Sunday 17 May 2009

அஞ்சலி சு வில்வரத்தினம்

கவிஞர் சு. வில்வரத்தினம்
(1950 – 2006)
7.8.1950 இல் புங்குடுதீவு எனும் கிராமத்தில் பிறந்த கவிஞர் சு. வில்வரத்தினம் 2006.12.09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பில் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார். மரணிக்கும் போது அவருக்கு வயது 56.

வில்வரத்தினத்தின் வீட்டுக்கு போவதென்றால் எனது மகளுக்கும் மகனுக்கும் மிகவிருப்பம். அவரது திருகோணமலை மட்டிக்களி வீட்டுக்கு, திருகோணமலைக்கு போகும் நேரங்களில் நாம் போவோம்.

வீட்டு முற்றத்தில் கதிரையைப் போட்டு வேப்பமர நிழலில் உட்கார்ந்து அவரது அழகான குரலில் தனது இசைப்பாக்களை பாடும் பொழுது நாம் மகிழ்ந்து போவோம்.
இன்னும் எனது காதுக்குள் பூமியம்மா பூமியம்மா உன் புன்னகையை எங்கொளிச்சாய்?. நீசிரிக்க வயல்களெல்லாம் நீறுபூத்துக் கிடக்குதம்மா... என்று வில்வரத்தினம் பாடியது கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அகங்களும் முகம்களும் (1985), காலத்துயர் (1995), காற்றுவழிக்கிராமம் (1995), நெற்றிமண் (2000), என்ற தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
2000 வரை எழுதிய கவிதைகளையும் இணைத்து -உயிர்த்தெழும் காலத்திற்காக 2001 மே இல் வெளிவந்தது.
1970இல் ஜீவாவின் மல்லிகை சஞ்சிகையில் எழுதத் தொடங்கியவர் வில்வரத்தினம்.
1989ஆம் ஆண்டு அவரது வீடு எரியூட்டப்பட்ட போது பல கவிதைகள் எரிந்து சாம்பராகியுள்ளன. இதனை மிகவும் கவலையோடு தெரிவிப்பார்.
காற்றுவழிக்கிராமம் -தனது ஊரின் அழிவு தொடர்பான சோகமான வடுக்களை சுமந்து அவர் எழுதிய கவிதைகள். ஒவ்வொரு தமிழ் கிராமத்தையும் இராணுவம் அழித்துப் போட்டு போனபின்பு இப்படித்தான் இருக்கும்.
முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம் பாத்திங்களோடு தேய்படும் வளையல் ஒலி ஆச்சி, அப்பு, அம்மோயென அன்பொழுகும் குரல்கள் ஒன்றையுமே காணோம்! என வில்வரத்தினம் எழுதினார்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையே தீர்வு என்று இறுதிவரை சொன்னவர் அவர்.
முஸ்லிம் மக்கள் புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட போது,

''எப்படி முடிந்தது என்னால் - தொழுகை வடுப்பூத்த நெத்திப்பொட்டில் சுத்தியலால் ஓங்கி அடித்தது போல் \ அவர்களை பிறந்த மண்ணினின்றும் துரத்தி\ என்னை நானே காயப்படுத்திக் கொள்ள\ என்று ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக நின்று தானாக ஒலித்தவர்.

இறுதிவரை வாசிப்பை கைவிடாதவர், யர்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் தனது இரத்தத்தை தானமாக கொடுத்த போது கிடைத்த அரசு நிவாரணப் பணத்தில் சி.என் அண்ணாத்துரையின் ~ரங்கோன் ராதா முதலான நூல்களை வாங்கி வாசிக்கும் அளவுக்கு வாசிப்பின் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். வில்வரத்தினம் அவர் தான் எழுதிய எல்லா கவிதைகளையும் நினைவில் பதித்து வைத்திருந்தார். அவரின் ஞாபக சக்தியை எண்ணி வியந்து இருக்கின்றேன்.
மு.பொ.வின் ''மார்கழி குமரி'' நீலாவணனின் ''ஓவண்டிக்காரா''போன்ற பாடல்களை வில்வரத்தினம் பாடக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன் பல சந்தர்ப்பங்களில்.
இயக்கங்களாலும் இராணுவம், கடற்படையிலும் 18.10.1992இல் யாழ்ப்பாணத்தின் தீவுகள் சிறைப்பிக்கப்படுவதற்கு முதல் நாள் மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.
மறுநாள் காலை ஊருக்கு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் அவரும் சென்றார்.
ஆனால் இறுதிவரை அவரின் நம்பிக்கை கைகூடவில்லை. போர் எதிர்ப்பு பாடல்களிலும் கவிதைகளிலும் கருத்துக்களிலும் போராட்டச் சூழலின் எதிர் நல்விளைவுகளை கண்டார் சு. வில்வரத்தினம்.
36 வருடங்கள் ஓயாமல் எழுதிய கவிஞரின் பேனா உறங்கிவிட்டது.
ஆன்மீக நாட்டம் மீதூரப்பெற்றவர் சு. வில்வரத்தினம். தனது குருதேவராக ஸ்ரீ நந்த கோபாலகிரி அவர்களை வரித்துக் கொண்டவர். ''உயிர்த் தெழும் காலத்திற்காக''எனும் தனது பெரும் கவிதைத் தொகுப்பை தனது குருவுக்கு சமர்ப்பணம் செய்தார் இப்படி.

''உன்னைச் சரண் அடைந்தேன்
ஓம் குரு தேவா
உயிர்த் தெழுகின்ற காலத்திற்காக
என்னைத் தருவதெனினும்
இசைவேன் இஃது உனக்காக''

எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல நண்பராக, ஒரு சிறந்த கவிஞராக தனது மனைவிக்கு நல்ல கணவராக, ரட்ஷகிக்கும் சசி பவனுக்கும் மிக நல்ல அப்பாவாக வாழ்ந்த வில்வரத்தினம் இல்லாதது பெரும் துக்கமாகவும் கவலையாகவும இருக்கிறது எனது மனதில்.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive