Tuesday 12 May 2009

கண்ணீரை தின்பவர்கள்


கண்ணீரைச் தின்பவர்கள்
பிரேதங்களை அடுக்கி வைத்துவிட்டு பிரேதங்களுடனேயே வாழ்கிறார்கள் என்னுடைய மக்கள்.வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் வெறும் ஒரு நூல் இடைவெளியில் தான் எனது மக்கள் வன்னியில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். வாழ்வு தொடர்பான அனுபவத்துக்கு அப்பால்மரணம் தொடர்பாகவே இரவு பகலாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மரணம் அவ்வளவு நெருக்கமாக ஒவ்வொரு நொடியில் உரசிக் கொண்டு போகிறது.

பால்மா வாங்க நின்றவர்கள், கஞ்சி கடாரத்துக்கு முன்னால் வரிசையாக நின்றவர்கள், மரத்துக்கு கீழே இருந்தவர்கள், வைத்தியசாலையில் படுத்திருந்தவர்கள், போனவர்கள், வந்தவர்கள், கர்ப்பிணிகள், குஞ்சு குருமான்கள் என்று எல்லோரையும் மரணம் அள்ளிக் கொண்டு போகிறது. தினம் தினம் மரணம் மட்டும் தான்.
தாகத்தால் மரணித்தவர்கள், பட்டினியால் மரணித்தவர்கள், நோயால் மரணித்தவர்கள், அதிர்ச்சியால் மரணித்தவர்கள், கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் சிசு கூட கொல்லப்பட்டு கிடக்கிறது.

எமது உயிரான கண்களுக்கு முன்னால் வன்னியில் மக்கள் தினம் தினம் அடித்து கொல்லப்படுகின்றனர். கால்கள் இரண்டும் முழங்காலோடு பிய்ந்து போன சிதைந்து போன இரத்தமும் சதையுமாக தொங்குகின்ற இளைஞர்களின், பெண்களின், ஆண்களின் சிறுவர்களின் உடலங்களை பார்த்து பார்த்து எனக்கு மன அழுத்தம் உண்டாகிவிட்டது. என்னைப் போல இன்னும் எத்தனையோ பேருக்கு அப்படித்தான் இருக்கிறது.

நீங்கள் இலங்கையில் இருந்து கொண்டு பார்க்க தடுக்கப்பட்ட பல காட்சிகள் இங்கே லண்டனில் அடுத்த நாளே பார்க்கிறோம். இதயத்தை கசக்கி பிழிகிற காட்சிகள் அவை. காசாவில் நடந்ததை உங்களுக்கு டி.வி.யில் பார்க்கக்கூடியதாக செய்திகள் இருந்திருக்கும். ஆனால் வன்னியில் நடப்பதை கொழும்பில் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறீர்கள். நாங்கள் பார்க்கிறோம்.
ஒரு முள்ளு குத்தி விட்டாலோ அல்லது ஒரு கல்லடிபட்டாலோ என்னவாய் துடித்து போகிறோம். உயிரோடு இருக்கும் மனிதரின் முழங்காலில் சிதைந்து போன பிய்ந்து போன தசைகளை மாட்டிறைச்சியை கத்தியால் வெட்டுவது போல வெட்டி எடுத்து மிகுதி காலை வீல்புறோவில் போட்டு குப்பையோடு குப்பையாக எடுத்து போகிறார்கள். என்ன கொடூரம் இது தமிழனுக்கு.
கஞ்சியை மட்டும் காய்ச்சி குடிக்கிறார்கள். நல்ல தண்ணீர் கிடைக்காத உப்புக் கடலோரம் ஒரு லட்சம் பேர் வறண்டு போய் கிடக்கின்றனர்.
எல்லோரும் இந்த மக்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறோம். கூட்டம் கூட்டமாக கொத்து கொத்தாக பிரேதங்களை தான் வன்னி மண் ஒவ்வொரு நாளும் கண்டு கொண்டு இருக்கிறது.

அங்கிருந்து உயிர் தப்பி போகலாம் என்று இந்தியாவுக்கு அண்மையில் போன 21 பேரில் வழி மாறி ஆந்திராவுக்கு போய் அடைந்திருக்கிறார்கள் 11 பேர். 10 பேர் போன வழியில் கடலுக்குள் சாப்பாடில்லாமல் செத்துப் போய்விட்டார்கள் என்று செத்துப் போனவர்களை தனது கையால் ஒவ்வொருவராக கடலில் போட்டு விட்டு வந்த இளைஞர் சொல்கிறார்.
பசியில் கதறி கதறி செத்துப் போனார்கள் அவர்கள் என்று அவர் சொன்னார்.
வன்னியில் காயம்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் ஏதுமில்லை என்று முள்ளிவாய்க்கால் வைத்தியர் சண்முகராஜா சொல்கிறார்.


புண்ணை சுத்தமாக கழுவுவதற்கு ஒரு வகையான தொற்று நீக்கிகளும் இல்லை புண்கள் எல்லாம் சீழ் பிடித்து முழு உடம்பும் கிருமி தொற்றாகி இறந்து போகிறார்கள். கர்ப்பிணிகள் வயிற்றில் குழந்தைகளோடு செத்து போய்கிடக்கிறார்கள். பிரேதங்கள் அடக்கம் செய்ய முடியாமல் வீதிகளில் கிடக்கின்றன. அவை அழுகி மணக்கின்றன. உயிரோடு இருப்பவர்களின் காயங்கள் அழுகி மணக்கின்றன. கற்பனை செய்து பாருங்கள் இந்த நூற்றாண்டில் ஒரு மனித கூட்டம் கண்ணுக்கு முன்னால் செத்து போய்க் கொண்டிருக்கிறது எனது மண்ணில்.
வன்னிக்குள் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்காக பரிதாபப்படும் சர்வதேசம் அந்த மக்களுக்கான எதிர்காலத்திற்காக என்ன செய்யப் போகிறது?
தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரித்தானியாவிலும் ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா என்று தொடர் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசாங்கம் தனக்கு ஒரு உறுதிமொழி வழங்கியது என்று 24ஆவது நாள் சைமன் ஹியூஸ் எம்.பி. பழரசம் கொடுக்க குடித்து முடித்து விட்டு சொன்னார். ஆனால் அவரின் தியாகம் அளப்பரியது. ஒருநாள் விரதம் இருக்கவே ஆலாய் பறக்கும் ஆட்கள் மத்தியில் தொடர்ச்சியாக அகிம்சை முறையில் இப்போதைய அரசாங்கங்களை அடிபணிய வைக்கலாம் என்ற துணிவு அசாத்திய துணிவுதான்.

ஆனால் பிரித்தானிய அரசாங்கம் என்ன சொன்னது தமிழர்களை காப்பாற்றுமா? இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமா? அல்லது என்ன இழவைத்தான் சொன்னது? என்று வாய் திறக்கிறார் இல்லை பரமேஸ்வரன்.
ஆனால் உண்ணாவிரதத்துக்கு பலன் கிடைத்து விட்டது என்கிறார்.

இப்பொழுது இங்கு லண்டனில் இன்னும் நான்கு இளைஞர்கள் சாகும் வரையில் சாப்பிடமாமல் இருக்கப் போகிறோம் என்று பரமேஸ்வரன் மாதிரி மே முதலாம் திகதியில் இருந்து ஆரம்பித்து இருக்கின்றனர். இப்பொழுது உண்ணாவிரதங்களுக்கு அப்பால் மக்களின் மரணங்களை எவ்வாறு தடுக்க முடியும் என்பது தான் பாரிய பிரச்சினையாகிவிட்டது. பிரபாகரனை பிடிக்கும் வரை யுத்தம் நடைபெறும் என்று கோதாபய, மகிந்த, கெஹலிய, அனுர பிரியதர்சன யாப்பா, ரத்னசிறி என்று எல்லோருக்குமே ஒருமித்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

யுத்த நிறுத்தம் என்பது ஒரு தற்கொலைக்கு சமம் என்று இராணுவம் எண்ணுகிறது. ஆனால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருக்கும் லட்சம் மக்களின் நிலைமை என்ன? நினைக்கும் போதே தலை வெடிக்கிறது.
உண்மையில் பிரபாகரனை பிடித்து அல்லது பொட்டு அம்மானை பிடித்து இந்தியாவிடம் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருக்கிறார். கொடுத்தால் அதற்கு பிறகு யுத்தம் என்று ஒன்று இல்லாமலே ஆகி விடுமா? பிரபாகரன் பிடிபட்டால் பிறகு யுத்தம் முடிந்து விட்டது என்று அரசாங்கம் அறிவித்தல் விடுமா? என்ற கேள்விகளுக்கு யாராலும் ஆம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு சிக்கல் எங்களுக்கு முன்னால் இருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்கள் இந்த அகதி முகாம்களில் இருந்து தத்தளிப்பது. இப்பொழுது தரம் பிரிக்கும் நடவடிக்கை இடம் பெறுகிறது. எதிர்காலம் மிகவும் அச்சம் மிகுந்ததாக இருக்கிறது. அது மாபெரிய இருண்டகாலமாகவே கண் முன்னால் விரிந்து போய் கிடக்கிறது.

இலங்கை என்ற ஜனநாயக நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையும் நாட்டில் எந்த இடத்துக்கும் போகலாம், வரலாம், சொத்து வாங்கலாம், விற்கலாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமற்றுப் போய் வன்மம் வேரூன்றி அதனை அறுக்க முடியாமல் இருக்கிறது.
அமெரிக்கா சொல்கிறது இராணுவ தீர்வு இன்னும் தமிழர் சிங்களவர் ஒற்றுமையை பாதிக்கும் என்று.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஜப்பான், இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகள் இலங்கையில் இராணுவ தீர்வு தான் சரி என்கின்றன.
எது சரி, எது பிழை என்று அவர்கள் வாதாடிக் கொண்டிருக்க ஒன்றும் அறியாத அப்பாவிகள் தினம் தினம் நூற்றுக் கணக்கில் மிருகங்களை போல போன போன இடத்தில் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலக மகா ஜனங்களே! இறக்கும் மனித உயிர்களை காப்பாற்றுங்கள்! உடல் ஊனமுற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு மருந்து கொண்டு வாருங்கள்! பசியோடு இருக்கும் அந்த மக்களுக்கு ஒரு வயிற்றுக்கு சோறு போடுங்கள்! தயவு செய்து உங்கள் எல்லா அரசியலையும் புறத்தே வைத்துவிட்டு.

2 comments:

காலம் said...

எல்லா விடயங்களுக்கும் ஆம் என்றோ இல்லை
சொல்லா ஏலாத துயத்தை பார்கிலும் உலகத்தில் வேறு கொடுமை இல்லை

இளைய அப்துல்லாஹ் said...

உண்மைதான் நண்ப மனதால் அழுது கொண்டே இருக்கிறோம்

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive