Monday 4 May 2009

கென்டயினர் பயணம்

இளைய அப்துல்லாஹ்
இது நான் லண்டன் வந்த கதை

எதிலிருந்து ஆரம்பிப்பது? எங்கே தொடங்குவது? யாரிடம் சொல்ல முடியுமிதை? யார் ஆற்றுவார். பரவாயில்லை இது எழுத்திலாவது பதியப்படட்டும். குமுறிக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள் வெளியே சொல்ல முடியாத கதை. அல்லது வெளியே சொல்லத் தெரியாத கதை. அல்லது எழுதத் தெரியாத கதை. இங்கே வித்தியாசமான அனுபவம் ஒன்றுக்குள் உங்களை அழைத்துச் செல்லப்போகிறேன். உங்களில் ஒருவர் அகதியாக இருக்கலாம். அது அரசியல் அகதியா? அல்லது பொருளாதார அகதியா என்று நான் கேட்கப்போவதில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் ‘கென்டயினர் பயணம்” அல்லது ஆட்கடத்தல் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே.

ஒவ்வொரு தமிழனும் எப்படி யெல்லாம் பணம் கொடுத்து ஏஜன்டுகளிடம் அள்ளிக்கொடுத்து.... ஐரோப்பாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் போகிறார்கள். என்ற விடயத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். உயிரைக்கொடுத்து வாழ்க்கையைக் கொடுத்து செத்துப்போய் வருகிறான். உண்மையில் அரை உயிராகத்தான் அவன் வருகிறான். கண்ணால் கண்டேன். தமிழரைக் கண்டேன். நான் இதை எழுதுவது கட்டாயமானதாகும்.

எனக்கும் இந்த அனுபவம் வாய்த்தது. ஒல்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் வைத்து சொன்னார்கள். இந்த நாடுகளில் என்றால் மொழி படிக்க வேண்டும். இங்கிலாந்து போங்கள். மொழி லேசு. அகதிகளை ஏற்கிறார்கள். வேலையும் செய்யலாம். ஒரு ஏஜன்டைப் பிடித்து 3500 மார்க் கொடுத்து போக வேண்டும். இலங்கையில் இருந்து காசை வரவழைத்தாயிற்று. அனுப்புகிறோம், வாருங்கள், அழைப்பு வந்தது? எதுவுமே தெரியாது. வரச்சொன்னார்கள். போனோம். நானும் எனது நண்பனும். எப்படிக் கொண்டு போகிறார்கள்? யார் கொண்டு போகிறார்கள்.

ஹொலன்டில் என் நண்பன் எனக்கென்றவனாய் கிடைத்தான். நண்பனாய் ஹாமீம். முன்பின் அறிமுகமாகாமல் இப்படி அன்பாய் இருப்பதற்கும் பழகுவதற்கும் அவனைத்தான் முதன் முதலில் பார்த்தேன். நெக்குருகிப்போகிறது. அவனால் எப்படி முடிந்தது, இன்னும் எனக்குள்ளே எழும் கேள்வி. அவனைக் காணும் போதெல்லாம் அவனின் அந்த நல்ல மனம் என்னை உருகப்பண்ணிவிடும் இப்பொழுதும் ஏஜன்ட் தொடர்பான விடயங்களில் நண்பன் வலு சூரன். அவர்கள் தொடர்பான விடயங்களை வலு திறமாக அறிந்து வைத்திருக்கிறான். அவர்கள் தொடர்பான எல்லா விடயங்களும் அத்துப்படி எதுவுமே எனக்குத் தெரியாது வரச்சொன்னார்கள் போனோம். காரில் நண்பன் கொண்டு போனான் ஹொலன்டில் இருந்து பெல்ஜியம் கார்ப்பயணம் நன்றாக இருந்தது. இடையில் போடர் தாண்டும் போது யாரும் எதுவுமே கேட்கவில்லை. என்னிடமும் விசா இல்லை. பெல்ஜியத்தில் ஒரு வீட்டில் விட்டுவிட்டு நண்பன் பயணம் சொல்லி விட்டு போய்விட்டான். அந்த வீட்டில் இருக்கச் சொன்னார்கள் இருந்தேன். என்னோடு சேர்த்து நான்கு பேர் ஏற்கனவே இருந்தார்கள்.

தமிழர்கள்தானே. பாஷை புரிகிறதே. அது போதும். சமைத்தார்கள் சாப்பிட்டோம். அன்றிரவு பதினொரு மணிபோல ஒருவன் வந்து சொன்னான். வெளிக்கிடுங்கோ காரில் ஏற்றினான். கார் போகிறது புகை போல... ஒன்றரை மணித்தியாலம் மட்டில் கார்ப்பயணம் ஓரிடத்தில் நிப்பாட்டி இறங்கச் சொன்னான் இறங்கியாயிற்று. இறங்கி ஓடுங்கோ ஓடினோம் பற்றைக்குள் படுங்கோ படுத்தோம். அவன் போய் கென்டயினர் நிற்கும் இடங்களை அவதானித்தான்.

ஏதோ ஆமி காம்பை தகர்க்கும் பாணியில்-எல்லாம் சுழண்டு படுத்து அனுகூலம் பார்த்து ஒருவாறாக ஒரு றெக்ஸீன் கென்டயினரை அவிழ்த்து ஒவ்வொருத்தராய் வந்து ஏறுங்கோ உத்தரப்பிரகாரம் வந்து ஏறினோம். இங்கிலாந்து போவியள் இனி உங்கடை பாடுதான் சத்தம் போடாமல் இருக்க வேணும் இருங்கோ பக்குவமாய் வெளியில் கட்டினான் போய் விட்டான். நடுச்சாமம் படுக்கவேண்டும் நித்திரை வருகிறது.

என் மனைவியே! நான் ஐரோப்பா வரும் பொழுது ஏன் அப்படியெல்லாம் அழுதாய்? இரண்டு கிழமைகளாக என்னைக் கட்டிக்கொண்டு அழுதாயே? என்ன உனக்கெல்லாம் சகுனம் தெரிந்ததா என்ன? இப்படியெல்லாம் அகதிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று. பலகைத் தட்டு ஊத்தைக் கென்டயினர் படுக்க முடியவில்லை முதுகெலும்பு வலியெடு;த்தது. போக வேண்டும். ஆம் போகத்தான் வேண்டும். இங்கிலாந்துக்காவது. காலையில் கென்டயிரை எடுக்கிறான் சாரதி ஓடுகிறது அது. ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு மூன்று மணித்தியால ஓட்டம். திடீரென்று நிற்கிறது. றெக்ஸீன் சீற்றுக்குள்ளால் ஓட்டை போட்டு வெளியே பார்த்தான் வந்தவனில் ஒருத்தன். அதற்கிடையில் திடீரென்று நிற்பாட்டி விட்டு வந்து பின் கதவைத் திறந்தான் கென்டயினர் சாரதி அதிர்ச்சி அடைந்தான். இறங்கி ஓடுங்கோ ஆங்கிலத்தில் திட்டினான். ஓடினோம். எங்கே என்று தெரியாமல் ஓடினோம்


ஹை வேயால் ஓடினோம் பொலிஸ் பிடிப்பார்கள். சேர்ந்து ஓடினாலும் பிரச்சனை. பிரிந்து பிரிந்து இவ்விரண்டு பேராக ஓடி, ஒரு மாதிரி ஒரு சிறிய வங்கியைக் கண்டு பிடித்து காசு மாற்றினோம் கையிலிருந்தது பவுண்ட் கை நிறையத் தந்தார்கள் பெல்ஜியம் பணத்தை சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளை தான். ஆம் பெல்ஜியத்துக்குள்ளேதான் மனது சலித்தது. பொலிசுக்கு பயந்தோம். பிடித்தானென்றால் அந்த நாட்டுக்குள்ளேயே அகதியாய் அலைக்கழிப்பானே.

பயம்தான் ரயில் பிடித்து மீண்டும் முதல் நான் நின்ற அதே வீட்டுக்கு ஏஜன்டிடம் வந்து சேர்ந்தோம். இது ஒன்றும் புதினமில்லை ஏஜன்டுக்கு எனக்கு ஏதோ பெரிய பாடாக இருந்தது. சமைக்கச் சொன்னான் சமைத்தோம். சாப்பிடச் சொன்னான். சாப்பிட்டோம் அசதி மிகுதியால் படுத்துக் கிடந்தோம். நித்திரை வந்தது. முதல் நாள் செவ்வாய்கிழமை அன்றைக்கு புதன் நித்திரையில் வந்து எழுப்பினார்கள். அவசரமாய் கழிசானைப் போடுங்கோ! என்ன இழவு இது. கழசானுக்கு மேலால் கழிசான் ஷேட்டுக்கு மேலால் இன்னும் மூன்று ஷேட்டுகள் போட வேண்டாமா? அதுதான் பை ஒன்றும் கொண்டு போக விடமாட்டார்களே. வேறென்ன செய்கிறது அங்கை போய் வேறென்னத்தை போடுறது நான் இதனை எல்லாம் போடமுதல் நாலு பேரைக்கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.

அவர்கள் இங்கிலாந்து போய்ச்சேர்ந்து ‘குறைடன்’ அகதி முகாமில் அல்லல்படும் கதை தனி

பயணம் என்பது நரகத்தின் ஒரு துண்டு என ஒரு நபிமொழி சொல்கிறது. அனுபவத்தால் உணர்ந்தேன். எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள். என்னோடு காரில் இன்னும் மூன்று தமிழர்கள். தமிழர்களைத் தமிழர்கள் ஏமாற்றும் தமிழர் கதை இது. அவசரமாய் வரச்சொன்னார்கள். போனோம். கொண்டு போனார்கள். காரில் இரண்டு மணித்தியாலங்கள்வரை. காரின் பின் ஆசனத்தில் நான்கு பேரை அடைத்து ஏற்றி இறக்கினார்கள். கற்கள், முட்கள், செடிகள் ஊடாக சுமார் ஒரு மைல் தூரமளவிற்கு நடத்திக் கூட்டிக்கொண்டு போனாரகள். ஒரு துறைமுகம் வந்தது. கென்டயினர்கள் நிறைய நின்றன. ஆசுவாசமாய்ப் போய் ஒரு கென்டயினர் நாடாவை அவிழ்த்துவிட்டு உள்ளே ஏறும்படி சொன்னான் ஒருவன். ஏறினோம். அப்பாடா இதுவாவது லண்டன் போகுமா? அல்லது இங்கிலாந்தின் ஏதாவது ஒரு கரையையாவது தொட்டுப் பார்க்குமா? மனவலி, முதுகுவலி அப்பாடா! ஏறினால் உள்ளே எல்லாம் எழுதும் காகிதங்கள். அல்லது அச்சடிக்கும் வெள்ளைக்காகிதங்களின் பெரிய பெரிய கட்டுக்கள். எங்களில் வந்த ஒரு புத்திசாலி? சொன்னானாக்கும்.

இது லண்டன் தான் போகிறது சந்தேகமில்லை. எழுதும் காகிதம் அச்சடிக்கும் காகிதம் என்றால் லண்டனுக்குத் தானே போக வேண்டும். அட பாவி உனக்கு எங்கே இருந்து இந்த மூளை வந்ததடா? எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. படுத்தேன். சுகமாக இருந்தது. இலக்கியக்காரனுக்கு காகிதம் என்றால் அதன் மேல் படுத்தாலும் சுகம் வருமாக்கும் எனக்கு நித்திரை வரப்பார்க்கிறது. விடுகிறான்களில்லை. மற்றவன்கள் எழும்பு உன்ரை குறட்டை எங்களையும் சேர்த்து காட்டிக்கொடுத்து விடுமே பயப்பட்டார்கள்.

குந்திக்கொண்டு கோழித்தூக்கம் போடக்கூட விடுகிறார்களில்லைஅடேய் நான் ஒரு எழுத்தாளனடா! என்ரை கவிதைகளை, கதைகளை போட்டு அல்லது படித்து மற்றவர்கள் என்னை மதிக்கிறார்களடா! நான் ஒரு அறிவிப்பாளரும் கூட எடா! என்னை எப்படியெல்லாம் எல்லா இடங்களிலும் கவனித்தார்களடா! எழுத்தாளரும் மயிரும் இப்ப நீ குறட்டை விடக்கூடாது சத்தம் போட்டுப்பேசக்கூடாது. என்னண்டாலும் நீ எங்களின்ரை கென்ரயினர் கூட்டாளி. நாங்கள் சொல்லுறதை மட்டும் நீ இப்ப கேட்க வேண்டும். கென்டயினரில் போறதுக்கொண்டு சில வழிமுறைகள் இருக்கு. சத்தம் போடக்கூடாது மூத்திரம் பெய்யக்கூடாது. கக்கூசுக்கு போகக்கூடாது குறட்டை விடக்கூடாது... இப்படி.. இப்படி... அப்படியா! கட்டுண்டேன். வழிப்படத்தானே வேண்டும். வழிப்பட்டேன் காலையில் கென்டயினரை பூட்டிக்கொண்டு துறைமுகத்தை விட்டு வெளியில் எடுக்கிறான் சாரதி.

இதாவது போகட்டுமே இங்கிலாந்துக்கு ஒருவன் நெஞ்சை இடம்புறம் வலப்புறமாகத் தொட்டு சிலுவை யேசுவை பிரார்த்தித்கொண்டார் மற்றைய இருவரும் கைகளைத் தலைக்குமேல் தூக்கி கும்பிட்டுக்கொண்டார்கள் என்னாகுமோ, எத்தனை நாளாகுமோ? கென்டயினர் துறைமுக செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே ஓடுவது தெரிகிறது. எண்ணி அரை மணித்தியாலத்துக்குள் கென்டயினரை நிப்பாட்டி விட்டு சாரதி வந்து பின் கதவைத் திறக்கிறான். திறப்பது தெரிந்தது, ஏறி எட்டிப் பார்த்தான். நாங்கள் நால்வரும் படுத்துக்கொண்டிருந்தோம் சாரதி எங்களைக் கண்டுவிட்டான். எங்களில் ஒருவன் எழும்பி சாரதியை கும்பிட்டான். அவனுக்கெங்கே கும்பிடு விளங்கப்போகிறது? எழும்பி மெதுவாக நடந்து வந்தோம். கென்டயினர் அவ்வளவு நீளம். சாரதி சிரித்தான். அவனை இப்பூவுலகில் நல்லவனாகப் படைத்தவன் எனனே அவனுக்கு நயம்மிகு நன்றிகள்.


''எங்கே போகிறீர்கள் கேட்டான் சாரதி''

''லண்டனுக்கு''

''எல்லோரும் அப்படியே இருங்கள்''

என்று விட்டு பின்பக்கம் காகிதக்கட்டில் வைக்கப்பட்டிருந்த அவனுக்கான கடிதத்தை எடுத்து தான் போகவேண்டிய விலாசத்தை பார்த்தான். நான் பிரான்ஸ் போகிறேன் தேவையென்றால் அங்கு கொண்டுபோய் விடட்டுமா? ஆங்கிலத்தில் கேட்டான் அவன். ‘எங்களை இந்த இடத்தில் இறக்கி விடு ராசா’ நான் சொன்னேன்''இந்த இடம் ஆபத்து உங்களை பொலிஸ் பிடிக்கும் அப்படியே இருங்கள் பாதுகாப்பான இடத்தில் விடுகிறேன். யார் கண்ணிலும் படாமல் போய்த் தப்புங்கள்.

என்ன ராசி இது? இவனும் மகா நல்லவன். உலகத்திலே உள்ள நல்ல கென்டயினர் சாரதிகளில் இவனும் ஒருவனே! நல்ல சாரதிகளே நீவிர் வாழ்க. ஒரு நிலக்கரிச் சுரங்கம் அல்லது நிலக்கரி உலை. அதனண்மையில் எங்களை இறக்கிவிட்டு கைலாகு கொடுத்து போகச் சொன்னான். தேடிப்போய் நடையாய் நடந்து. ஒரு கடை கண்டுபிடித்து கடைக்காரனிடம் அடிமாட்டு விலைக்கு ஸ்ரேலிங் பவுண் மாத்தி பசிக்கும் தாகத்திற்குமாய் கோலா குடித்துவிட்டு ரயில் நிலையம் தேடி பணம் மாற்றி பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு அந்த ஏஜன்டின் வீட்டுக்கு வந்தடைந்தோம். இரண்டாவது பயணமும் பாழ்.

மீண்டும் பெல்ஜியத்துக்குள்ளேதான். எல்லாக் கனவுகளுக்கும் மண். பேசாமல் ஊரில் இருந்திருக்கலாம். ஏனிந்த இங்கிலாந்து? அகதிகளுக்கு அங்கு என்ன சொர்க்கமா தரப்போகிறார்கள்? முதுகுவலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டுகளுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. பசியாலும் தாகத்தாலும் வலுவிழந்து போனேன். கென்டயினர் பயணம் என்றால் என்ன லேசானதா? இருபத்தொருபேர் ஒரு முறை மாதக்கணக்காக பயணம் செய்யும் கப்பல் கென்டயினர் ஒன்றிலிருந்து ஒன்றாகவே செத்துப்போனார்கள். கேள்விப்பட்டோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் கணவர் கென்டயினரில் போய் இன்னும் வரவேயில்லை. செத்துப்போனாரா இருக்கிறாரா-இன்னும் தெரியமால் பன்னிரண்டு ஆண்டுகள் என் கண் முன்னாலேயே காத்திருக்கிறாள். அவளுக்கு யார் ஆறுதல் சொல்லித் தேற்றுவார். பாவம் அவள். இரண்டு பிள்ளைகளோடு இது எல்லாம் கதைகளில்லை. தினம் நடைபெறும் உண்மையான கண்ணீர் அவலங்கள்.

ஓ கவிஞர்களே! சர்வதேசப் பிரபலங்களே! ஒரு முறையாவது அனுபவித்துப்பாருங்கள். பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பீர்கள். ஒவ்வொரு தமிழனும் வேதனைப்படுகிறான் சமாதானத்தின் காவலர்களே சொல்லுங்கள்! இன்னும் சில காலங்களுக்குள் இலங்iயை குட்டி சோமாலியாவாக்க பிரயத்தனப்படும் யுத்தப் பிசாசுகளே! உங்களுக்கெங்கே தெரியும் இந்த வேதனைகள? பெல்ஜியம் ஏஜென்ட் வீட்டில் வைத்து வழமையான சாப்பாடு பின் அசதி மிகுந்த தூக்கம். 24 மணித்திலாத்துக்கொரு தடவையாவது சோறு தின்ன கிடைத்த பாக்கியத்தை எண்ணினேன். வியாழன் மூன்றாவது நாளிது. வழமைமாதிரி இரவு 11 மணிபோல் வந்து எழுப்பினார்கள். நாங்கள் நான்கு பேரும் உடுப்புகள் போட்டு தயாராக இருந்தோம். வாரிச் சுருட்டிக்கொண்டு எழும்பி ஓடினோம். வழமையாக அல்லாமல் கார் ஓடிக்கொண்டே இருக்கிறது. எங்கே போகிறதோ? அட எனக்கு பரிச்சமான இடம் வருகிறதே! அம்ஸ்ரடம்.

பின்னர் றொட்டம்.... ஆ... இது ஒல்லாந்து ஓடிய காரிலிருந்து வேறொரு காருக்கு மாற்றப்படுகிறோம். ஓடி.. ஓடி.. உலகப் பிரசித்தி பெற்ற துறைமுகத்துக்கு அருகில் கொண்டு வந்துவிட்டார்கள். ஏதோ ஒரு பெரிய அதிரடிப்பாணியில் எங்களுக்கு பயிற்சி தரப்பட்டது. தமிழ் ஏஜன்ட் ஒரு துருக்கி காரனுக்கு பொறுப்பு கொடுத்திருந்தான். கீழே மா கடல். கப்பல்கள் நிற்கின்றன. மேலே கம்பிவேலி. அப்பால் கென்டயினர்கள் அடுக்கி நிற்கின்றன. சரிவாய்க் கட்டிய சீமெந்துப்பாதையில் குனிந்து கொண்டு அரை மைல் தூரம் நடக்க வேண்டும். பின்னர் மேலேயும் ஒரு கம்பி கீழேயும் ஒரு கம்பி, சுமார் 20 மீட்டர் வரையில் கம்பியில் நடக்க வேண்டும். தவறி விழுந்தால் கீழே ஆழ்கடல் அவ்வளவுதான் யாரும் காப்பாற்றமாட்டார்கள். கடலில் மூழ்கி செத்துப்போக வேண்டும். இப்படி ஆபத்துக்கள் தாண்டி வந்தால். ஒரு புறம் எங்களுக்கு நல்ல காலம். மறுபுறம் ஏஜண்டுக்கு இலங்கை பணப் பெறுமதிப்படி தலைக்கு ஒரு லட்சத்து பதினேளாயிரத்து ஐநூறு ரூபாய் தேறுகிறது. இது 1998 ஆம் ஆண்டுக்கணக்கு. எட்டிப் பார்த்தான். எங்களை அழைத்து வந்தவன். துறைமுக செக்கியூரிட்டி எங்கே போனான்? அவனின் அறை மட்டும் திறந்திருக்கிறது. ஆளில்லை. ஒண்டுக்கு இரண்டுக்கு போயிருப்பானாக்கும். வெள்ளைக்காரனே! உன் கண்ணில்கூட விரலைவிட்டு ஆட்ட எப்படிப் பழகிக்கொண்டான் என்னவன். வேலி ஏறிக் குதித்து ஒரு கென்டயினர் அருகில் உயிரைக் கொடுத்து வந்து சேர்ந்தாயிற்று.

கூட்டி வந்தவன் எல்லோரையும் அதன் கீழே படுக்கச் சொன்னான். பின்னர் கென்டயினரை சுற்றிக் கட்டியிருந்த பெரிய நாடாவை கழட்டி ஏறச் சொன்னான். ஏறினோம். அப்படி ஏறுவது மற்றும் ஏற்றுவது சட்டப்படி குற்றமாமே எங்கள் நால்வரோடு சேர்த்து ஒரு அல்பானியன். இன்னுமொரு பாகிஸ்தானியன் மொத்தமாக ஆறு பேர். உள்ளே ஏறினால் கென்டயினரில் கொக்கோகோலா ரின்களை பெட்டி பெட்டியாக நிரப்பி அடுக்கி இந்தார்கள். ஒரு மணித்தியாலமளவில் லண்டன் போவீர்கள். சொல்லி விட்டு கென்டயினரை முதல் இருந்தது போல கட்டிவிட்டு அவன் போய்விட்டான். இருக்க இடமில்லை.

கிடைத்த சில இடைவெளிகளைப் பகிர்ந்து கொண்டு இடுப்பெலும்பு நோக நோக இருந்தோம் பசித்தது. உணவில்லை. தாகித்தது. கொக்கோ கோலாவை ஏற்றியனுப்பிய முதலாளியே! அல்லது நிறுவனமே! எங்களை மன்னித்து விடுங்கள். குடித்து குடித்தே தாகம் தீர்த்தோம் இரவும் பின்னரொரு பகலும். அடுத்த நாள் பகல் 12 மணியளவில் கென்டயினரை எடுத்து கப்பலில் ஏற்றுவது தெரிந்தது அதென்ன அப்படிச் சத்தம். இடி இடியென... கப்பல் எப்படி இருக்கும் எங்களுக்கெல்லாம் இருட்டு மட்டும் தான் துணை. என்னது ஒரு மணித்தியாலமா? கப்பலே எங்கு போகிறாய். எண்ணிக்கை தவறாமல் 13 மணித்தியாலங்கள் போகிறது கப்பல். இதென்ன இங்கிலாந்தைச் சுற்றி கடல் ஊர்வலமா? அதில் ஒருவன் சொன்னான் ‘கொக்கோகோலா’வை ஏற்றிக்கொண்டு கப்பல் என்ன சவூதிக்கா போகிறது? ஆருக்கு தெரியும் மாலுமிகளே! உங்களுக்கு தெரியுமா! இங்கு ஆறு உயிர்கள் ஆலாய்ப் பறப்பதை? ஒருவாறாக கப்பல் ஒரு துறைமுகத்தை அருகணைப்பது விளங்குகிறது நங்கூரம் இறக்கப்படுகிறதோ என்னவோ! சத்தம் கர்ணகடூரமாக.... எங்கே நிற்கிறோம். தெரியவேயில்லை. கென்டயினரை ஒருவாறாகக்கொண்டு வந்து துறைமுகக் கரையில் நிப்பாட்டினார்கள். நேரம் அதிகாலை 3.15 காததிருந்தோம் வெளியில் எடுக்கும் வரை. பகலாச்சு. மற்றக் கென்டயினர்களை வாகனம் வந்து கொண்டு போகிறது தெரிகிறது நாங்கள் இருக்கிறோம் இருக்கிறோம். இருந்து கொண்டே இருக்கிறோம். எடுக்கிறார்களில்லை. மனம் சலித்துவிட்டது. பசியைப் போக்க எந்தக் கோலாவால் முடியும்? பொறுமையிழந்து அந்தப் புத்தி அல்பானியனுக்கு வந்தது. றெக்ஸீன் சீலையை வெட்டி இறங்குவோம் என்றான்

சரியென்றோம். அல்பானியனும் பாகிஸ்தானியனும் முதலில் இறஙகிப் போய் விட்டார்கள். தமிழர்கள் நாம் நால்வரும் இறங்குகிறோம். முதலில் போனவர்கள் இரண்டு பேர் பொலிஸில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். துறைமுக கமரா எங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது. அல்பானியன் பிடிபட்டது. பின்னர் தெரியவந்தது. பாகிஸ்தானியன் எங்கேயோ வெளியில் ஓடித் தப்பிவிட்டான். பிடிபடவேயில்லை. சரி, கமராக்கண்ணில் மண்ணைத் தூவி விட்ட பாகிஸ்தானியனே! நீ யாவது எங்காவது போ! போய் நல்லாய் இரு! அட.. இங்கிலாந்தின் ஒரு மூலைக்கு வந்து விட்டோமையா!

இன்று திகதி 07-08-1998வெள்ளைக்காரனுக்கு வணக்கம்!இன்முகத்துடன் வரவேற்க உனக்குத் தெரிகிறது. அதென்ன துறைமுகத்தை சுற்றி ஜீப்பில் எங்களை வைத்து ஊர்வலமா போகிறாய்! “வாருங்கள் ஆஹா என்ன வரவேற்பு?” “என்ன வேண்டும் உங்களுக்கு?” “அகதி அந்தஸ்த்து தா!” “அதனை தீர்மானிக்க வேண்டியது அதிகாரிகள்” “உங்களுக்கு பசிக்கிறதா?” “ஆமாம் கடும் பசி, கொண்டு வா! வெள்ளைக்காரனே!”மணக்க மணக்க கோழித்தொடை, உருளைக்கிழங்கு துண்டுகள், இன்னும் சிப்ஸ் அட சனியனே மீண்டும் கோலா சரி தா! மிளகுப்பொடி, உப்புப்பொடி யார் பெத்த மகனோ?யார் வீட்டுப் பணமோ? நன்றியடா! நன்றி. எங்கள் தாய் பூமியை வைத்து 150 வருடங்களாக வளங்களை சுரண்டி எடுத்து நாசமாக்கினாயே! அதற்கான நன்றிக்கடனா? அல்லது வேறென்ன? அட எங்கள் அயல்தேசத்து விலைமதிக்க முடியா கோகினூர் வைரத்தை வைத்திருக்கின்றாயே அதற்காகவா?

அகதிகளுக்கான சம்பிருதாயமான புகைப்படம், கைவிரலடையாளம், கேள்விகள் முடிந்தாயிற்று. போங்கள் எங்காவது இங்கிலாந்தில் வாழுங்கள், பின்னரழைப்போம் அகதிகளே! அனுபவ வேதனைகளை பகிர்ந்தாயிற்று போக்கிடம் தேடி இப்படித்தானே எம்மக்கள் அலைகின்றனர் வாழ்வின் அந்திமங்களிலாவது தாயகமே அமைதி பெறமாட்டாயா? எங்கே அந்த ஆயுத வியாபாரிகள்? தீர்வுப்பொதிக்காரர்கள் யுத்தப்பிரியர்கள். இவர்களைத் தாண்டிக்கொண்டு எந்த ஆண்டில் எம்தாயகம் நோக்கிய பயணப்பாடு அமையப் போகிறது?

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive