி வெளியே சிரித்தபடிக்கு.... தொலைக்காட்சியில் இந்த நெருக்கு வாரங்கள் பல அறிவிப்பாளர்களுக்கு அனுபவமாக இருந்திருக்கும். இன்னும் இருக்கும்.

தொலைக்காட்சி நேயர்கள் வானொலி நேயர்களை விட வித்தியாசமான முறையில் இருப்பார்கள். அறிவிப்பாளர் மேல் விருப்பமாயும் இருப்பார்கள். சில வேளை வெறுப்பாயும் இருப்பார்கள். திரையில் வரும் அறிவிப்பாளர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆவல் தொலைக்காட்சி நேயர்களுக்கு உண்டு. அறிவிப்பாளப் பெண்கள் அணியும் ஆடை மற்றும் அணிகலன்களைக் கூட தாமும் அணிந்து பார்க்கும் ஆர்வம் கொண்ட பெண் நேயர்கள்களையும் ஷேட், ரை போன்றவற்றை ஆண் அறிவிப்பாளர்கள் அணியும் பொழுது அவதானிக்கும் ஆண், பெண் நேயர்களையும் பார்த்திருக்கிறேன். நான் “தீபம்” தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவனாகவும், காலைக்கதிர் என்ற காலை லண்டன் நேரம் 7.00 மணிமுதல் 9.30 வரை இடம் பெறும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமை செய்கிறேன்.

நிகழ்ச்சிக்கு எனக்கு மிகவும் உறுதுணையாகவும் நல்ல ஆலோசனை தருபவராகவும் திரு.மு.நித்தியானந்தனை நான் நன்றியோடு நினைவு கொள்வேன். மாலி நல்ல நண்பர். மு. நித்தியானந்தன் “தீபம்” தொலைக்காட்சிக்கு வந்ததே ஒரு விபத்துத்தான் 2001ம் ஆண்டு கறுப்பு ஜுலை தினத்துக்காக அவரின் அனுபவங்களை கேட்கக் கூப்பிட்டு பின்னர் அவர் தீபத்தின் செய்தி ஆசிரியாகச் சேர்ந்தார். பரந்த அறிவியல் அனுபவம், செய்தி அனுபவம் கொண்ட அவர் தீபத்திற்கு கிடைத்தது; பெருமை தீபத்திற்கே. நேரடிச் சந்திப்பு நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கானதை இருநூறுக்கும் மேற்பட்டது செய்திருக்கிறேன். பல சுவாரஸ்யமான அனுபவங்கள் வாய்க்கப் பெறுவது நேரடி நிகழ்ச்சிகளில் தான். ஒரு முறை ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கவிஞரை அழைத்திருந்தேன் கவிஞருக்கு கமராவைக் கண்டால் பயம் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்த பின்பு தான் தெரியவந்தது. முன்னோட்டமாக பேசும் பொழுது மிகவும் ஆர்வமாயும் நல்ல பல கருத்துக்களையும் தந்தார். ஆனால் வேளை ஆரம்பிக்கப்பட்டு நேயர்களுக்கும் கவிஞருக்கும் வணக்கம் சொன்னதன் பின்பு கவிஞர் பேசாமல் இருக்கிறார். ஒரு மணி நேர நேரடி நிகழ்ச்சிக்கு கவிஞரை கூலாக்கி ஆசுவாசப்படுத்தி கமராக்களை நிறுத்தாமல் சாதாரண பேச்சுக்கு கொண்டு வந்தேன். அரை மணி நேர நேயர்களின் கேள்வி பதிலோடு அந்தச் சந்திப்பு நிறைவு பெற்றது. கமராமென், எடிட்டர் தடுமாறிப் போனார்கள். அவர்களையும் சமாளித்தோம்.

தீபம் தொலைக்காட்சி ஐக்கியராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, தென்னாபிரிக்காவின் ஒரு பகுதி என்றெல்லாம் வியாபித்து இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் எமது நேயர்கள், மிகவும் விரும்பி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள் அவர்களில் சிலர் “கருத்துக்களம்” எனும் மிகவும் சீரியஸான நிகழ்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது தொலைபேசி அழைப்பினை எடுப்பார்கள் அது நேயர்களும் அந்த அந்த துறை சார்ந்தவர்களும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி. அதில் நேயர்களின் கருத்துக்களோடு சீரியஸான விவாதங்கள் நடைபெறும். ஆனால் மத்திய கிழக்கு நேயர்கள் தொலைபேசி எடுத்துவிட்டு “ஆ... அனஸ் நானா... அஸ்ஸலாமு அலைக்கும்” என்பார்கள் பதில்சொல்லிவிட்டு பேசச் சொன்னால் பேசமாட்டார்கள் “நாங்கள் உங்களோடு கதைப்பதற்காகத்தான் எடுத்தோம் எப்படி சுகமாக இருக்கிறீங்களா” என்று நேரடி ஒளிபரப்பில் கேட்பார்கள். அவர்கள் ஆர்வம் மிகுதி ஆனால் பேசமாட்டார்கள். இது நேரடி ஒளிபரப்பில் வரும். சந்திப்புகளில் பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் லக்ஷ்மி நாராயணனை செவ்வி கண்டேன். அன்று வந்த தொலைபேசி அழைப்புகளில் தொண்ணூறு வீதமான அழைப்புகளில் பெண்கள். பாண்டிச்சேரி தமிழ் நன்றாக இருக்கும். வாய்நிறையப் பேசுவார்கள். பிரான்ஸில் பாண்டிச்சேரி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் லக்ஷ்மி நாராயணனை தமது உறவினர் போல எண்ணி பேசினார்கள். அவர்களின் ஊர்ப்பற்று அவர்களின் பேச்சில் இருந்து தெரிந்தது.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவினது ஒரு மணிநேரச் சந்திப்பு ஐக்கி இராச்சியம், ஐரோப்பிய நாடுகளில் சிலாகிததுப் பேசப்பட்டது. சந்திப்பு முடிந்தவுடன் மூத்த பத்திரிகையாளர் பொன்-பாலசுந்தரம் பாராட்டிக் கொண்டே இருந்தார். டொமினிக் ஜீவாவின் அனுபவத் தொகுப்பாக அச்சந்திப்பு இருந்தது. ஒளிப்படத்தினூடாக ஒருவர் கதைக்கும் பொழுது நேரே பேசுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் வல்லமை தொலைக்காட்சிக்கும் ஒளிவிம்ப ஊடகங்களுக்கும் உண்டு. அதனால்த் தான் கிராமங்கள் தோறும் இப்பொழுது தொலைக்காட்சி சாதனை படைத்து வருகின்றது. சில தொலைபேசிகள் வரும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு எனது பெயரில் நேயர்களுக்கு இன்னும் குழப்பம். “உம்முடைய பெயர் அனஸ் ஆ, அல்லது அனாஸா! அல்லது அனக்ஸா என்று நான் யார் இந்துவா கிறிஸ்தவரா முஸ்லிமா எனும் தோரணையில் இருக்கும் அக்கேள்வி. என்ன சாதி என்றும் அறிய ஆவல்பட்டிருக்கும் தொலைபேசி அது. “நான் அனஸ்” என்று விட்டு வைத்து விடுவேன்.
ஐரோப்பிய நாடுகளில் தொலைக்காட்சிகள் வானொலிகளின் பங்களிப்புகள் மிகவும் முக்கயிமானது தமிழில், தமிழுக்கு.
பிரான்ஸ் இருந்து லண்டனுக்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சொன்னார். “உங்கடை தீபம் பார்த்து மகன் தமிழை விளங்கிக் கொள்கிறான்” இது உண்மையில் நடக்கும் ஒரு சங்கதிதான். வானொலிகளில் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டு சின்னஞ்சிறுசுகள் புரிந்து கொள்கிறார்கள் ஓரளவுக்கேனும். லண்டனில் இரண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. தமிழக தொலைக்காட்சிகள் எல்லாமே லண்டனுக்கு வருகின்றன.

வானொலிகள் மூன்று செற்றலைட் மூலமானவை ஒன்று பண்பலை மூலமானது. பண்பலை மூலமான “சந்திரோதயம்” வானொலி தீபாவளி தினத்தையொட்டி சீக்கியர்களின் பெருநாளாகிய “வைசாகி” எனும் பெருநாளை முன்னிட்டு ஒலிபரப்பாகும் அலைவரிசைக்கு சொந்தகாரர் ஒரு சீக்கியர். “வைசாகி” பண்பலை வரிசையில் நடாமோகன் நேரம் எடுத்து “சந்திரோதயம்” வானொலி சேவையை நடத்தி வருகிறார். “சன்றைஸ்” வானொலி சிற்றலை மற்றும் செற்றிலைற் மூலமாக கேட்கலாம். ஐ.பி.சி இன்னும் ரி;.பி.ஸி, ஈ.ரீ.பீ.ஸி போன்ற வானொலிகள் லண்டனில் இருந்து ஒலிபரப்பாகின்றன. தீபம், வக்ரோன், இன்னும் சண் தொலைக்காட்சிகள் லண்டனில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒரு செலவு மிகுந்த சேவையாகும். கிட்டத்தட்ட லண்டனில் தீபம் தொலைக்காட்சியின் ஒரு நாள் செலவு ஐயாயிரம் பவுண் வரையாகும். பணக்காரர்கள் இதன் முதலாளிகளாக இருக்கும் பட்ஷத்தில் இதனைச் சாதிக்க முடிகிறது. நான் தயரித்து வழங்கிய “காலைக்கதிர்” நிகழ்ச்சியில் மு.நித்தியானந்தன் செய்யும் “இலக்கிய நேரம்” பகுதியில் காத்திரமான நூல் விமர்சனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரிய நூல்களை மு. நித்தியானந்தன் விமர்சனம் செய்யும் பாணியே தனி அது நேரடி ஒளிபரப்பாக இடம் பெறும். “கருத்துக்களம்” நிகழ்ச்சி இது வெள்ளி தோறும் செய்வேன். புலம் பெயர்நாடுகளில் குடும்பப் பிளவுகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று செய்தேன். அதனை செய்து முடித்து விட்டு ஸ்ரூடியோவை விட்டு வெளியில் வரும் போது ஒரு தொலைபேசி அழைப்பு. “அண்ணா நான் இரண்டு பிள்ளைகளின் தாய்” என்று விட்டு அழ ஆரம்பித்து விட்டா அந்தப் பெண். விசாரித்தேன். தான் வவுனியாவைச் சேர்ந்தவரென்றும். சீதனம் வாங்காமல் தன்னைத் திருமணம் செய்து விட்டு சுவிஸ்-போய் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு கணவனின் அடி, உதை கொடுமை தாங்க முடியாமல் ஒரு நலன்புரி நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தா. புலம் பெயர் நாடுகளில் குடும்பப் பிளவுகள் அதிகமாக காணப்படுகின்றன. சேர்ந்து பேசி அன்பாக இருக்க வாய்ப்பில்லாமல் உழைப்பு, பணம் என்ற தேவைகளுக்குள் சிக்குப்பட்டு தமிழ் குடும்பங்கள் சின்னாபின்னமாகி கிடக்கின்றதை எண்ணும் போது மனது வலிக்கிறது. குடும்பங்கள் தொடர்பான அன்னியோன்யத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் பிரயோசனத்தை தந்தது.

மூத்த பத்திரிகையாளர் பொன்-பாலசுந்தரம் ஒரு முறை சொன்னார். “உங்கள் நிகழ்ச்சி மூலம் ஒரு குடும்பம் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று. நேயர்கள் மத்தியில் ஒரு போக்கு இருக்கிறது தங்களுக்கு பிடிக்காத விடயங்களை உடனே தொலைபேசி மூலமோ அல்லது கடிதமூலமோ தெரிவிப்பார்கள், ஆனால் சிறப்பான நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு சும்மா இருந்து விடுவார்கள். இந்தக் கருத்தை இளையதம்பி தயானந்தா எனது தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் போது குறிப்பிட்டார். இது தொலைக்காட்சி, வானொலி நேயர்கள் எல்லோருக்கும் பொருந்தும். புலம் பெயர் நேயர்கள் பொதுவாக செய்திகளுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 98 வீதமான எனது நேயர்கள் இலங்கைத் தமிழர்களாக இருப்பதனால் இலங்கை பற்றிய செய்திகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தொடர் நாடகங்கள் அவர்களுக்குள் பெண்கள் அதிகமாக விரும்பி பார்க்கிறார்கள்.

இலங்கையில் இருந்து வந்த முதியவர்களுக்கு தமிழ் தொலைக்காட்சிகள் பெரும் ஆறுதலாக இருப்பதனை அவதானிக்க முடிகிறது. இங்கென்றால் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று அரட்டை செய்வதில் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதில் பொழுதுகழியும். வேப்பங்காற்றுக்குள்ளும் பனங்கூடல் வாசத்துக்குள்ளும் இருந்தவர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து மகள் மாரோடும் மொழி புரியாத பேரக்குழந்தைகளோடும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெரியவர்கள் முதியவர்களுக்கு பெரும் ஆறுதல் தொலைக்காட்சிகள் தான். புலம் பெயர் நாடுகளின் பேரன் பேத்திகளைப்பார்க்க என்று வருபவர்கள் வெளியில் நினைத்தவுடன் போக முடியாது மொழிப்பிரச்சனை, பஸ்ஸில் உடனே ஏறிப்போக முடியாது பாதை மாறிவிடும் இப்படியானவர்கள் தொலைக்காட்சிகளோடு தான் காலத்தைக் கடத்த வேண்டியுள்ளது.

தொலைக்காட்சிகள் வருடச்சந்தா அடிப்படையில் தான் இயங்குகின்றன. வருடத்துக்கு 150 ஸ்ரேலிங்பவுண்கள் கட்டி காட் வாங்க வேண்டும். அனேகமாக லண்டனில் இருந்து இயங்கும் தொலைக்காட்சிகளின் கட்டணம் இப்படித்தான். சினிமா, தொடர் நாடகங்கள் இல்லாமல் தொலைக்காட்சி நடத்தும்படி சீரியஸான நேயர்கள் கூறுவதுண்டு. இதில் பல சிக்கல்கள் உண்டு. வியாபார நோக்கமில்லாமல் தொலைக்காட்சி சேவையை நடத்த முடியாது. விளம்பரங்களை விட சந்தாவை விட அதிகம் செலவுள்ள சமாச்சாரம் இது. பல தரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டியது தொலைக்காட்சிகளின் தேவையாக இருக்கிறது. எனது தொலைக்காட்சிப் பேட்டிகளில் என்னை உலுக்கியது திருகோணமலையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் கதை. திருகோணமலையில் இருந்து ரஷ்யா, உக்ரெயின், கஸகிஸ்தான், போலந்து ஊடாக லண்டன் வந்த கதையைச் சொன்னார். பனி படர்ந்த பாதைஊடாக ஆட்கடத்தும் ஏஜன்சிகள் மூலமாக நடைப்பிணமாய் வந்த கதை அது. வெளிப்புற செய்தி சேகரிப்புக்காக நீதிமன்றதுக்கு கமெராமென் சுரேஸோடு சென்றேன். அங்கு 2 ஆயுள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்களைக் கண்டேன். “அல்பேட்டன்” எனும் இடத்தில் இருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியால் இந்தத் தண்டனை வாசிக்கப்பட்ட போது நீதி மன்றத்தில் இருந்தேன்.

புலம் பெயர்ந்து வந்து கோஷ்டிச்சண்டைகள் கொலை செய்யும் மனப்பாங்கு வளர்ந்து விட்டவர்களாக தமிழ் இளைஞர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் பொலிஸின் கடும் நடவடிக்கை மூலம் லண்டன் பொலிஸ் இவர்களை கட்டுப்படுத்திய பின்பு கொலைகள் குறைந்திருக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியலாளர்கள் லண்டனுக்குத்தான் அதிகமாக வருவார்கள். லண்டன் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பான நகரம். நாம் லண்டனில் இருப்பதனால் வருபவர்களோடு தொடர்பு கொண்டு செவ்விகள் எடுப்பது சுலபமாக இருந்தது. முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, தீடிர் தௌபீக் ஆகியோர் வந்த பொழுது ஒன்றே முக்கால் மணி நேர நேரடி ஒளிபரப்பு செவ்வி செய்தேன். மிகவும் விறுவிறுப்பான நிகழ்ச்சியாக இருந்தது. புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனேகமான தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான மயக்கமே இருக்கிறது. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்கள் தான் என்று அடம்பிடிக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். கலைகலாச்சாரப் பாரம்பரியங்களின் வேற்றுமை. இலங்கையில் முஸ்லிம்கள் தனி இனமாகவே பிரகடனப்பட்டிருப்பதை பொது புலம் பெயர் தமிழர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியாதுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பான காரசாரமான விவாதம் நேரடி ஒளிபரப்பில் இடம் பெற்றது. இதே விவகாரம், முன்னாள் அமைச்சர் அஸ்வர் வந்தபோது தொடர்ந்தது. இலங்கையில் இருந்து வந்த நிகழ்ச்சியான “விழிப்பு” புலம் பெயர் தமிழர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி. நாம் “விழிப்பு” நிகழ்ச்சியை தொடர்ந்து வியாழக்கிழமை லண்டன் நேரம் இரவு 8.30 இற்கு ஒளிபரப்பு செய்தோம். எமது நேயர்கள் இலங்கை தொடர்பான சரியான “டொக்கியுமன்ரி” நிகழ்ச்சியாக அது இருந்தது. ஆனால் “விழிப்பு” மூலம் பல எதிர்ப்புக்கணைகளும் எம்மை நோக்கிவந்தன. சில விழிப்புகளில் சிங்களப்பகுதி பாடசாலைகள், விடுதலைப்புலிகளால் போரில் கொல்லப்பட்ட காணாமல்போன குடும்பங்களில் உள்ள விதவை மனைவிகள், தாய்மார்களைச் செவ்வி கண்டிருப்பார்கள். இது அங்குள்ள சில பேருக்கு ஒவ்வாமல் இருந்தது. அதனால் இந்நிகழ்ச்சி வேண்டாமென்றார்கள். விகாரைகள், பிக்குமாரைக் காண்பித்தால் சிலபேர் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். “விழிப்பு” எல்லாக்கிராமங்களுக்குள்ளும் நுழைந்து வந்தது. தமிழ்ப்பகுதிகள், எல்லைக்கிராமங்கள், இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் களுத்துறைச் சிறைச்சாலையில் கஷ்டமுறும் தமிழ் கைதிகள் என்று எல்லா தரப்புகளையும் அவர்களின் பிரச்சனைகளையும் வெளிக்கொணர்ந்தது. இலங்கையில் விழிப்பு ஏற்படுத்திய தாக்கத்தைவிட தீபம் தொலைக்காட்சியூடாக புலம் பெயர்நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காத்திரமான அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. “விழிப்பு” முடிவடைந்ததன் பின்பு “உரைகல்” என்றொரு நேரடி ஒளிபரப்பை, நேயகர்களின் கருத்தறியும் நிகழ்ச்சியினைச் செய்தோம் நானும் மு. நித்தியானந்தனும். நேயர்களின் கருத்துக்கள் “விழிப்பு” சம்பந்தமாகவும் அன்றைய நிகழ்ச்சியின் மைக்கருத்து சம்பந்தமானதாகவும் இருக்கும். வலு சுவாரஸ்யமானதும் இன்னும் தகவல் பொருந்திய நிகழ்ச்சியாகவும் அது அமைந்து எல்லாத்தரப்பினரது அபிமானத்தையும் பெற்றிருந்தது. “உரைகல்” பொதுவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் உடல் உளவியல் பிரச்சனைகளில் சிக்கி மீள முடியாமல் தவிப்பதனை ஆழமாக உணரக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட செய்தியாளர்கள், ஒளிபரப்பாளர்களாகிய எங்களுக்கே அதிகம் உண்டு.

புலம் பெயர்வாழ்வின் தனிமை, பணப் பிரச்சனை, கடினமான உழைப்பு, இலங்கையில் உள்ள உறவினர்களின் பணம் தொடர்பான நச்சரிப்பு, ஊரில் திருமணம் முடிக்காமல் இருக்கும் பெண் சகோதரங்களின் சீதனம் பற்றிய கவலை, வயது வந்தும் உழைத்துக்கொண்டே இருப்பது திருமணம் முடியாமல், இதற்கும் மேலாக குளிர் ஒத்துக்கொள்ளாத சீதோஷ்ணநிலை அதனால் வாதம் இடுப்புவலி, மூட்டுப்பிடிப்பு, அத்தோடு சமர் காலங்களில் வரும் “ஹேபீபவர்” என்கின்ற சுவாச நோய் போன்றவையும் ஒவ்வாமையும், மொழிச்சிக்கல், அடுத்தவர் உறவினராக இருந்தாலும் அவர்களைக் கவனிக்க மற்றவர்களுக்கு நேரமின்மை, பத்துப் பன்னிரண்டு வருடமிருந்தாலும் அன்னிய நாட்டு மொழிகள் மூளைக்குள் நுழையாமை இதனால் தொடர்பாடல் அற்றுப்போதல், குடும்பத்தில் அன்பு இன்மை, கணவன் மனைவியிடையே ஒரு அன்னியோன்யம் வளராமை, எப்பொழுதும் கணவன் மனைவிமத்தியில் சண்டை, இருந்து பேச நேரமின்மை, பிள்ளைகள் அன்னிய கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டே போகும் அவஸ்த்தை, பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் பதினைந்து பதினாறு வயதில் ஒரு துணையைத் தேடிக்கொண்டு சுற்றுவது செக்ஸ் போன்ற செயல்களில் பிள்ளைகள் ஈடுபடுவது, மனத்தளர்வு, இவைகளை யோசித்து யோசித்தே நோயாளர்களாகிப் போன தமிழர்களை அதிகம் காணுவது என்னைப் போன்றவர்களே! அதனால் தொலைக்காட்சிகளில் நடைபெறும் டொக்டர்மாரின் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் சாத்திரம், காண்டம்பார்த்தல், மனநோய் நிபுணர்கள், சாமிமார்களின் நிகழ்ச்சிகளுக்கும் வரும் தொலைபேசி நேயர்களின் எண்ணிக்கை அதிகம். சின்னப்பிள்ளைகளில் இருந்து பெரியவர்கள்வரை ஆர்வமுடன் “யார்” நாடகத்தைப் பார்த்தார்கள். அது வலு சோக்கான திகில் நாடகம். அதில் புதிரை அவிழ்ப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. “யார்” நாடகத்தின் முக்கால் மணிநேரமும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் குறைந்த ஆட்கள் ஈடுபாட்டோடு வேலை செய்யும் இடமாக “தீபம்” கலையகம் இருக்கும். ஒரு இரண்டரை மணிநேர நேரடி ஒளிபரப்பை மூன்று பேர் செய்திருக்கிறோம் என்றால் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையவர்கள் நம்ப மாட்டார்கள். ஸ்ரூடியோவில் நான் எடிட்டிங் பகுதியில் ஒருவர். என்கோடிங் பகுதியில் ஒருவர். இப்பொழுது வேறு வேறு தமிழ் டிவி ஸ்ரூடியோவுக்கு போகும் போது வேலை செய்பவர்களின் தொகையைப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் ஸ்ரீ, நிரஞ்சன், அமுதன், பாபு, கபாலிபாபு, ராஜா, ரூபன், சுரேஸ், முத்து பாலு ஆகிய தொழில்நுட்பக்கலைஞர்களின் அசாத்திய துணிவும் நம்பிக்கையுமே நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முழு உறுதுணை. இவர்கள் கண்ணாடித் திரைக்கு அப்பால் நின்று உழைப்பவர்கள் இவர்கள் தான் உலகம் முழுக்க என்னைப் போன்றவர்களை பிரகாசிக்கச் செய்பவர்கள். எந்தப் பிரச்சனையுமில்லாமல் இப்பொழுதும் “தீபம்” தொலைக்காட்சியில் வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ந்து போகிறேன். நண்பர்கள் எல்லோரும் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். 36 பேர் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டிருப்பதனைப் பார்க்கும் போது மீடியாவில் பிரச்சனை ஒற்றுமை பற்றி சொல்லாமல் செல்லமுடியாதுள்ளது. பல தொலைக்காட்சி நிலையங்களில் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் ஒருவரைப்பற்றி முதலாளிமார், மேலிட உத்தியோகத்தரிடம் போய் கோள் சொல்வதுமாக இருக்கும நிலையினைப்பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பள உயர்வை கம்பனி செய்தது. அதைப்பார்த்து.

சம்பளத்தை பொறாமைப்படுபவர் கொடுப்பதில்லை. கம்பனி கொடுக்கிறது. இவர் ஏன் பொறாமைப்படுகிறார்? இது இலங்கையில்... பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகள் என்று வேலை செய்யும் சக நண்பர்களாகவே பார்க்கிறார்களில்லை. ஏதோ எதிரிகள் போலவே பார்க்கிறார்கள். ஒருவருடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கிறார்களில்லை. அவமதிக்கிறார்கள். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் பண்பை, பாராட்டும் மனோ பாவத்தை உண்மையாய் மனதால் மனதோடு பேசும் பக்குவத்தை இந்தப் பொறாமை வாதிகள் எல்லாம் ஐரோப்பியரிடம் கற்க வேண்டும். மனம் திறந்து பாராட்டுவார்கள். லஞ்சம் தெரியாத, பொறாமை தெரியாத அடுத்தவனின் சுதந்திரத்தில் கை வைக்காத மற்றவரை மதிக்கத் தெரிந்த நல்ல மனிதர்களோடு பழகியிருக்கிறேன். இங்கு சிலர் வந்து சிலரைப் பற்றி குறை கூறும் பொழுது நான் அதனைக்கேட்பதில்லை. உண்மையில் தன்னைப்பற்றி தன் கருமங்களைப்பற்றி அதன் செய்நேர்த்தி பற்றி சிந்திக்கத் தொடங்கினால் மற்றவர்கள் பற்றியதெல்லாம் விலகிவிடும். அதுதான் சரியும் கூட. ஒரு எழுத்தாளனாக 1985இல் சிந்தாமணி பத்திரிகையில் எழுதத்தொடங்கி அறிவிப்புத்துறை எனது உதிரத்தோடு உதிரமாக சின்னவயதினிலேயே என்னுள் ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். “மைக்” கைக் கண்டால் ஆசை. சிரட்டையை வாழை மரத்தில் கட்டிவிட்டு சணலில் வயர் செய்து ஒரு தடியில் கட்டிவிட்டு “எனவுன்ஸ்” செய்து பார்த்த எனது கிராமத்து வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கும் வாழை மரங்களை என் வளர்ச்சியின் பின்பு தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சண்டிக்கட்டோடு மட்டையில் “குளல்” செய்து திரிந்தது. ஆனந்தனோடு(ஆமி சுட்டு செத்துப்போனான்) சேர்ந்து கங்காதரனும்(ஜேர்மனியில் ஒரு சர்க்கரை வியாதிக்காரனாக நல்ல மனிதனாகஇருக்கிறான்) நானும் யாருக்கும் மைக்கை கொடுக்காமல் அம்மா மறித்தாலும் கேட்காமல் வீடியோ படம் காட்டும் இடத்துக்கு “எனவுன்ஸ்” செய்தது. பள்ளிக்சுட லொத்தர் கொட்டகையில் “முதலாம் பரிசு சைக்கிள்” என்று சொல்லி அறிவிப்பு செய்தது... பள்ளிக்கூட மேடைகளில் இராசநாயகத்தோடு சேர்ந்து அவன் ஈழத்துச்சதனாயும் நான் அறிவிப்புச் செய்பவனாகவும் சேர்ந்து செய்த மகிழ்ச்சிகள். இராசநாயகம் நன்றாக நாய், பூனை, குருவி, நாய் கடிபடுவது எல்லாம் கத்துவான் மாணவர் சங்க கூட்டங்களில் பாட்டுக்கு பாட்டு செய்தது. தில்லையம்பலம் வாத்தியாருக்குப்பயந்து பயந்து பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் “எனவுன்ஸ்” பண்ணியது. அம்மய்யா ஏச ஏச ''யுனிக்'' ரேடியோ ஒன்றை நாய்குட்டி காவியது போல இடுப்பில் அணைத்துக்கொண்டு திரிந்தது. மகாலிங்கம் சேரின் உதவியோடு பேச்சுப் போட்டியில் “கூட்டுறவுக் கொள்கைகளும் நடைமுறைகளும்” எனும் தலைப்பில் பேசி மாவட்ட மட்டத்தில் பரிசு வாங்கியது.... அரபிக் கல்லூரி விழாக்களில் கவிதை வாசித்தது. மாணவர் மலர் நிகழ்ச்சியில் கனக சபாபதி நாகேஸ்வரன் முல்லைத்தீவில் வைத்து கேட்ட போது எனது இலட்சியம் கே.எஸ்.ராஜா போல வரவேண்டும் என்றது. பின்னர் அறிவிப்பாளர் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் முதலாமிடங்கள்பல பெற்றது. ஜனாப்.பி.எச். அப்துல்ஹமீட் வானொலிக்கு வரச்சொன்னது. 1997-1998களில் இலங்கை வானொலியில் “விடியலை நோக்கி” நிகழ்ச்சி செய்வதற்கு வி.என்.மதியழகன், உருத்திராபதி ஆகியோர் ஊக்கம் தந்தது. அதே காலங்களில் நூரணியா ஹஸன், ஹரீஸ்ஹஜி, முனவர் ஹாஜி தந்த நிகழ்ச்சிகளும் ஊக்கங்களும்...
பின்னர் 2000-ஓகஸ்ட் 07ம் திகதி தீபம் தொலைக்காட்சியில் இணைந்தது.
பிரமித்துப்போகிறேன் என்னுள் நானே.

2 comments:

சாந்தி நேசக்கரம் said...

//குடும்பங்கள் தொடர்பான அன்னியோன்யத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் பிரயோசனத்தை தந்தது.//

இதுவே உங்கள் கலையுலக வாழ்வின் வெற்றி.

சாதியறிதல் சமயமறிதல் எல்லாவற்றையும் விடாமல் நமது தமிழ்ச்சாதி உயிர்வாழாது நண்பரே,
விட்டுவிடுங்கள் இவர்களையெல்லாம்.

உங்கள் கருத்துக்களம் , அரசியல் சந்திபஆபு நிகழ்ச்சியை நானும் பார்ப்பேன். ஆனால் நீங்கள் எழுதியது போல நல்ல நிகழ்ச்சிகளுக்கான கருத்தை வைக்காமல் ஒர பார்வையாளராகவே இருந்து விடுவது உண்மைதான்.

சாந்தி

இளைய அப்துல்லாஹ் said...

மிக நீண்ட காலத்திற்கு முன் உங்களை கண்ட சந்திப்பு நினைவுக்கு வருகிறது ஆனால் இப்பொழுது உங்கள் சிந்தனையும் செயல்பாடுகளும் விரிவடைந்திருக்கின்றன. எழுத்துக்ககளில் பார்க்கிறேன். பொலிஸ் விசாரணை கோட்டு கேஸ் என்று பெரும் முதிர்ச்சியிருக்கும் எதிர்காலத்தில் ஒரு சந்திப்பில் இவைகளை பேசலாம்

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive