Friday 15 May 2009

சிறுகதை- ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்


முன்னுரை ஒன்றுக்கு பிறகு வாசிப்போம்

இதில் வரும் ஜின்கள் எனும் விடயதானம் முஸ்லிம்களுக்கு தெரியும். ஏனைய அன்பர்களுக்காக கொஞ்சம் சொல்ல வேண்டும்.
ஜின்கள் அல்லாஹ்வின் படைப்பு என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது. அவை கூட்டம் குடும்பத்தோடு வாழ்கின்றன. மனைவி பிள்ளைகள் இருக்கின்றன. இந்த உலகில் மனிதர் ஜின்களைப் பார்க்க முடியாது. ஆனால் ஜின்களுக்கு மனிதர்களைப் பார்க்க முடியும். மறுமை நாளில் இது மாறி இருக்கும். ஜின்களுக்கு மனிதர்களை பார்க்க முடியாது. இவை அரூபமானவை. இவைகளை ஆவிகள் என்றோ பேய்கள் என்றோ சொல்ல முடியாது. தனிப் பெரும் படைப்பு என்றுதான் இப்போதைக்கு சொல்லலாம். விளக்கம் பெரிது. இவை சில மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. ஜின் ஓட்டி காக்காவை ஆவி ஒட்டிக்காக்கா என்று ஒரு விளக்கத்திற்கு சொல்லிக் கொள்ளலாம்.

Bபத்வா – சபிப்பு
ஒழு – அங்க சுத்தி செய்தல்
ஹவுள் - பள்ளிவாசலில் இருக்கும் நீர்த்தடாகம்
ஸப் - தொழுகை வரிசை
பாங்கு – தொழுக்கான அழைப்பு
மஃரிபு – பின் அந்தி தொழுகை
மையத்து - பிரேதம்
சஹன் சாப்பாடு – ஒரு பாத்திரத்தில் சேர்ந்துண்ணல்
மதரஸா – அரபு கல்லூரி
ஜூம்மா கொதுபா - வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகை
நூஹ் - ஈஸா, மூஸா, தாவூத் - இறை தூதர்கள்
கியாமத் - இறுதிநாள்
மௌலவி – மார்க்க அறிஞர்
சஹர்- அதிகாலை
ஹிஜ்ரத்- புலம்பெயர்வு

ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்

ளைய அப்துல்லாஹ்

பஸ்ஸில் இருந்து இறங்கிய பொழுது அழுகை அழுகையாக வந்தது. இது நான் பிறந்து வளர்ந்த ஊரா. இப்படி இருக்கிறதே. எல்லாம் இடிந்து. வீடுகள் இடிந்து, பள்ளிவாசல் இடிந்து, பாடசாலைகள் இடிந்து மரங்கள் ஷெல் அடிபட்டு பாறிப் போய், இறங்கு துறை அழிந்து, கடற்கரை எல்லாம் பாழடைந்து போய் படகுகள் எல்லாம் காணாமல் போய் வலை, வாழ்க்கை எல்லாம் அழிந்து போன கிராமமாக கிடந்தது எனது ஊர்.
நான் குர்ஆன் ஓதிய பள்ளி வாசல் ஷெல் அடிபட்டு சிதிலமாக கிடந்தது. இங்கு தான் எனது நிக்காஹ்வும் நடந்தது. முகப்பு தீராந்திகள் முறிந்து போய் கிடந்தன.

மூத்தம்மா பாதையால் நடந்து வருகின்றா. மூத்தம்மா என்றால் எங்களுக்கு உயிர். மூத்தம்மா தான் இந்த ஊரில் முது கிழவி. எமது ஊரைப்பற்றிய அத்தனை அறிவும் மூத்தம்மாவுக்கு உண்டு.
“என்னடா பாரூக் கந்தளாவுக்கு போனியே அங்கை ஏதேனும் குடுக்கிறாங்களா?” நிவாரணம் தொடர்பாகவே எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்ற காலம் இது.
“இல்லை மூத்தம்மா எல்லாம் வாறாங்க போறாங்க எதுவும் இல்லையாம் கையை விரிக்கிறாங்க.”
“நாசமாப் போவாங்க” மூத்தம்மா ஆகாயத்தை நோக்கி கையை ஏந்தி ''பத்வா ''செய்கிறா. “இது கியாமத்து நாளடா மோனை. எங்கை பாத்தாலும் கொலை, கொள்ளை, பறிப்புயெண்டு மனிசன் வாழ ஏலாம கிடக்குடா பாருக். உன்னர பொஞ்சாதி புள்ளைகளை நெனைச்சாத்தான் வவுறு பத்திக் கொண்டு வருகுதடா.”
மூத்தம்மா என்னை கவலைப்படுத்துகிறா. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். மனம் முழக்க விம்மலும் கேவலும் மட்டுமே மிஞ்சி கிடக்கிறது.
எங்களது ஊருக்கு மேலால் நெருப்பு கோளங்களாக ஷெல்கள், விர்...விர்.... என்று நூற்றுக்கணக்காக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. அதிகாலை 2.30 இலிருந்து கர்ண கடூரமான சத்தமும் சிதறலும் தான். அதிகாலையில் கொஞ்சம் வெளியில் வந்த பொழுது தான் தெரிந்தது புதிதாக துப்பாக்கிகள் முளைத்திருந்தன. ஒன்றாக இரண்டாhக பலவாக நூறாக..... அப்பொழுததான் தெரிந்தது நாம் துப்பாக்கிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கிறோம்.

யா அல்லாஹ் இதென்ன சோதனை.
மனைவியும் குழந்தைகளும் எனது காலுக்கு அடியில் குழறிக் கொண்டிருந்தனர். கைக்குழந்தைக்கு பால் கரைக்க மனைவி குசினிக்குள் போனா கூடவே பிள்ளைகளும்.
“சல்மா” என்று கூப்பிட்டு ஒலி மறையும் முன்பாக ~டொமீh; எனது வீட்டுக் குசினிக்குள் எனது செல்வங்கள் மூன்றும் சல்மாவும் கருகி எரிந்து சாம்பலாகி அழிந்து போய்.....
யா! அல்லாஹ் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.
நினைவு திரும்பி விழித்த போது ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.
ஷெல்களின் சிதறல்கள் எல்லாம் ஊர் முழுக்க பரவி கிடந்தன. அம்மா கிடந்த மீன் பிடிக் கிராமம் இப்பொழுது கந்தகப் பூமியாய் கிடக்கிறது.

டுர்......டுர்......டுர்...... நன்றாக படித்துக் கொண்டிருந்த ஹனீபா இப்பொழுது கொஞ்ச நாளாக றோட்டு றோட்டாக வாகனம் ஒட்டிக் கொண்டு திரிகிறான். இரவு பகலாக
“ஹனீபா”
“என்ன?”
“எங்கை போறாய்”
“சொர்க்கத்துக்கு” ஹனீபாவுக்கு மூளை பிசகி விட்டது. ஷெல் அடித்த நாளில் இருந்து ஹனீபாவுக்கு மூளை குழம்பி விட்டது.
“நான் போகப் போறன்.”
“எங்கை”
“சொர்க்கத்துக்கு”
வாழ்வின் இழப்புகளை ஒட்டு மொத்தமாக அனுபவித்துப் போய் இருக்கிறோம். அல்லாஹ் ஏன் இப்படிச் சோதிக்கிறான்.
அழுது அழுது கண்கள் வற்றி விட்ட மனிதர்கள் தான் வீதிகள் எங்கும் நடந்து போகின்றனர்.
செழிப்போடு தான் ஒரு மாதம் முன்பு இருந்தது எமது கிராமம்.
சரூக் நானாவின் தேத்தண்ணிக் கடையில் ஒரு பானையில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கிறது. சீனிக்கு பதில் கருப்பட்டிதான் கடையில் இருக்கிறது. ஒருமாதம் அகதிகளாக போய்விட்டு வந்தபின்பு வீடுகளில் ஒரு சாமானும் இல்லை. எல்லாத்தையும் களவெடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் கள்வர்கள்.

அஸருக்கான அதான் லவுஸ்பீக்கர் இல்லாமல் மோதினார் சொல்கிறார். லவுஸ்பீக்கர் பள்ளிவாசலின் கூரையில் சல்லடையாய்க் கிடக்கிறது. இறைவனின் மாளிகையைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒழு எடுப்பதற்கு ஹவுள் இல்லை. பக்கத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் அள்ளி ஒழு எடுக்கும் போதே மனது அடைக்கிறது.
என்னிடம் ஒரே ஒரு ஷேட்டும் ஒரே ஒரு சாறமும் மாத்திரமே இருக்கிறது. வீடு இருந்த இடம் தெரியவில்லை. பள்ளிவாசல் ஹஸரத் இன்னும் அகதியாய்ப் போனவர் திரும்பவில்லை ஊருக்கு. மீளவும் அகதி ஆகிவிடுவோமோ என்ற பயம் அவருக்கு. ஒழு எடுத்துவிட்டு பள்ளியின் ஓரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். ஒரு பக்கம் சுவர் இடிந்து போயே கிடக்கிறது. நேற்றுத்தான் பள்ளியை கூட்டித் துப்புரவாக்கி மண்ணை அள்ளிப் போட்டார்கள்.
ஒரு கனதியோடுதான் ஸப்பில் நிற்கிறேன். தலை சுற்றுகிறது. நோன்பு முழு நோன்பு. சஹருக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. பட்டினி நோன்பு.

*********************************
ஊர் முழுக்க எல்லோரும் மனப்பாரத்தோடுதான் நடந்து திரிகின்றனர். வாழ்வு பற்றிய கேள்வி எல்லோர் மனங்களிலும் நிறைந்து கிடக்கிறது. எல்லோரும் நடைப்பிணமாகவே அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. முகம் முழுக்க சோகத்தை சுமந்து கொண்டுதான் எல்லோரும் இருக்கின்றனர்.
வீடுகள் இடிந்து போனவர்கள், வீடுகளுக்கு முன்னால் உட்கார்ந்து தாம் உண்டு உறங்கி ஆறுதல்பட்ட வீடுகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஷெ;லடிபட்டு வீடுகளில் நான்கு சுவர்களில் இரண்டு சிதறுபட்டவர்கள் தமது வீடுகளுக்குள் போய் உடைந்த சுவர்களை தட்டி கல்லுகளையும் மண்ணையும் சீமெந்து தூள்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பெண்கள் அழுது அழுது கொண்டிருந்தனர். வயதான கிழவிகள் வானத்தை பார்த்து அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டும் இந்த அழிவுக்கு காரணமானவர்களை சபித்துக் கொண்டும் இருந்தனர்.
சிறுவர்கள் உடைந்து சிதறித் தெறித்த ஷெல் துண்டங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அதனை பழைய இருப்புக்காரன் வரும் பொழுது கொடுக்கலாம் என்று ஒரு கிழவர் சொல்லியிருந்தார். காற்று வாக்கில் எல்லா இடங்களிலும் சிறுவர்கள் காதில் இந்த சங்கதி பரவிட்டிருந்தது. எல்லா சிறுவர்களும் இப்பொழுது ஷெல் துண்டுகளை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு கதையும் அடிபட்டது. இதரை வாழை மரத்தில் ஷெல் விழுந்திருந்தால் அது தங்கமாகி இருக்கும் என்பது தான் அது. அப்படி எதுவும் ஆகியிருக்குமோ இல்லையோ என்பதற்கு முதல் இதரை வாழை மரத்தை தேடி பெரியவர்களும் சிறுவர்களும் அலையத் தொடங்கிவிட்டனர்.
இடிந்து போன வீடுகளுக்கு சன்மானம் தருவதாக ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள் அதிகாரிகள் ஆனால் எவ்வளவு என்பதில் இன்னும் தீர்க்கமான முடிவு இல்லை.
தொடர்ந்தும் கர்ண கடூரமாக கிழக்கு பகுதியில் ஷெல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்கள் இரண்டு பகுதியினரும் சண்டைபோடும் சத்தம்தான் அது.
“எங்களை அல்லாஹ் காப்பற்றிவிட்டான்” என்று தேனீர் கடைநானா சொன்னார். அவர் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் பள்ளி வாசலுக்கு முன்னால் தான் அவரது கடை. பாங்கு சத்தம் காதில் விழுவதே போதும். அல்லாஹ் மறுமை நாளில் சொர்க்கம் தந்திடுவான் என்பது அவரது இறுதி நம்பிக்கை. அல்லாஹ் மனசைத்தான் பார்க்கிறான் என்பார். தொழ மாட்டார்.
விதம் விதமான இரும்பு துண்டுகள் ஊரெங்கும் சிதறிக் கிடந்தன. இரண்டு காபிர்களுக்கு இடையிலான சண்டையில் இடையில் அகப்பட்டுப் போனோமே என்ற வடு ஊர் முஸ்லிம்களின் முகத்தில் அப்பியே இருக்கிறது.
மஃரிபுக்கான அதான் கேட்கிறது. மோதினார் பாங்கு சொல்லி முடித்த பின்பு தான் நோன்பு திறப்பார். நோன்பு திறக்க பள்ளி வாசலுக்கு போக வேண்டும். இப்பொழுதுதான் இடிந்த ஷீட் துண்டுகள் கல்லுகள் சுவரின் மீதிகள் எல்லாவற்றையும் பள்ளித் தலைவர் கொஞ்ச ஆட்களோடு வந்து துப்புரவாக்கிப் போட்டு போனார்.
நோன்பு திறக்கிறதுக்கு ஈச்சம்பழம் மட்டும் பள்ளியில் இருக்கிறது. வழமைபோல கஞ்சி இந்த முறை காய்ச்சவில்லை. எல்லோரும் ஓட்டாண்டி, எல்லோரும் ஏழைகள் எங்கே கஞ்சி காய்ச்சுவது. உயிர் இருப்பதே பெரிய விடயம்.
பள்ளித் தலைவரின் மகளுக்கு ஷெல் தெறித்து விழுந்து கால் ஒன்று எரிந்து விட்டது. பக்கத்து ஊர் ஆஸ்பத்திரியில் நோயாளியாகி படுக்கையில் இருக்கிறார். மகன் ஒருவரை அகதியாக போன போது கினாந்திமுனை மலைக்கு அடியில் வைத்து அவர்கள் செக் பண்ணியபோது பிடித்து வைத்திருந்தார்கள் பின்னர் வந்து விழுந்த ஷெல்லோடு அவர்கள் ஓடிவிட மகன் தப்பிட்டான்.

****************************

யாரோ நகர்ப்புறத்தில் இருந்து கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கிறார்களாம். கெண்டர் வாகனம் ஒன்று இடிந்த பள்ளி வாசலுக்கு முன்னால் வந்து நின்றது. “அஸ்ஸலாமு அலைக்கும்” தொப்பி போட்ட தடிப்பமான இரண்டு பேர் ஸலாம் சொல்லிகின்றனர். “வ அலைக்குமுஸ்ஸலாம்” எங்கள் கண்கள் கலங்கி இருந்தன. கென்டரில் வந்த டிறைவருக்கு பக்கத்தில் சீற்றில் இருந்தவர் கீழே இறங்கினார். மற்ற மூன்று பேரும் அவருக்கு கொடுத்த மரியாதையில் அவர் ஒரு பணக்காரர் தோரணையில் இருந்தார்.
கையில் ஒரு என்வலப் கட்டு வைத்திருந்தார். ‘கென்டர்’ நிறைய ஷொப்பிங் பையில் கட்டிய பொருட்கள் இருந்தன.
பணக்காரர் சலாம் சொன்னார். பள்ளி வாசலுக்கு தொழ வந்தவர்களுக்கு சலாம் சொல்லி ஒரு ஷொப்பிங் பை பொதியும் ஒரு என்வலப்பு கவரும் கொடுத்தார். வாங்கியவர்கள் அவரை நன்றியோடும் அல்லாஹ்வுக்கு நன்றியும் செலுத்தினர்.
இதற்கிடையில் ஒரு இருபது பேர்தான் ஆரம்பத்தில் இருந்தனர் பின்னர் பத்து பத்தாக பதினொன்று பன்னிரண்டாக நூறு பேர் வரை சேர்ந்து விட்டனர். எல்லோருக்கும் பணக்காரர் கொடுத்தார். அதில் நின்றவர்களில் பலர், முதன் முதலாக கைநீட்டி வாங்கியவர்களும் இருந்தனர்.
அகதித் தனம் அவ்வாறு செய்துவிட்டது. பிறகு தான் கேள்விப்பட்டேன் ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் முன்னால் ஒவ்வொரு கென்டர் வாகனத்தில் நகரில் உள்ள பணக்காரர்கள் அகதிகளுக்கு உதவி செய்ய வந்திருக்கிறார்களாம். அவர்கள் நல்லாயிருக்க வேணும்.
கஞ்சி நானா தனது போலியோ காலோடு ஓட முடியாமல் ஊரில் இருந்து விட்டார்.
கஞ்சி நானாவின் கைருசிதான் ருசி. நோன்பு நேரத்தில் நினைத்தாலும் அவரது கஞ்சியின் மணமும் ருசியும் குணமும் சுவையும் அடிநாக்கில் தொட்டு நிற்கும். நிற்கிறது.
கஞ்சி நானாவின் பாசிப்பயறு கஞ்சி, அவல் கஞ்சி ஊரில் வலு பிரபல்யம். அவருக்கு ஓட முடியாது. ஒரு கால் சூம்பிப் போய் இருந்தது. அதனால் அவர் பக்கத்து ஊருக்கு அகதியாக வரவில்லை. மனைவியும் மகன்மார் இரண்டு பேரும் அவரை விட்டுவிட்டு அகோர யுத்தம் நடந்த போது ஊரைவிட்டு ஓடி அகதியாகிவிட்டனர். கஞ்சி நானா அவரது வீட்டில் தான் இருந்தார். அவர் இருந்த போது மூன்று நாட்களாக பட்டினிதான். மூன்றாவது நாள் தான் ஆமிக்காரர் அவருக்கு பிஸ்கட்டும் தண்ணியும் சொக்லட்டும் கொடுத்தார்களாம். கஞ்சி நானா அசரவில்லை. வெடித்துச் சிதறிய ஷெல்கள் பற்றி கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் திரும்பிவந்த பொழுது கண்ணீரோடு வரவேற்க அவரால் முடிந்தது. தன்னை அந்தரிக்கவிட்டுவிட்டு போய் விட்டார்களே என்று அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. அன்போடு தான் இருந்தார். ஆனால் மனைவிக்கும் மகன்மாருக்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வு பிடுங்கித் தின்றது. அங்கிருந்து வந்த ஷெல் ஒன்று நேராக கஞ்சி நானாவின் கஞ்சி வண்டில் மீது விழுந்து வெடித்து சிதறி வண்டிலை சின்னாபின்னமாக்கியதுதான் அவரால் தாங்க முடியாமல் இருக்கிறது. அவரின் ஒரே மூலதனம் இரண்டு பானைகளும் பத்து பெரிய கிளாஸ்களும் ஒரு லாம்பெண்ணை அடுப்பும் அந்த வண்டிலும் தான்.
அந்த கஞ்சி வண்டில்தான் குடும்பத்துக்கே சோறு போடுகிறது. ஆனால் அது சிதைக்கப்பட்டது. அவருக்கு தாங்க முடியாமல் இருந்தது. அதைத் தவிர தான் தனிய யுத்தத்தின் நேரம் இருந்தது பற்றி கவலை இல்லை.
கென்டரில் வந்த பணக்காரர் போலியோ காலால் கெந்திக் கெந்தி வந்த கஞ்சி நானாவுக்கு இரண்டு பைகளும் இரண்டு என்வலப்பும் கொடுத்தார். யாருக்கும் அதில் கோபமோ ஆட்சேபனையோ இருக்கவில்லை.

************************

நஷ்டஈடு கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கழிசான் ஷேட் போட்டிருந்தவர்கள் கூட்டினார்கள். மௌத்தாப்போனவைக்கு பதினைந்தாயிரம் தருகிறோம் என்றார்கள் சபை குழம்பி விட்டது. பிறகு ஒரு லட்சம் என்றார்கள் பிறகு ஆட்களே வரவில்லை சும்மா இருந்த எங்கள் வாழ்வை அழித்துவிட்டார்கள்
ஒரு ரீ விக்காரர்கள் சந்தியில் வந்து ஊர் சனத்தைப் பிடித்து என்ன நடந்தது என்று கேட்கிறார்கள் என்ன நடந்தது என்ற ஒரு கேள்வி போதும் முழு கஷ்டத்தையும் சொல்லிக் கொண்டு போக “ஓதலுமில்லை படிப்புமில்லை எங்கடை உம்மாவும் வெளிநாட்டிலை. ஷெல் வந்து விழுந்து எங்கடை வீடெல்லாம் உடைஞ்சு போச்சு....” பன்னிரண்டு வயது பெண்பிள்ளை உடைந்து உடைந்து அழுகிறது. ரி.வி. மைக்கில்.
மூத்தம்மா கண்ணை இடுக்கி பார்த்துக் கொண்டு வருகிறா. அவவுக்கும் இருந்த ஒரு மனையும் அழிந்து போய்விட்டது.
எனது மனைவியை அவதான் வளர்த்தெடுத்தா. மனைவியின் உம்மாவும் வாப்பாவும் இறந்ததன் பின்பு மூத்தம்மாவின் பொறுப்பில் வலு பக்குவமாக மனைவி வளர்ந்தா. இப்பொழுது தான் வளர்த்த பிள்ளை ஷெல்லில் சிதறிவிட்டது.
அந்த கவலைலயை தீர்க்க முடியாமல் மூத்தம்மா அழுது திரிகின்றா. இரவில் படுக்கும் போதும் நித்திரையில் உழறுகின்றா. தூக்கம் வராமல் அழுது மாய்கின்றா மூத்தம்மா.
செழிப்பாய் இருந்த ஊருக்கு கண்ணூறு பட்டுப் போய்விட்டது போல எல்லாமே அழிபாடுகள் தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகிறது. மக்கள் பஸ்களில் இருந்து வந்து மூட்டை முடிச்சுகளோடு இறங்குகின்றனர். வரும் வழியெங்கும் புழுத்த மணம் மணக்கிறது.
மையத்துகள் தான் கிடக்கின்றனவோ அல்லது ஷெல்லடிபட்ட ஆடு மாடுகளின் நாற்றமோ தெரியாது. வாழ்விழந்து போனவர்கள் நோன்பை பிடித்துக் கொண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளுக்கு முன்னால் போய் நின்று கொண்டு கேவி கேவி அழுகின்றனர். குருவி சேகரிச்சது போல சேகரிச்சு கட்டிய வீடு அடிபட்டு உடைபட்டும் போய்கிடப்பதை எப்படித்தான் தாங்க முடியும்? எத்தனை பெண்கள பாலைவன வெயிலில் வறுபட்டு உழைத்த பணத்தில் கட்டிய வீடுகள் வீட்டுச் சாமான்கள் எல்லாம் அழிந்து போயின. பெண்கள் தான் அதிகமாக அழுதுக் கொண்டிருந்தனர். கிராம உத்தியோகத்தர் கையில் குறிப்பு புத்தகம் பேனாவோடு வந்து யார் யாரெல்லாம் தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள் என்று குறித்து பெயர்களையும் விலாசத்தையும் ஆட்களின் எண்ணிக்கையும் எழுதிக் கொண்டார். அவர் வெள்ளைசாரமும் வெள்ளை ஷேட்டும் வெள்ளை தொப்பியும் போட்டுக் கொண்டிருந்தார். ஹஜ்ஜூக்கு போய் வந்தவர் காசுக்காரர். அவரின் ஒரு தொகை நகையும் பணமும் களவு போய்விட்டதாக சொன்னார். ஊரில் இருந்த வங்கிகள் எல்லாம் துப்புரவு பண்ணப்பட்டிருந்தன.
நோன்பு காலத்தில் அலைந்து திரிய முடியவில்லை வெயில் கொழுத்தியது. சாப்பாடு கிடைப்பதே அருமையாக இருந்தது. தனவந்தர்கள் உதவி செய்தார்கள். ஸகாத் பணம் ஒரு தொகை வந்தது ஊருக்கு. அரபிகளிடம் அகதிகளுக்கு என்று இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் வாங்கிய பணத்தில் ஒரு கொஞ்சமும் ஊருக்கு வந்தது.

************************

இப்பொழுது ஜின்களின் சலசலப்பு ஊரில் இருப்பதாக ஜின் ஓட்டி காக்கா பேசிக் கொண்டது கேட்டது. முதல் என்றால் ஜின்கள் உப்புக்கடல் தாண்டி வர வலு பிரயத்தனப்பட்டது தானாம். ஆனால் இப்பொழுது ஜின்கள் ஷெல் அடிபட்ட பூமியில் வந்து குடும்பத்தோடு இருக்கின்றனவாம்.
மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் தூதுவராக நபிகளார் இருக்கிறார்கள். ஜின்களில் சூது வாதுள்ளவையும் இருக்கின்றன. அவைகள் இரவில் வந்து மரங்களை உலுப்புகின்றன. எப்பொழுதும் இரவில் ஆயத்துல் குர்ஸியை எல்லோரும் ஓதும்படி ஜின் ஓட்டி காக்கா சொன்னார். ஜின் பிடித்தால் போக்குவதற்கு சாமான் வாங்க வேண்டும் அதற்கு பணமுமில்லை பொருளுமில்லை. ஜின் ஓட்டி காக்கா நல்ல ஒரு செலவில்லாத வழியை காட்டித் தந்தார் அதுதான் ஆயத்தில் குர்ஸி (குர்ஆன் வசனம்)
இரவு ஜின்கள் பல வந்து தனது வீட்டுக்கு கல்லாலும் மண்ணாலும் எறிந்தனவாம். தான் அதுகளை வாலாயப்படுத்தி விட்டாராம் என்று கூறினார். சில ஜின்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததை தான் கண்டதாகவும் ஜின் ஓட்டி காக்கா சொன்னார்.
வாழ்க்கை இப்பொழுது மனிதன் ஜின் போலவும் ஜின் மனிதன் போலவும் இருந்தால் எப்படி இருக்கும் காபிர்களின் கண்களில் மறைந்து கொள்ளலாம் யாருக்கும் தெரியாமல் வாழலாம். ஆனால் குடும்பம் பிள்ளை குட்டி சாப்பாடு குடிப்பு என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எவ்வளவு வசதியாய் இருக்கும். துப்பாக்கி கொண்டு வருபவர்களை அடையாளம் காணலாம். கடத்திக் கொண்டு போக வரும் ‘சுது’ வாகனக்காரரை கண்டு கொள்ளலாம். உண்மையில் ஜின் வாழ்க்கையே மிகச் சிறந்தது இப்பொழுது எமது ஊரிலும் நாட்டிலும்.
ஜின்கள் வலு குழப்படி பண்ணுவதாக காக்கா சொன்னார். கொஞ்ச நாள் பாழடைந்து போன ஊருக்குள் இனி மனிதர்கள் வர மாட்டார்கள் என்று ஜின்கள் வந்து விட்டனவாக்கும். பல இடங்களில் ஷெல் அடிபட்ட செத்த மையத்துகளை புதைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு போய் விட்டோம். எல்லாமே சிதறிப் போய்விட்டன. பொதுவாக அகதியாகப் போகும் பொழுது மையத்தைப் பற்றி பார்க்க முடியாமல் தான் போனது. வாழ்வின் அவலங்களை சுமந்து கொண்டு ஊரைத் துறந்து போகும் பொழுது என்னத்தை செய்வது.
ஜின்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வாழுமாம். அவைகள் கூட ஒற்றுமையாக இருக்கும் என்றுதான் மதரஸாவில் ஓதும் போது ஹஸரத் சொல்லித் தந்தவர்.
ஜின்கள் அதிகமாக இரவில் தான் நடமாடுமாம். அவைகளின் மன நிலையை ஜின் ஓட்டி நானாவுக்கும் சரியாக தெரியாதாம். ஆனால் அவர்களில் தொழுகை நோன்பு, ஹஜ் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
குர்ஆனை திரிபுற ஓதிக் கற்றவர்களும் ஜின்களில் இருக்கிறார்களாம். ஆனால் அவை இப்பொழுது எமது ஊருக்குள் குடிகொண்டு பிராணனை வாங்குகின்றன.
தீய குணமுடைய ஜின்களால் தான் பிரச்சினை மனிதருக்கு. நல்லவர்களால் பிரச்சினை இல்லை. அவர்களிலும் தீய குணமுடையவர்கள் இருக்கிறார்கள்.

****************************

இன்னும் ஒரு கிழமை இருக்கிறது நோன்பு முடிய திங்கட்கிழமை பெருநாள். இது ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை. பொதுவாகவே இப்பொழுது ஜூம்மாத் தொழுகைக்கு மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியில் வீட்டில் இருந்து கொண்டு வரும் பாய்களை போட்டு தொழுவார்கள். ஜூம்மாத் தொழுகைக்கு நோன்பு காலங்களில் இவ்வளவு சனம் வரும். அவ்வளவு சனமும் இந்த ஊரில் தான் இருக்கின்றன ஆனால், சும்மா நேரங்களில் பள்ளி வாசலுக்கு மக்கள் வருவது மிகவும் குறைவு. அழிவு ஏற்பட்டதன் பின்பு அல்லாஹ்வின் பக்கம் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். அனேகமானவர்கள் நோன்பு நோற்கிறார்கள். அனேகமானவர்கள் தொழுகையில் ஈடுபடுகிறார்கள். முன்பு என்றால் நோன்பு காலங்கள் ஏதோ பெண்களுக்கு மட்டும் கடமையாக்கப்பட்டது போல இருக்கும். 8ஆண்கள் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. சிலர் நோன்பு காலங்களில் மதுகூட அருந்துகிறவர்கள் இருந்தார்கள். ஆனால் அழிவு மக்களை தெய்வத்தின்பால் திருப்பிவிட்டது. அழிவுகள் தான் பக்திக்கு மூலதனமாகவே இருக்கின்றன.
இது நூஹ் நபி ஈஸா, மூஸா, தாவூத் நபிகள் காலத்தில் இருந்தே இருக்கின்றன. இந்த வருஷம் தான் நிறைய பேர் எமது ஊரில் நோன்போடு திரிகின்றனர். வெயில் வறுத்து எடுக்கிறது.
பக்கீர் மார் சஹருக்கு எழுப்பியவுடன் ரபான் ஓசைக்கு சிறுவர்களும் பெரியவர்களும் எழும்பி விடுகின்றனர். நபிகளாரின் பெருமைகளை பைத்தாக பக்கீர்மார் ஓதுவார்கள் இரவில். சில பக்கீர்மாருக்கு ஒரே பாடல்கள் தான் தெரியும் சிலர் வருஷா வருஷம் பாடல்களை மாற்றுவார்கள். அவர்களுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே அமைந்திருக்கும் பொதுவாகவே றேடியோவில் பிரபல்யமான ஈ.எம். ஹனிபாவின் “அல்லாஹ்வை நாம் தொழுதால்.....” காயல்பட்டணம் ஷேக் மொஹமட்டின் “ஈச்சமரத்தில் இன்பச் சோலையில்.........” பாடலைப் பாட எல்லோரும் மறக்க மாட்டார்கள். ஆனால் பக்கிர் பாவாமார் இரவில் தூங்குவது இல்லை. இரவு இரண்டு மணிக்கு ரபான் ஓசை ஊரில் கேட்கும். அவ்வளவு நேரத்தோடு சஹர் செய்தால் பகல் முழுக்க கிடக்க ஏலுமே. ஆனால் பாவா ஊரெல்லாம் பாட்டுப்பாட வேண்டும். ஊரெல்லாம் எழுப்ப வேண்டும். அவரின் வேலை அவரோடு. எங்கள் வேலை எங்களோடு... வாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அல்லவா!
ஈஸா நபி நாற்பது நாள் நோன்பு நோற்றவராம். ஆனால் எங்களுக்கு முப்பது தான் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று மௌலவி கொத்துபாவில் சொன்னார்.
அழிவுகள் பற்றியும் அவை எல்லாம் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவது பற்றியும் மௌலவி பயான் செய்தார். இப்பொழுது எல்லாம் மௌலவியின் பயானுக்கிடையில் அழுகை அதிகமாக இருக்கிறது. ஷெல் வீச்சில் அவரது வீடு சேதமானது காரணமாய் இருக்கலாம். அல்லது அவரது உம்மா கொல்லப்பட்டது காரணமாய் இருக்கலாம். மௌலவி பிம்பரில் நின்று அழுதால் முன்னால் இருக்கும் பொதுமக்கள் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
எங்கள் ஒவ்வொருவரின் இழப்பின் மீதும் நாங்களும் விம்மி விம்மி அழுவோம். இழப்புகள் அழவைக்கின்றன. ஜூம்மா பிரசங்கங்கள் இப்பொழுது எல்லாம் கண்ணீரோடுதான் கலக்கின்றன. மௌலவி சொல்வார் “எல்லாம் அல்லாஹ்வின் சோதனை” என்று, அல்லாஹ்வின் சோதனை என்ன வடிவிலும் வருமாம்.
தண்ணீரில் அழிவு வந்தது. அதுவும் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்றாம். இந்த சுனாமி பேரழிவில் இருந்து நாம் மீண்டும் வரும் பொழுது திடீரென்று போர் அழிவு எம்மை சூழ்ந்து கொண்டது. எங்கு போவது? மௌலவி அழிவுகளின் பல வடுக்களை சொன்னார். இது கியாமத்து நாளுக்கு அண்மித்து விட்டதாக சொன்னார்.
உலக முடிவு நாளின் போது இப்படித் தானாம் செருப்பு அணியக்கூடிய வசதியில்லாதவன் ஆட்சியதிகாரத்துக்கு வருவானாம். பெண்கள் ஒட்டகத்திமில் போல கொண்டை கட்டுவார்களாம், முஸ்லிம்கள் சஹன் சாப்பிட அழைப்பது போல காபிர்கள் வாங்கோ வாங்கோ முஸ்லிம்களை அழிப்போம் என்று ஒன்றுகூடுவார்களாம். கொலையும் கொள்ளையும் விபச்சாரமும் ஊரில் அதிகரிக்குமாம். ஏமாற்று சுத்துமாத்து விளம்பரம் தேடுதல் எல்லாம் கூடுமாம். ஏன் கொலை செய்யப்படுகின்றான் என்று இறப்பவனுக்கும் ஏன் கொல்கிறோம் என்று கொல்பவனுக்கும் தெரியாதாம்.
ஏழைகள் திடீரென்று மாடி வீடுகள் கட்டுவார்களாம். பொழுது திடீரென்று போய்விடுமாம் இப்பொழுதான் காலை வந்தது போல இருக்குமாம் மாலை நேரம் வந்துவிடுமாம். பொழுதுகள் குறைந்து விடுமாம். காபிர்கள் அடர்ந்தேறுவார்களாம். பசி, பஞ்சம் தலைவிரித்தாடுமாம். அழிவின் போது கெட்டவர்களை அல்லாஹ் அழிப்பானாம். ஆனால் அதில் இருக்கும் நல்லவர்களும் இந்த அல்லாஹ்வின் அழிவுக்குள் மாட்டுப்பட்டு மாண்டு போவார்களாம். எனினும் கியாமத்து நாளில் அவர்கள் நல்லவர்களின் கூட்டத்தோடு எழுப்பப்படுவார்களாம். மௌலவி கியாமத் மறுமை நாள் பற்றியே அதிகமாக இப்பொழுது பயான் (பேச்சு) செய்வார். எப்போதும் அவரின் முகம் வெளிறிப்போய் இருக்கும். மறுமையை பயந்தவர் போலவே காணப்படுவர். மற்றவர்களுக்கு பயப்படும்படி சொல்லுவார். ஈஸா நபி வெகு விரைவில் வந்து விடுவார் என்றும் அவர் முஸ்லிம்களை காப்பாற்றுவார் என்றும் சொல்லுவார். ஈஸா நபிக்கும் காபிர்களுக்கும் யுத்தம் நடைபெறுவதை அழகாக ஹதீஸில் உள்ளது போல விபரிப்பார்.

********************************
நாளைக்கு எங்களுக்கு பெருநாள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து போய் இருக்கிறோம். எங்களைப் போலத்தான் தமிழ் மக்களும் அனாதையாய் அகதிகளாய் வாழ்வழிந்து போய் அகதி முகாம்களில் கிடந்துலைகிறார்கள். எனது நல்ல நண்பன் கௌரிதாசன் எங்கிருக்கிறான் என்று தேட வேண்டும். அவனைப் போய் சந்திக்க வேண்டும். ஒரு மாதமாக கௌரிதாசனைத் தெடுகிறேன்.
முதல் என்றால் பெருநாள் இப்படியா இருக்கும் புது உடுப்பு என்ன? தின் பண்டங்கள் என்ன? வாழ்வின் மகிழ்வுகள் என்ன? எல்லாம் இந்த முறை அழிந்து போய்விட்டது.
பக்கத்து தமிழ் ஊருக்குள் இருக்கும் கௌரிதாஸன் வீட்டு கொண்டாட்டங்களில் நாமும் எமது வீட்டு கொண்டாட்டங்களில் அவர்களும் ஒன்றாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இம்முறை கௌரிதாசன் இல்லாத பெருநாள் வீடு எங்களுடையது. பலகாரம் சுட கௌரிதாசனின் மனைவி ஷாந்தி இல்லை. என்னவோ போலிருக்கிறது வீடு. கண்ணுக்கு முன்னால் எல்லாம் அகதிகளாகவே இருக்கின்றனர். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இருந்த வாழ்வு உருக்குலைந்து போயுள்ளது. மழைக்காலம் நாங்கள் வீடுகளுக்கு வந்து விட்டோம் ஆனால் தமிழ் ஆட்கள் தான் இன்னும் மரங்களுக்கு கீழே இருக்கின்றனராம்.
இந்த மழையில் கைகுழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்கிறானோ நண்பன். மனது முழக்க கவலைதான் மிஞ்சிக்கிடக்கிறது. அவன் நல்லாய் இருக்க வேணும் என மனது எண்ணிக் கொள்கிறது.
நாளைக்கு பெருநாள் தொழுகை முடிய எனக்குக் கிடைத்த அரிசி சீனி கொஞ்சத்தையும் எடுத்துக் கொண்டு நண்பனிடம் போகவேண்டும்.
அல்லாஹ_ அக்பர்..... அல்லாஹ_ அக்பர்..... (அல்லாஹ்வே பெரியவன்) முஅத்தினார் இஷாவுக்கு பாங்கு சொல்கிறார்.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive